சாதி எனச்சொல்லி மோதி அழிந்திட
வீதியில் நிற்காதே!-உயிர்
வேதனையில் மிக்க சோதனையில் நாளும்
வெந்து இறக்காதே!
நாட்டு மதப்பேயை ஓட்டு நலம்பெறக்
காட்டு அறிவினையே!-உன்
பாட்டுப் புதுநெறி ஊட்டும் நிலையினை
நாட்டுச் செறிவினையே!
நொந்து உழைப்பவர் வெந்து வதைபட
குந்தித் தின்பாரோ?- இது
நிந்தை உடனெழு வந்து களம்புகு
விந்தை புரிபவரே!
சொந்தமாய் மக்களைச் சொல்லியே நாளும்
சொந்த நலம்பெறுவார்!-அவர்
சூழ்ச்சியில் வீழாமல் சூதினைக் கண்டெடு
வாழ்வில் நலம்பெறவே!
சாதியும் மதமும் சாத்திரக் குப்பையும்
வீதியில் புதைத்திடு!-அவை
பாதியில் வந்தவைப் பாழைத் தந்தவை
ஆதியில் நிலைத்திடு!
நாளும் புகழ்பெற நாநிலம் மகிழ்வுற
தோள்கள் உயர்த்தியே- இனி
மாளும் அவரது கோலத்தைப் போக்கிடு
ஞாலம் பிறந்தவனே!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

