வளவ. துரையன் எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள் | இலவு காத்த கிளி | இலையின் சொல் | கனவுகளுடன் வாழ்பவன் | பேசும் புத்தகங்கள் | பார்த்தினீயம்

வளவ. துரையன் எழுதிய ஐந்து கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள்

1. இலவு காத்த கிளி

எதிர்வீட்டு அம்மா வந்து
எங்க வீட்டுத் தோட்டத்தில்
காய்த்ததென்று இருபது
கத்தரிக்காய்கள் தருவார்.

பக்கத்து வீட்டுப் பாட்டி வந்து
பல்வலி சரியாயிடுத்தா
கிராம்பை அடக்கு என்பார்.

அடுத்த வீட்டு அம்புஜம்
ஆறேழு கதைகள் சொல்லிப்
பொழுது போக வழிகள் செய்வார்.

இங்கோ
எல்லாக் கதவுகளும்
திறக்க மாட்டேனென்று
மௌனியாகி விட்டன.

ஆனால் உள்ளே
வாயில்லாப் பெட்டி ஒன்றின்
உரத்த கூக்குரல் எப்பொழுதும்

காலையில் பறந்துபோய்
மாலையில் கூட்டுக்கு வரும்
பறவைகளாக
மகனும் மருமகளும்.

நானிங்கோர் இலவுகாத்த கிளி.

*************************************************

2. இலையின் சொல்

மரத்திலிருந்து அதோ
பழுத்த இலை ஒன்று
பறந்து கீழே வருகிறது.

அது என்ன சொல்கிறது

காற்றடித்தால் மரத்தில்
என் உறவுகளுடன்
சலசலவென்று
பேசிக்கொண்டிருப்பேன்.

நானிம்மரத்திற்கு
உணவு சமைக்க
நல்ல பச்சையம் தருவேன்.

மழை நீரைச் சேமித்து
வேர்களுக்கு ஊட்டுவேன்.

நானிருந்தால் காயும்
நற்கனியும் உண்டாகும்.

மரத்துப் போன மாடானபின்
அழுது புலம்பி என்ன பயன்?

முதியோர் வாழும்
மண் எனும் இல்லம் சென்று
மட்கி உரமாவேன்.

********************************************

3.கனவுகளுடன் வாழ்பவன்.

நான் கனவுகளுடன்
வாழ்கிறேன்.

அங்கே நான் மட்டும்
பேசுவேன் சிரிப்பேன்

நான்தான் அங்கே அரசன்
என் அரியணைக்குப்
போட்டி போட்டுப் பிடிக்க
யாருமெ இல்லை.

அங்கு நான் எப்பொழுதும்
அன்பு காட்டினால்
அதுவே திரும்பிவரும்
துரோகம் வராது.

அங்கு சில நேரங்களில்
பேய்களும் பிசாசுகளும்
வந்தாலும் அவை
சாந்தமாய் உரையாடும்.

அந்த உலகத்தில்
தைரியமாய் யாரையும்
நம்பிப் பழகலாம்
அடுத்துக் கெடுக்கும்
அசிங்கம் கிடையாதங்கே

அங்கு யாரையாவது
அழைத்துப் போனால்
அதையும் கெடுத்து விடுவர்.

அதனால்தான்
நான் மட்டும் அங்கே
தனியாய் வாழ்கிறேன்.

***************************************

4. பேசும் புத்தகங்கள்

நூலக அறையில் அமர்ந்தேன்.
ஒரே அமைதி ஆனால்
அவை பேசுகின்றன

நீ என்னிடமிருந்துதானே
முதன் முதல் குறிப்பெடுத்து
உரையாற்றினாய்

என்னை விருப்பமுடன்
புதுவைக் காட்சியிலிருந்து
வாங்கி வந்து ஏன்
இன்னும் பிரிக்கவில்லை?

இதுபோல என்மீது
கோடு போட்டுக் கிறுக்காதே.

இவற்றுக்கிடையே
இன்னுமொரு குரல்

நானிங்கே வந்து சேர்ந்து
நாலாறு மாசமாச்சு
என்னை அனுப்பியவரும்
நாள்தோறும் கேட்கிறார்.

இன்னுமவரை வீணாய்
ஏமாற்றாமல் என்னை
எப்போது அனுப்புவாய்?

******************************************

5. பார்த்தினீயம்

நான்
மந்தையிலிருந்து தவறிய
மறியாகி விட்டேன்.

அங்கே நிறைய புல் கிடைக்குமென
ஆசையாய் ஓடி வந்தேன்.

அது கற்றாழையாய் இருக்க
அடியேன் ஏமாந்தேன்.

அவன் கைநீட்டி அழைப்பது
என்னை என நினைத்துப் போனால்
அவன் என் பின்னால் பார்க்கிறான்.

இலைகளும் தழைகளும்
காட்டிக் காட்டியே
இங்கே என்னை
வெகுதூரம் கொண்டு வந்தனர்.

பச்சையாய் இருக்கின்ற
பார்த்தீனியம் காட்டும்
பாழ் உலகம் இது.

எழுதியவர் :
வளவ. துரையன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *