எல்.காயத்ரி ஹைக்கூ கவிதைகள்

எல்.காயத்ரி ஹைக்கூ கவிதைகள்



பொருத்தம்

ஏன் என்ற
மிக சிறிய கேள்வியும்
ஏனென்றால் என்ற
வெகு நீண்ட பதிலும்
காதலுக்கு
பொருந்தி வராது

—–

நேசம்

அனுமதி கேட்டு
நேசம் பிறப்பதில்லை
விடைபெறும்போது
சொல்லிக்கொண்டு
போவதுமில்லை



தொலைதல்

இருப்பை
தக்க வைக்க
பிரயத்தனங்கள்
செய்யும் உலகில்
இருளில்
மூழ்கவென
போராட்டங்கள்
நிகழ்த்துகிறேன்

—–

காலச்சக்கரம்

உன்னை பிரிந்து
இருபது நான்கு ஆண்டுகள்
ஐந்து மாதங்கள்
மூன்று வாரங்கள்
ஆறு நாட்கள்
ஒரு மணிநேரம்
ஏழு வினாடிகள்
இல்லை இப்பொழுது
எட்டு வினாடிகள்
ஆகிவிட்டன…

ஆம்
உன்னை
மறந்தும்…



சிதிலம்

வெடி
விபத்தொன்றில்
சிதறி பறந்தன
அங்கங்கள்

இனி
என்றென்றும்
கேளா செவிகள்
எப்பொழுதும்
காணா விழிகள்
தோள் சேரா கரங்கள்
காலில்லா தொடைகள்

சிதிலமடைந்த தேகங்களில்
தனக்கான உடலொன்றை
தேடி அலைந்தது
துண்டாடப்பட்ட தலையொன்று

—–



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *