ர.பா.இந்துமதி கவிதைகள்
****************************************************************************
1. பெண்மை
பெண்ணுக்கு அணிகலன் அழகு என்றார்கள்
வளையல் அணிந்தேன்
கைவிலங்கு போல் இருந்தது
கொலுசு அணிந்தேன்
சலங்கையின் சத்தம் என் அலறல் போல் கேட்டது
காதணி அணிந்தேன்
என் செவிகளை அடைத்து
அறியாமை என்னும் சிறையிலிடப் பார்த்தது
அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன்
இறுதியில்
வெற்றிப் பதக்கங்களுக்குத் தகுதியான என் கழுத்தில்
கயிற்றைக் கட்டினார்கள்
திருமணம் என்ற பெயரில்.
நானே ஊதியம் கொடுத்துப் பணிப்பெண்ணாகச் சேரவா
நான் இத்தனைப் பதக்கங்களையும் வாங்கினேன்?
****************************************************************************
2. நானா தனிமையில் இருக்கிறேன்
என்னைச் சுற்றியுள்ள பறவைகள்
என் நண்பர்களைப் போல
கதை சொல்லக் காத்திருக்கின்றன
காற்று அன்போடு என் தலைதழுவிச் செல்கிறது
பட்டாம்பூச்சிகள் உலகெங்கும் பூத்திருக்கும் மலர்கள் யாவும்
என் மகிழ்ச்சியாக இருக்கச் சொல்லி
வண்டுகளைத் தூது அனுப்புகின்றன
இவ்வளவு ஏன்?
கையிலுள்ள காகித மனிதர்கள்
ஆயிரம் உறவுகளுக்கு ஒப்பானவை.
****************************************************************************
3. ரோஜா
ரோஜாப்பூவை முட்களோடு படைத்த இறைவன்
அழகுக்கு கடினமான அரண் தேவை
என்பதை உணர்த்துகிறானா?
இல்லை,
அத்தனை முட்கள் நிறைந்த பாதைகளைக் கடந்தால்தான்
உயரத்தில் அழகிய மலராய்த் திகழலாம் என்பதை.
****************************************************************************
4. பார்வை
பார்வையற்றோருக்குப் பிறந்த குழந்தையொன்று
உலகின் வண்ணங்களைப் பார்த்தது
அதன் கண்களை இறுகப் பொத்திக்கொண்டு
நம்பச் சொன்னார்கள்
இந்த உலகம் இருட்டென்று.
பாவம்
அந்தக் குழந்தை.
****************************************************************************
📚 எழுதியவர்:
– ர.பா.இந்துமதி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்🎉🎊 தொடர்க உன் கவிப்பயணம்
நன்றி ❤️