காந்திஜியின் தத்துப்பெண் அம்புஜம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா

காந்திஜியின் தத்துப்பெண் அம்புஜம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா




வரலாறு எப்போதும் வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருக்கிறது. இந்திய வரலாற்றையும், விடுதலைப் போராட்ட பதிவுகளையும் எழுதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயர்களே. இவர்கள் எப்படி சுதந்திரத்தில் ஈடுபட்ட தமிழக பெண் வீராங்கனைகள் பற்றி எழுதுவார்கள்.

யார் இந்த அம்புஜம் ?

இம்முறை நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத, ஆனால் வரலாற்றுப் பதிவில் அதிகம் பேசப்படாத பெண் ” பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்”தான். இவர் சோதனைகளை அதிகம் சந்தித்த தமிழ்நாட்டுப் பெண்மணி. அம்புஜத்தம்மாள் (சனவரி 8, 1899 -1983) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் ஆவார். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்றே அன்புடன் அழைப்பார். தமிழின் தொடக்க காலப் பெண் எழுத்தாளர்களில் அம்புஜம்மாளும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். காந்தியவாதி. சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியில் ஈடுபட்ட தமிழ் நாட்டுப்பெண்.

மகாத்மா காந்தியின் தத்துப்பெண்

காந்திஜியின் அன்புக்கு மிகவும் பாத்திரமாய் இருந்தவர் அம்புஜம்மாள். இளமைப் பருவத்தில் அவருக்கு அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம். காரணம் அன்றைய மூடநம்பிக்கையும், பெண்ணின் நிலைமையும்தான். காந்தியுடனான இவரின் நினைவுகளை ‘மகாத்மா காந்தி நினைவு மாலை’ என்ற நூலாக எழுதினார். எஸ்.அம்புஜத்தம்மாள் காந்திக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. தன் இறுதிக்காலம் வரை சமூகசேவைகளில் ஈடுபட்டார்.

அம்புஜம்மாள் பிறப்பு

அம்புஜம்மாள் 1899-ம்ஆண்டு, ஜனவரி மாதம் 8ம் நாள், சென்னையில் வசித்த, எஸ். சீனிவாச ஐயங்கார், ரங்கநாயகி அம்மாள் என்ற இணையருக்கு மகளாகப் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அம்புஜவல்லி. இவர்கள் குடும்பத்தில் முதல் இரண்டும் பெண்ணாக ,இருந்ததால், அம்புஜம்மாள் பிறந்ததும் , குடும்பத்தாருக்கு அவர் மீது ஏராளமான வெறுப்பு ஏற்பட்டது. மூன்றும் பெண் குழந்தையாகி விட்டதே என்பதால்தான். சமூகத்தில் அப்போது அதிகம் முற்போக்காக எண்ணங்கள் வளராத காலகட்டம். இவரது தந்தை சென்னையின் புகழ் பெற்ற வழக்குரைஞர்களுள் ஒருவர். தாய்வழித் தாத்தா பாஷ்யம் ஐயங்கார் உயர் நீதிமன்ற நீதிபதி. அது மட்டுமல்ல, அந்த காலத்தில் ஆங்கிலேயர் அல்லாத முதல் அட்வகேட் ஜெனரல் அவர்தான். அம்புஜம்மாள் பிறந்தது ஒருவசதியான குடும்பம்தான்.

பிறந்ததும் தூற்றப்பட்ட அம்புஜவல்லி

இத்தனை பாரம்பரியம், பின்னணி இருந்தும், இளமையில் அம்புஜம்மாளிடம், குவிந்த பிரச்னைகள்ஏராளம். அவர் பிறந்த சில தினங்களிலேயே அம்புஜவல்லிக்கு தோல்வியாதி வந்தது. எனவே பார்க்கவே சகிக்காமல் மிக அசிங்கமாக இருந்தார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட, குழந்தை அம்புஜவல்லியை நெருங்கவே பயந்தனர். அப்போது, அம்புஜம்மாளின் அக்காவும் இறந்துவிட்டார். அவரின் இறப்புக்கு அம்புஜம்தான் காரணம் என எல்லோரும் சொன்னார்கள். அந்த ஊரில், குடும்பத்தில், சமூகத்தில், மூட நம்பிக்கைகள் அதிகம் இருந்ததால், அனைவரும், அம்புஜம்மாளின் அக்கா இறப்பிற்கு, அம்புஜம்மாவின், ‘பிறந்த ராசிதான் காரணம் என்றும், அக்காவை சாப்பிட்டுட்டா’ என்றும் ஏசினார்கள்; அவரை ஒதுக்கினார்கள்.

குழந்தையிலேயே தனிமை

சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான், குழந்தைக்கு தோல் வியாதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அம்புஜவல்லியை பெங்களூரில் உறவினர் இல்லத்தில் கொண்டு விட்டனர். அங்குதான் அதன்பின்னர் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல்நோய் குணமாகியதும் சென்னைக்கு வந்தார். இதற்கிடையே, அவரின் அன்னை ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. அவருக்கு கால் ஊனம். இருப்பினும் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாடினர் . அம்புஜம்மாளை யாரும் சீண்டக்கூட இல்லை. அம்புஜம்மாள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆண்பெண் பாகுபாடு

படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்றாலும் அங்கும் ஆண் பெண் பாகுபாடு இருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை திட்டமிட்டு மறந்து விடுவார்கள். அம்புஜவல்லி சிறிய வயதில் குதிரைச் சவாரி செய்திருக்கிறார்.. குதிரையின் மேல் லேடீஸ் சேணம் பூட்டி உட்கார்ந்து கொண்டு, லகானை பிடித்துக் கொண்டு செல்வார். குதிரையை வேகமாக ஓட்டிச் சவாரி செய்ததில்லை.

இளமைக்காலம்

அம்புஜம்மாளுக்குப் பிறகு பிறந்த தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. ஆனால் அக்கால வழக்கப்படி அம்புஜம்மாளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அம்புஜம்மாள் தான் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரை நச்சரித்தார். இவரை பள்ளிக்கு பெற்றோர் அனுப்புவே இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியரைக் கொண்டு வீட்டிலேயே அம்புஜத்திற்கு கற்பிக்க ஏற்பாடு செய்தனர். ஆனாலும் அவர் கொடுத்த கல்வியில், கல்வியை விட மத போதனையே அதிகமாக இருந்தது. மேலும் அவர் ஐரோப்பியர்களின் நாகரிக பழக்க வழக்கங்களையும் ஆசிரியர் அவருக்கு கற்பித்தார். அவருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாத்தியாரம்மா மாறி விடுவார். புது வாத்தியாரம்மா வந்ததும், பழைய வாத்தியாரம்மா கற்றுக் கொடுத்த பாடங்கள் சரியில்லை என்று கூறி, மறுபடியும் முதல் வகுப்புப் பாடப் புத்தகத்தையே சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார். அத்துடன் தனித்தனியான ஆசிரியர்கள் மூலம் அம்புஜத்திற்கு தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருதத்தில் கல்வி போதிக்கப்பட்டது. அம்புஜம்மாளுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. எனவே அவரது பெற்றோர் அவருக்கு இசைப் பயிற்சியும் அளித்தனர். அம்புஜம் வீணை வாசிப்பதிலும் திறமையும் தேர்ச்சியும் பெற்றார்.

திருமணம்

அம்புஜம்மாளுக்கு 11 வயது ஆனதும், அந்த கால வழக்கப்படி, ஒரு திறமையான மொழியியலாளர். எஸ். தேசிகாச்சாரி என்ற வழக்கறிஞரை, 1910 ம் ஆண்டு, திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அம்புஜம்மாளின் கணவர் தேசிகாச்சாரி, அவரது தந்தை சீனிவாச ஐயங்காரிடம் உதவி வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். திருமணத்துக்குப் பின் அம்புஜம்மாள் கணவர் வீட்டில் சென்று வாழவில்லை. கணவருடன் தாய் வீட்டிலேயே இருந்தார்.சீனிவாசா ஐயங்கார் காங்கிரஸ் அபிமானி; ராஜாஜியுடன் நெருங்கி பழகியவர். அவரது திறமையும் பல துறைகளில் அவர் செயல்பாடுகளையும் கண்ட, உயர்ந்த பிரிட்டிஷ்அரசு அவருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி அளித்துச் சிறப்பித்தது.

வீட்டில் மூட நம்பிக்கை

அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்த அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கோபித்துக் கொண்டு வெளி ஊருக்கு கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கடுமையான கோபம் ஏற்பட்டது அம்புஜம்மாளுக்கு. தனது வாழ்க்கையும் இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார், விரும்பினார்.

காந்தி சென்னை வருகையும், அம்புஜம் அரசியல் திருப்பமும்,

இந்த நிலையில் தான் காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்திருந்தார். அவரது இல்லத்தில் காந்திக்கு சிறந்த வரவேற்பு ஒன்றை அளித்தார் சீனிவாச ஐயங்கார். காந்தியையும் கஸ்தூரிபாயையும் நேரில் சந்தித்தார் அம்புஜம்மாள். அவர்களின் எளிமையைப் பார்த்து மிகவும் வியந்தார். அவர்கள் சேவைகளை கண்டு, தாமும் அவர்களைப் போல ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்மூலம் தேசிய உணர்வை அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து அவர்களுடன் இணைந்து,உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு சென்னையிலிருந்து மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பினார். நிதியும் திரட்டிக் கொடுத்தனர். அப்போது அம்புஜம்மாளுக்கு பதினைந்துதான்.

ஆசையைத் துறந்த அம்புஜம்மாள்

புத்தர் பெருமான் உலகின் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கி முடி அரசைத் துறந்தார். தென்னாட்டிலேஸ்ரீ மான், ஸ்ரீனிவாச ஐயங்காருடைய செல்லப்பெண் அம்புஜவல்லி, அலங்கார வல்லியாக இருந்து, சிறுமி தன்னுடைய பாட்டி நகைகளைக் கூட ஆசைப்பட்டுக் கேட்ட பெண், பின்னால் அன்னை கஸ்தூரிபா, காந்தியைச் சந்திக்கிறார், அன்னையின் கைகளில் இருந்தன இரும்பு வளையல்கள். இந்தத் தோற்றம் அம்புஜம்மாளின் மனதையே மாற்றி அணிகலன்களுக்குப் பதில் அன்பை, தேசபக்தியை, தெய்வபக்தியை, சமூகநலப்பணியை எல்லாம் சேர்த்து ஆபரணங்களாக அணிந்திருக்கிறார். பின்னர் அம்புஜம்மாள் கதர் உடையணிந்து, கழுத்தில் மணிகளின் இழையைத் தவிர வேறெதுவும் அணிந்ததில்லை.

அம்புஜம்மாளின் உடல் நலம் பாதிப்பு

அம்புஜம்மாள் தேசிகாச்சாரி தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போது அம்புஜம்மாளுக்கு வயது 25. இடையில் கணவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மன நலப் பிரச்சனையும் அம்புஜத்தமாளைப் பெரிதும் பாதித்தன.அம்புஜம்மாளுக்கும் காச நோய் ஏற்பட்டது. தாயாரின் உடல் நலமும் குன்றியது. தாத்தாவும் மறைந்தார். தம்பிக்கும் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இல்லற வாழ்க்கையின் பிரச்சனைகளை, தந்தையின் உறுதுணையுடன் எதிர்கொண்டார்.

அன்னிபெசன்ட் சுயாட்சி இயக்கம்.

அப்போது சென்னையில் ‘இந்தியர்களுக்கு சுயாட்சி’ என்ற இயக்கத்தை துவக்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். அந்தக் கூட்டங்களுக்கு தந்தைக்குத் தெரியாமல் அம்புஜம்மாளும்,அவரின் சித்தி ஜானம்மாளும் சென்று வந்தார்கள். தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அன்னிபெசன்ட் அம்மையாரைக் கண்டாலே பிடிக்காது.அன்னிபெசன்ட் இங்கிலாந்து அரசுக்கு விரோதமாக செயல்படுவதாலும் , அப்போது இந்தியாவில் ஆங்கிலேய அரசு ஆடசி செய்ததாலும், இந்திய அரசு அன்னிபெசன்ட்டைக் கைது செய்ய உத்தரவிட்டது. ‘கைது வேண்டாம். ஊட்டியில் வீட்டுக் காவலில் வைக்கலாம்’ என்று அரசுக்கு யோசனை சொன்னார் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச அய்யங்கார். இது அம்புஜம்மாளுக்குப் பிடிக்காமல் மன வேதனையுற்றார்.

அம்புஜத்தின் பணி

அம்புஜம்மாள் பின்னர் ஆசிரியராக தகுதி பெற்று, ‘சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி’யில், பகுதி நேரமாக கற்பித்தார். 1929 முதல் 1936 வரை, சாரதா மகளிர் சங்கத்தின் குழு உறுப்பினராக இருந்தார். சகோதரி சுப்புலட்சுமியுடன் மிக நெருக்கமாக வேலை செய்தார். 1929 ஆம் ஆண்டில், சென்னை மகளிர் சுதேசி லீக்கின் பொருளாளரானார். இந்த லீக், காங்கிரசின் அரசியல் சாராத பிரிவாக இருந்தது, காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை செயல் படுத்தியது.

பாரதியார் பாடல் மூலம் சுதந்திர தாகம் ஊட்டுதல்

முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் ஆங்கிலேய அரசு சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுத்தரவு போட்டிருந்தது. அம்புஜம்மாளும் அவரது பெண்கள் சங்கமும் மார்கழி மாத பக்தி பாடல்கள் என்று சொல்லி, நாட்டுப்பற்று பாடல்களையும், இந்திய தேச உரிமை கீதங்களையும் பாடிக்கொண்டு ,சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிவருவார்கள். முதலில் அவர்களைக் கொண்டு கொள்ளாத, கண்டுபிடிக்காத காவல்துறை, பின்னர் கண்டுபிடித்துப் பெண்கள் சங்கத்தினரைக் கைது செய்தார்கள். இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.

தீவிர அரசியலில் அம்புஜம்மாள்

இரண்டாவது முறையாக காந்தி சென்னை வந்தார். அப்போதும் அவர் சீனிவாச ஐயங்கார் வீட்டில் தங்கினார். அப்போதுதான், “இந்தியப் பெண்களில் படித்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் குடும்பக் கடமைகளில் மூழ்கி விடுகிறார்கள். அந்தக் குறையைத் தீர்ப்பது உன்னைப் போன்ற படித்த பெண்களின் கடமை.” என்று காந்தி அறிவுறுத்தினார். அம்புஜம்மாள் அது முதல் தீவிரமாகப் பொதுச் சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தெருவெங்கும் கதர்த் துணிகளைச் சுமந்து சென்று விற்பனை செய்தார். பின்னர் அவர் ருக்மணிலட்சுமிபதி, துர்காபாய் தேஷ்முக், வை.மு.கோதைநாயகி போன்றோருடன் இணைந்து காந்திஜியின் அறிவிப்பின்படி வெள்ளையர்களுக்கு எதிராக அகிம்சை வழியில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். தடை செய்யப்பட்டிருந்த பாரதியின் பாடல்களைப் பொதுவெளியில் உறக்கப் பாடி ஊர்வலம் சென்றார். அந்நியத் துணிகளை எதிர்த்துப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் எனப் பல போராட்டங்களில் அம்புஜம்மாள் கலந்துகொண்டார்..

கள்ளுக்கடை மறியல், கைது

ஒரு சமயம் அம்புஜம்மாள் அவரது தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, சென்னையில் அந்நிய துணி புறக்கணிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவருடன் போராட்டம் செய்தவர்களை கைது செய்த காவல்துறை, அம்புஜம்மாளைக் கைது செய்யவில்லை. காரணம் இவர் அட்வகேட் ஜெனரலின் மகள் என்பதுதான், ஆனால் அம்புஜம்மாள், இதனை போராட்டத்தை மேலும் தீர்மானத்துடன் தொடர்ந்து நடத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதினார். எனவே அம்புஜம்மாள் 10 நாட்கள் தொடர்ந்து சைனா பஜாரில் அந்நிய துணிகள் இருக்கும் கடைகள் முன்பு போராட்டம் நடத்தினார். இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில், தேசப்பற்று உள்ள எல்லோரும் கள்ளுக் கடை மறியல், அந்நிய துணிக் கடை மறியல்,அந்நிய துணி பகிஷ்கரிப்பு என்று1932ம் ஆண்டு, தேசம் காக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு பலர் சிறைக்குச் சென்றனர். இவருடன் இவரது சித்தியான ஜானம்மாளும் கலந்து கொண்டார். இதனைத் தடுப்பதற்காக, காவல் துறையினர், இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடை தண்ணீரை பீச்சி அடித்தனர். ஆனாலும் அச்சம் இல்லாமல் அருவருப்பில்லாமல் இருவரும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அம்புஜம்மாளின் சிறை வாழ்க்கை.

அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்புஜம்மாள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர், கல்வி அறிவில்லாத பெண்களுக்கு தமிழும், தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்தார். பெண்கள் சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தையல், பூ வேலை போன்ற கைத் தொழில்களைப் பயிற்றுவித்தார்.

சரோஜினி வரதப்பனுக்கு ஆசான்

தமிழக முதலமைச்சரான எம்.பக்தவத்சலத்தின் மகளும், சமூக ஆர்வலருமான சரோஜினி வரதப்பனுக்கு, அம்புஜம்மாள் வழிகாட்டியாக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு சென்னை, இராணிப்பேட்டை ஹை ரோடில், ஒரு சிறிய அறையில், இருவரும் இலவச இந்தி வகுப்புகளை, நடத்தினர். 1934 முதல் 1938 வரை இந்தி பிரச்சார சபாவின் நிர்வாகக் குழுவில், அம்புஜம்மாள் இருந்தார். இந்திக்காக நிறைய பிரச்சார வேலைகளை செய்தார். இந்தி பிரச்சார சபாவுடனான அவரது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 1934 இல், பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்

காந்தியின் தத்துப்பெண்

சிறையிலிருந்து விடுதலையான பின், அம்புஜம்மாளும், அவரின் சித்தி ஜானம்மாளும், மீண்டும் கதர் விற்பனை, காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர் . வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அம்புஜம்மாள். அதன் பின்னர் அம்புஜம்மாள், மும்பை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று காந்திஜியைக் கண்டு மகிழ்ந்தார். இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்டார்.

காந்தியின் கடிதம்

காந்திஜி, அம்புஜம்மாவிடம்,”உங்கள் கடிதத்தைப் படித்ததில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் கடிதத்தைப் பார்த்தது, ஒரு தந்தை தனது மகளைப் பார்த்த போது அனுபவித்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது…. ஏன் உங்கள் மனம் கவலைப் படுகிறது. எனக்கு எழுதுங்கள்” பாபுவின் ஆசீர்வாதம்…காந்திஜியிடமிருந்து, இந்தக் கடிதத்தைப் பெற்ற போது, அம்புஜம்மாள் வயது 36..

அதன்பின்னர் அம்புஜம்மாள் , காந்திஜிக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது அவரின் பெயர் அம்புஜவல்லி என்ற பெயர் நீளமாக இருப்பதாகக் கூறி, அம்புஜம் என சுருக்கி அன்போடு காந்திஜி அழைக்கத் துவங்கினார். காந்திஜியின் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டிருப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதிலும், அம்புஜம்மாளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா எடுத்த கடைசி ஆயுதமான “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம் 1942-ல் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.

வார்தா ஆசிரமம்

காந்திஜியின் இணையர் அன்னை கஸ்தூரிபாவின் எளிமையான் தோற்றத்தால் கவரப்பட்டு, காங்கிரஸ் மாநாடு முடிந்த பின்னா, அம்புஜம்மாள் சென்னை திரும்பும் போது, நவம்பர் 1_ஆம் தேதி ‘வார்தா’ ஆசிரமத்திற்கு வர முடியுமா? என்று காந்திஜி அம்புஜம்மாளிடம் கேட்டார். அதற்கு அம்புஜம்மாள் கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஓ கட்டாயம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன், காந்திஜி வார்தா ஆசிரமத்துக்கு அழைத்ததை அம்புஜம்மாள் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, தந்தையார் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் அம்புஜம்மாள் தன வீட்டுக்குள்ளேயே,மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர்தான் அவரது பிறகு பெற்றோர் சம்மதித்தனர் . பிறகு அம்புஜம்மாள் வார்தா ஆசிரமத்துக்குச் சென்றார். பின் தந்தையார் மறைந்த போது மட்டுமே சென்னை திரும்பினார்.

அம்புஜம்மாளின் திறமை.. புலமை

அம்புஜம்மாள் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து முறையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட, தமது சொந்த முயற்சியாலும், மீளா ஆர்வத்தினாலும், தானாகவே படித்து புலமை பெற்று விளங்கினார். அம்புஜம்மாள் பல இந்தி கதைகளை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, துளசி ராமாயணத்தை இசையுடன் பாடக் கற்றுக் கொண்டு, அனைவருக்கும் பாடி மகிழ்வித்தார். வடநாட்டு கிராம மக்களிடையே, பேச்சு வழக்காக உலவி வந்த, பிரபலமாகியிருந்த துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளிடம் கூறியிருந்தார் காந்திஜி. அவர் சொன்னபடி துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார் அம்புஜம்மாள்.

பதவிகள் பலப்பல

அம்புஜம்மாள், 1939 முதல் 1942 வரை செயலாளராகவும், 1939 முதல் 1947 வரை பொருளாளர் பதவியையும் வகித்து, மகளிர் இந்திய சங்கத்தின் (டபிள்யூ.ஐ.ஏ), குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில், அவர் பேசிய பிரச்சினைகள்: குழந்தை திருமணம் ஒழிப்பு, பலதார மணம் ஒழிப்பு,தேவதாசி அமைப்பு ஒழிப்பு , பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சொத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வருதல்

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம்

வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தை பிரபலபடுத்த, அவருடன் தமிழ்நாட்டில், 1956 இல் சுற்றுப் பயணம் செய்தார், அம்புஜம்மாள். கிராம தன்னிறைவு மாதிரியை நம்பினார். அதனை பரிந்துரைத்த படி, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப் பட்டார். 1957 முதல் 1962 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1957 முதல் 1964 வரை மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.

மகளிர் இந்திய சங்கத்தின் சார்பில், சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப் பட்டார். 1947 ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாட்டின் போது, வரவேற்புக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார்

கல்வி நிலையம்

காந்திஜி விரும்பியபடி அம்புஜம்மாள், சென்னையில் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார். பின் அதற்காக ஏற்கெனவே தமது சொந்த செலவில் தமது சகோதரனின் மனையில் ரூ.15,000 செலவில் கட்டி முடித்தார். தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார். அது இன்றுவரை தொடர்ந்து பணியாற்றுகிறது.

பதவிகள்

இந்திய சுதந்திரத்துக்கு பின் அம்புஜம்மாள் காங்கிரஸிலும் காங்கிரஸ் அரசியலிலும் பதவிகள் வகித்தார். 1955 ஆம் ஆண்டு, சென்னை, ஆவடியில் நடைபெற்ற சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராக இருந்து அம்புஜம் அம்மையார் அரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநிலத் துணை தலைவர் – தமிழ்நாடு காங்கிரஸ் குழு (1957 – 1962)

மாநில சமூக நல வாரியம் (சேர்மன்) (1957 – 1964)

எழுத்தாளர் அம்புஜம்மாள்

அம்புஜம்மாளின் முதல் படைப்பான ‘அவர் எங்கே இருப்பார்?’ எனும் சிறுகதை 1940-ல் கலைமகள் இதழில் வெளியானது. குறிப்பிடத்தகுந்த நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதிகம் சிறுகதை எழுதியதில்லை.

அம்புஜம்மாள் வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களைத் தமிழில் வசன நடையில் மொழி பெயர்த்தார். இதுவே இவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி. கே.எம் முன்ஷி எழுதிய நூலை ‘வேதவித்தகர் வியாசர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். அம்புஜம்மாள் ‘சேவாசதன்’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளியாகிப் புகழ் பெற்றது. இதில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்தார்.

மகாத்மா காந்தி நினைவு மாலை என்ற நூல்

கலைமகள், கல்கி, பாரதமணி போன்ற இதழ்களுக்குப் பல கட்டுரைகளை எழுதினார். அம்புஜம்மாளின் கதைகள் நேரடியான கருத்துரைப்புத் தன்மை கொண்டவை. தமிழில் காந்தியை நேரடியாக அணுகி அறிந்து எழுதப்பட்ட ஒரு சில நூல்களேஉள்ளன. அவற்றில் அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவுமாலை முக்கியமானது.. காந்தி அம்புஜம்மாளுக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. தனது குருநாதரான காரைச்சித்தர் பற்றிய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

அம்புஜம்மாள் தன் தந்தையார் பற்றி, ‘என் தந்தையார்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். தன் வாழ்க்கை அனுபவங்களைத் தனது எழுபதாம் வயதில் “நான் கண்ட பாரதம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். அம்புஜம்மாள் தினமணி காரியாலயம் வெளியிட்டு வந்த இலக்கிய நூல்களுக்கு ஆலோசனையாளராகப் பணிபுரிந்தார்.

விருதுகள்

* இந்திய அரசு அம்புஜம்மாளுக்கு 1964-ல் ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கியது.

* தமிழகஅரசு சென்னையில் உள்ள சாலை ஒன்றிற்கு அம்புஜம்மாள் பெயரைச் சூட்டியுள்ளது.

மறைவு

தன் இறுதிக் காலம் வரை தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், 1983-ல், தனது 82-ஆம் வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  1. என் தந்தையார்
  2. மகாத்மா காந்தி நினைவு மாலை
  3. நான் கண்ட பாரதம்
  4. மொழிபெயர்ப்பு
  5. வேதவித்தகர் வியாசர்
  6. சேவாசதன்
  7. சிறுகதைகள்
  8. அவர் எங்கே இருப்பார்?
  9. இவரைப்பற்றிய நூல்:அம்புஜம்மாளின் வாழ்க்கையை எழுத்தாளர் வசுமதி ராமசாமி எழுதியுள்ளார்.

Ref:

  1. https://ta.wikipedia.org/wiki
  2. https://en.wikipedia.org/wiki/Ambujammal
  3. https://www.tnpscjob.com/tnpsc-tamil-ambujathammal/
  4. https://bookwomb.com/naan-kanda-bharatham.html
  5. https://mediyaan.com/ambujammal-freedom-fighter/
  6. https://thecommunemag.com/ambujammal-the-ardent-swadeshi-buried-in-the-pages-of-history/
  7. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12647
  8. https://tamil.wiki/wiki
  9. https://www.dinamani.com/specials/kalvimani/2014/nov/23/TNPSC-IV1017719.html
  10. http://tnpsctamilnotes.blogspot.com/2014/08/blog-post_97.html
  11. https://brightzoom.blogspot.com/2018/08/blog-post_54.html

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *