அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை…
– அ. குமரேசன்
அறிவியலுக்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் பற்றி அறிவியல் ஆராய்வதில்லை. அறிவியலே அடிப்படையில், இருக்கிற ஒரு பொருள், அதன் மூலம், அதன் மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதுதானே? பிறகெப்படி கடவுள் பற்றி ஆராய முடியும்?
ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, அது ஏன் என்று அறிவியல் ஆராயும். பெரும்பகுதி மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் உளவியலை ஆராய்வதும் அறிவியல்தான்.
உலகம் முழுக்க அறிவியலாளர்கள் 70 சதவீத அறிவியலாளர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் அவர்கள் தங்களின் கடவுள்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. தங்களின் ஆய்வறிக்கைகளில் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட உண்மையைக் கண்டறிந்தோம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, கடவுள் அருளால் கண்டுபிடித்ததாகக் கூறுவதில்லை.
முதலாளித்துவக் கடவுள்
அறிவியல் கண்டுபிடிப்புகளை உடைமையாக்கிக்கொள்ளும் முதலாளித்துவத்துக்கும் கூட கடவுள் தேவையில்லை. லாபம்தான் அதன் கடவுள். தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை உள்ள முதலாளிகள் இருப்பார்கள். அம்பானி மகள் அண்மையில் நீண்ட பக்திப் பயணம் மேற்கொண்ட செய்தியைப் பார்த்தோம் அல்லவா?
சிக்கல்கள் வரும்போது மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்வார்கள். மக்களின் கோபத்தைத் திசை திருப்புவதற்கு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது, அதற்கான சடங்குகளுக்குப் பெரும்பணம் செலவிடுவது என்ற உத்திகள் நெடுங்காலமாகவே உடைமைச் சமுதாய அமைப்புகளில் சுரண்டல் சக்திகளால் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் நவீன சுரண்டல்வாதிகள் அந்த உத்திகள் தங்களுடைய முதலீட்டில், தொழிலில், வருமானத்தில் குறுக்கிட அனுமதிக்க மாட்டார்கள்.
உறுதியற்ற நிலைமைகளும் அச்சங்களும் நீடிக்கிற வரையில் கடவுள் நம்பிக்கையும் தொடரும். முதலாளித்துவச் சுரண்டலின் எல்லாக் கோரங்களுக்கும் முடிவு கட்டும் புரட்சி வெடிப்பதாக வைத்துக்கொள்வோம், அப்போது உழைப்பாளி மக்களில் பெரும்பாலோர் புரட்சி வெற்றி பெற வேண்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டுதான் அதற்காகப் புறப்படுவார்கள். புரட்சி வெற்றிபெற்று அடிப்படையான மாற்றங்கள் உறுதியான பிறகும் கூட, அந்த நன்மைகள் தொடர வேண்டும் கடவுளே என்று வேண்டிக்கொள்வார்கள். படிப்படியாகக் குறைந்து, காலப்போக்கில்தான் அது மாறும்.
நாத்திகரும் மார்க்சியரும்
நாத்திகராக மட்டும் இருந்து இதைப் பார்ப்பது வேறு. மார்க்சியராக இருந்து புரிந்துகொள்வது வேறு. மார்க்சியமே அறிவியல்தான். கடவுள் நம்பிக்கை மக்களின் கூட்டு வாழ்க்கைக்கோ சமூகத்தின் நவீன மாற்றங்களுக்கோ தடையாக இல்லை. ஆனால் மூடநம்பிக்கை அப்படியில்லை. அது தனிப்பட்ட முறையிலும் குடும்பமாகவும் சமூகமாகவும் முடக்கிப்போடும் வேலையைச் செய்கிறது.
பூனை குறுக்கே வந்தால் வெளியே புறப்படுவதைத் தாமதப்படுத்துகிறார்கள். யாராவது தும்மினால் கெட்ட சகுனம் என்று தொடங்கிய செயலைத் தள்ளிப் போடுகிறார்கள், பாவம் பல்லி எதற்காகவே கத்தினால் பலன் பார்க்கிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் முடிவெட்டிக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். , பீடையைத் தடுப்பதாக எலுமிச்சை–மிளகாய்–படிகக்கல் கூட்டணியைத் தொங்கவிடுகிறார்கள். தீய சக்திகளைத் தடுக்க கோமியம் தெளிக்கிறார்கள் (இதற்கு இன்று கலாச்சார அடையாளம் தரப்படுகிறது இப்படியான வேடிக்கை நம்பிக்கைகளும் நிறைய இருக்கின்றன. விபரீத நம்பிக்கைகள்தான் நம் கவலைக்கு உரியவை.
‘“பூக்குழி” எனப்படும் தீக்குழியில் இறங்கி ஓடுவது, குழந்தைகளையும் ஓட வைப்பது, அரிவாள் முனையில் நடப்பது, தலையில் (சிறார் உட்பட) தேங்காய் உடைப்பது, முதுகில் கொக்கிகளைக் குத்தி மாட்டித் தேர் இழுப்பது, பெரிய கொக்கிகளில் தொங்குவது, கன்னத்திலும் நாக்கிலும் அலகு குத்துவது, குழந்தைகளை உயரத்தில் வீசிப் பிடிப்பது எனப் பலவகையான பழக்கங்கள் தொடர்கின்றன. அண்மையில், குழந்தையோடு பூக்குழி இறங்கிய ஒருவர் நெருப்புக் கங்குகளின் மேல் தவறி விழுந்து, தீக்காயங்களுடன் குழந்தையை மக்கள் காப்பாற்றிய செய்தி காணொளிப் பதிவாக வந்தது. எதிரிகள் வைத்த பில்லி சூனியத்தை எடுப்பதற்கும், எதிரிகளின் இடத்தில் பில்லி சூனியம் வைப்பதற்கும் சிறப்புப் பூசைகள், தாயத்துகள், மந்திரித்த கயிறுகள் எனப் பெரும் பண வசூல் நடக்கிறது.
கடத்தப்படும் குழந்தைகளில்
இன்றைக்கும் பல பெண்கள் பல்வேறு புறக்காரணங்களால் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறபோது பேய் பிடித்துவிட்டதென்று அதை விரட்டுவதற்குப் பூசை என்ற பெயரில், தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டுவது, விளாறினால் அடிப்பது, சூடு வைப்பது, பட்டினி போடுவது உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பணத்தையும் இழக்கிறார்கள். அந்தப் பேய்கள் ஏன் பொருளாதாரத்தில் வசதியான, சமூக அடுக்கில் மேல்தட்டில் இருக்கிற குடும்பங்களின் பெண்களைப் பிடிப்பதில்லை? இதை யோசிக்க வைப்பது கூட ஒரு சமூக அறிவியல்தான். இப்படிப்பட்ட நிலைமைகளில் இருப்பவர்களை மூடநம்பிக்கைப் பேயிடமிருந்து மீட்க வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்குத் திருமணம் நடக்கத் தடையாக இருக்கிற தோஷத்தைப் போக்குவதற்கான சிறப்புப் பூசையென்று கூறி, குழியில் இறக்கிவிட்டு உள்ளே பாலியல் அத்துமீறலில் இறங்கியவனைப் பற்றிய செய்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்தது. சுற்றியிருந்தவர்கள் விழித்துக்கொண்டதால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார். எத்தனை பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்களோ…
சிறுமிகளை வயதான ஆண்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த ஆண்களின் ஜாதகப்படி வயதுக்கு வராத பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால்தான் ஆயுள் நீடிக்கும் என்று கூறப்பட்டதை நம்பி, அந்த ஆணின் குடும்பத்தினர் இதற்காகச் சிறுமிகளைக் கடத்துகிறார்கள், அதற்குச் சிறுமியின் பெற்றோர்களும் குடும்பத்துப் பெரியவர்களும் ஒத்துழைக்கிறார்கள். சிறுமியின் கனவுகள் கொல்லப்படுகின்றன.
கொடூரமான இன்னொரு கட த்தல்தான் நரபலிக்காகச் சிறாரைக் கொண்டுசெல்வது. வயலில் பலி கொடுத்தால் சொத்து நிலைக்கும், பெருகும் என்ற எவனாவது சொல்வதை நம்பி இந்தக் கடத்தல் நடக்கிறது. பலபேர் இதில் ஈடுபடுகிறார்கள். நாடு முழுவதும் 2020 முதல் 2024 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் காணாமல் போன சுமார் 3 லட்சம் சிறாரில் 36,000 பேர் (12 சதவீதம்) கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அந்த 36,000 பேரில் எத்தனை சதவீதத்தினர் நரபலிக்காகக் கடத்தப்பட்டவர்களோ என்ற எண்ணம் மனதைப் பதற வைக்கிறது.
எதிரொலித்த எதிர்பார்ப்பு
கிராமங்கள், நகரங்கள், படிக்காதவர்கள், படித்தவர்கள் என்று எங்கும் பலவகையான மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த மூடநம்பிக்கைகள், அவர்களுக்குச் சொந்த முறையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உடலும் மனமும் சார்ந்த துன்பங்களைத் தருகின்றன. செயல்திறனை முடக்கி, சமூக முன்னேற்றத்தில் அவர்களது பங்களிப்பைத் தடுக்கின்றன.
இந்த நிலையில்தான், மஹாராஷ்டிரம், கர்நாடகம் போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி சட்டப்பேரவையில் ஒலித்தது. திமுக–வின் ஆயிரம் விளக்குத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் எழிலன், பலருடைய அந்த எதிர்பார்ப்பை அங்கே எதிரொலித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “எந்தச் சட்டத்தின் மூலமாகவும் எதையும் நாம் கொண்டுவந்து ஒன்றைத் தடுப்பதோ, அல்லது ஒன்றைப் பாதுகாப்பதோ இயலாத காரியமாகப் போய்விடும். எனவே நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை. மற்றவர்களைக் கட்டாயப்படுத்தும் முயற்சி ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்குமா என்பதைப் பார்த்துதான் சொல்ல வேண்டும்,” என்று நழுவினார். சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டுவிட்டதாகவும் அமைச்சர் நல்ல விளக்கம் கொடுத்துவிட்டதாகவும் கூறி அந்தக் கேள்வியை அத்தோடு முடித்துவிட்டார் பேரவைத் தலைவர் அப்பாவு.
சட்டத்தால் ஒன்றைத் தடுக்க இயலாது என்றால், முன்னொரு காலத்தில் கணவனின் சடலத்தோடு மனைவியும் எரிக்கப்பட்ட ஸதி கொடுமை தடுக்கப்பட்டிருக்குமா? வரதட்சனை பற்றிப் பகிரங்கமாகப் பேசிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்குமா? சிறுமிகளுக்கும் 18 வயதை அடையாத பெண்களுக்கும் திருமணம் நடத்தினாலும் திருட்டுத்தனமாகத்தான் நடத்த முடியும், போலியான வயதுச் சான்றிதழை வைத்துதான் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்குமா? ஆக, மாற்றங்களுக்குச் சட்டங்களும், அவற்றை முறையாகச் செயல்படுத்துவதும் தேவைதான். சட்டம் வருமா என்று கேட்டது சம்பந்தமுள்ள கேள்விதான்.
முதலமைச்சர் கவனத்திற்கு
முதலமைச்சரிடம் கலந்தாலோசித்துதான் இந்த விளக்கம் தரப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பகுதி மக்கள் கடைப்பிடிக்கிற நம்பிக்கைளைத் தடுப்பதற்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அவர்களது ஆதரவை இழக்க நேரிடுமோ என்ற தேர்தல் அரசியல் கண்ணோட்டத்தில்தான் திமுக அரசு இதை அணுகுகிறது என்ற விமர்சனத்திற்கு இடமளித்துவிடக்கூடாது.
திமுக தலைவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 2013இல் வெளியிட்ட அறிக்கையில், “மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி, கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால் அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்,” என்று வேண்டுகோள் விடுத்திருப்பதை மு.க. ஸ்டாலின் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் மதத்தைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சில பேர் கிளம்புவார்கள். அப்படியானால் இந்த மூடத்தனங்கள்தான் உங்கள் மத அடையாளங்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.
மக்களிடம் மாற்றுக் கருத்துகள்
அதே வேளையில் இதற்காக மக்களிடையே விரிவான பரப்புரை இயக்கங்கள் நடைபெற வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றுக் கருத்துகளை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். எளிய மக்களைச் சொற்களால், கேலிகளால் தாக்காமல், முட்டாள்தனம், மூடத்தனம் என்று சொல்லி, அப்படியானால் உன்னோட அறிவை நீயே வச்சுக்க என்று மக்கள் விலக வைத்துவிடாமல் கொண்டுசெல்ல வேண்டும்.
இதை எண்ணுகிறபோது, “மூட”நம்பிக்கை என்ற சொல்லாக்கத்தைக் கூட மறு ஆய்வுக்கு உப்படுத்தலாம் என்று தோன்றுகிறது.. பழகிய சொல்லாகிவிட்டதால் இப்போதைக்கு இதையே கையாள வேண்டியிருக்கிறது. “சூப்பர்ஸ்டிஸன்” என்பதற்கான பொருத்தமான, அனைவரும் ஏற்கத்தக்க தமிழ்ச்சொல்லை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நோக்கத்தின் நேர்மையைக் கண்டு, முன்னர் இந்தச் சொல்லாடலை உருவாக்கிய முன்னோர்கள் புதிய சொல்லை அங்கீகரிப்பார்கள் என்றே கருதுகிறேன்..
அடிப்படையில் மக்களின் வாழ்நிலையை மாற்றுகிற, முன்னேற்றுகிற நடவடிக்கைகளோடும் இது இணைய வேண்டும். வறுமையும் அச்சமும் நம்பிக்கையின்மையும் இல்லாத வாழ்க்கையை உறுதிப்படுத்துவதோடு இணைய வேண்டும். அந்த வாழ்க்கை சோசலிச சமுதாயத்தில்தான் சாத்தியம் என்று, அந்தச் சமுதாயம் உருவாகிற வரையில் இதை அப்படியே விட்டுவிட முடியாது. அந்த மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கும் மூட நம்பிக்கைகள் தடையாக இருக்கின்றன. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் இந்த முயற்சிகளும் பங்களிக்கும். ஆகவே நடப்பு அரசமைப்பிலேயே செய்தாக வேண்டியது இது.

தமிழ்நாட்டை முந்திக்கொண்டு மஹாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மஹாராஷ்டிரத்தில் மூடநம்பிக்கை விழிப்புணர்வுப் பரப்புரை இயக்கத்தை வலுவாக நடத்தி வந்த முனைவர் நரேந்திர தபோல்கர், சித்துவிளையாட்டுகளால் ஆதாயம் அடைந்து வந்த கும்பல்களில் ஒன்றால் 2013இல் சுட்டுக்கொல்லப்பட்டார். உடனடியாக அவரச் சட்டம் கொண்டுவந்த மாநில அரசு, பின்னர் முறையான சட்டத்தை நிறைவேற்றியது. அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக்கூறப்படும் ஆட்களால், கர்நாடகத்தில் 2015ல் எழுத்தாளரும் சமூகசீர்திருத்தவாதியுமான எம்.எம். கல்பூர்கி கொல்லப்பட்டார். 2017இல் அந்த மாநில அரசும் சட்டம் நிறைவேற்றியது. குஜராத்திலும் கூட சென்ற ஆண்டு நரபலியையும் சூனியத் தாந்திரீகங்களையும் தடுப்பதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கேரளம் கூறியிருக்கிறது. அந்தச் சட்டங்களை எடுத்துவைத்துக்கொண்டு, அவற்றில் என்னவெல்லாம் இருக்கிறது என்ற ஒப்பீடுகளோடும், தமிழகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமாகவும் புதிய விதிகளை இயற்றலாம்.
சட்டத்தில் தடை செய்யப்படும் பழக்கங்களில் ஒன்றாக ஜோதிடத்தைச் சேர்க்க வேண்டுமா? பல பெண்கள் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறியே முதிர்கன்னிகளாக வாழ்ந்துகொண்டிருகிறார்கள். ஒரு புதிய கார்ப்பரேட் மருத்துவனை தொடக்கவிழாவுக்கு சக செய்தியாளர்களோடு சென்றிருந்தபோது, நியூராலஜி, யுராலஜி, கார்டியாலஜி என ஒவ்வொரு துறையாகச் சுற்றிக்காட்டினார்கள். ஒரு அறையில் அஸ்ட்ராலடிஜி என்று பெயர்ப்பலகை இருந்தது! “நோயாளிக்கு அறுவை சிகிச்சை முடிவு செய்தால், எந்த நேரத்தில் அதை வைத்துக்கொள்ளலாம் என்று குடும்பத்தினர் ஜாதகம் பார்த்து முடிவு செய்துகொள்ள உதவியாகத்தான் இது,’‘ என்று மருத்துவமனை உரிமையாளரான தலைமை மருத்துவர் விளக்கினார். மருத்துவ அவசரத்தின் அடிப்படையில் நேரத்தை முடிவு செய்வீர்களா, ஜாதக அடிப்படையில் ஜோதிடர் முடிவு செய்கிற நேரத்தில் அறுவையைத் தொடங்குவீர்களா என்று கேட்டேன். பதிலளிக்கத் திணறிய அவரை, உடன் வந்தவர்கள் “போதும் விட்டுவிடுங்கள்” என்று எனக்கு சைகை காட்டி மீட்டார்கள்! எண்ணற்ற இல்லங்களில் ஜாதகம் எழுதப்படுகிற நிலையில், அது பற்றியும் ஆராயலாம்.
ஒரு மாவட்டத்தின் முன்னோட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழுவினர் இந்த மே 7 அன்று நடத்திய இணையவழிக் கூடுகையில், ‘அறிவியல் பார்வையும் கடவுள் நம்பிக்கையும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் வி. முருகன் உரையாற்றினார். தொடர்ந்து ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஏன் தேவை?,” என்ற விவாதத்தில் பேராசிரியர் பொ. ராஜமாணிக்கம், எழுத்தாளர்கள் சேதுராமன், மோசஸ் பிரபு. ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். ஆசிரியர் வை. கருணாகரன் தொகுத்தளித்தார். அந்த நிகழ்வில் நான் பகிர்ந்துகொண்ட கருத்துகளைத் தொகுத்து இந்தக் கட்டுரையைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறபோதே, தொக்கம் எடுத்தல், பேய் ஓட்டுதல் போன்ற அறிவியலுக்குப் புறம்பான செயல்களால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழப்பார்களானால் அந்த “சிகிச்சை” அளித்தவர் மீதும், உடனிருந்தோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ள செய்தி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தன்னளவில் இதைச் செய்ய முடிகிறபோது, மாநில அரசு விரிந்த அளவில் வலுவான முறையில் செய்ய முடியும்.
தமிழக அரசே, சாத்தியமா, மாறுமா என்றெல்லாம் கேட்டுத் தள்ளிப்போட்டுக் கொண்டிராமல், முதலில் இதற்கான உரையாடலைத் தொடங்குங்கள். இதில் அக்கறை உள்ள அனைவருடனும் உரையாடுங்கள். என்னென்ன பழக்கங்கள் இருக்கின்றன, எவையெல்லாம் ஆபத்தானவை, எவையெல்லாம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பறிப்பவை, எவையெல்லாம் பெண்களின் சுயத்தை அழிப்பவை என்று பட்டியலிட்டு, அதிகளவு சரியான சட்டத்தை உருவாக்குங்கள்.
இத்தகைய விரிவான விவாதத்தைப் பல அமைப்புகளையும் அழைத்து நடத்தி, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உட்பட பங்கேற்கச் செய்து, ஒரு முழுமையான அறிக்கையை, சட்டத்திற்கான ஒரு முன்வரைவைக்கூட உருவாக்கி அரசிடம் அளிக்கலாம். அந்த அமைப்புகள் தங்களின் செயல் நிரலில் இதை இணைத்துக்கொள்ளலாம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிற சமுதாயம் அறிவியல் பார்வையைப் புறக்கணிக்கிறபோது அபத்தங்களே அறிவியல் உண்மையாக ஏற்கப்படும் சோகம் நிகழ்ந்துவிடும். அறிவியலாளர் மாநாடுகளிலேயே அந்தக் காலத்திலேயே இங்கே ஆகாய விமானம் இருந்தது, செயற்கைக் கோள் பறந்தது, ஏவுகணை பாய்ந்தது, வேற்றுக் கோள் பயணம் நிகழ்ந்தது, மாற்றுத் தலையைப் பொருத்தும் “பிளாஸ்மா” சிகிச்சை நடந்தது என்று “மேலிட” அங்கீகாரத்தோடு “ஆய்வுரை” அளிக்கிறவர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்.
சுதந்திர இந்தியாவின் முற்போக்கான அரசியல் ஆவணமான அரசமைப்பு சாசனம் மக்களின் நம்பிக்கை உரிமைகளை (நம்பாமலிருக்கும் உரிமையையும்) உறுதிப்படுத்துகிறது அறிவியல் மனப்பான்மையை வளர்க்கிற கடமையைக் குடிமக்களுக்கு வழங்குகிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் அந்த நம்பிக்கைகளைத் தடுக்காது. அவமானகரமான, ஆபத்தான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் தொடக்கப்புள்ளியாக இருக்கும். அது தேசத்தின் பாய்ச்சலை உறுதிப்படுத்தும் தொடர்புள்ளிகளாகவும் அமையும்.
கட்டுரையாளர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.