தீநுண்மியை வெல்வோம்…
திக்கெட்டும் சூழ்ந்திருக்கும் தீநுண்மியின் அச்சுறுத்தல்
திராவகமாய் முழ்கடிக்கும் திங்களெல்லாம் உனைமுடக்கும்…
பனையெட்டும் பால்நிலவை பாவையாய்க் கண்டவனும்
தனைமட்டும் காப்பதற்காய் நாவடக்கி நாணுகிறான்…
பெருந்துயர் எவையெனினும் பேரிடர் தோன்றிடினும்
நெடுந்துயர் களைந்திடவே கடுந்தவம் புரிவோமா…?
இருந்துங்கெடல் இழுக்காம் தமிழ்க்குடி தமைஈன்ற
அருந்தழல் அரசான்ட ஆதியவளாம் தமிழன்னைக்கு…
கொடும்பிணியோ அஞ்சோம் கொலைவாளோ அஞ்சோம்
கடும்பனியோ அஞ்சோம் மலைமுகடாய் நெஞ்சம்…
பொறுத்தல் முறையே தமை வருத்தல் பிழையே இவை
மறுத்தல் குறையே இனி ஒருத்தல் நிலையே அவையும் ஒறுத்தல் மலையே…!
விடும்பகை யொழித்தல் மரபே கடுஞ்சொல் மழித்தல் அறமே
கெடுவினை யழித்தல் தரவே யார்மாட்டும் மடுமலர் கொய்தல் திறனே…!
திறம்பட யெழுதல் இனிதே அதனினும் தமிழ்ச் சுவைதனைச் சொரிதல் இதமே அதனிடைப்
பெறுஞ்சுனை வேய்தல் அரிதே அதிலும் மிதமாய் கொய்தல் வலிதே…!
சுற்றமெலாம் ஆற்றுங்கால் வீருகொண்டே தொடருங்கால்
நற்றமிழே வாழியெனும் நாவாறச் சொல்லுங்கால்…
ஆற்றிடுவோம் செயல்கள்தனை கலைந்திடுவோம் மடமைதனை
நாற்றங்கால் பயிர்போலே நாமிருக்க ஊன்றிடுவோம் உடனெழுவாய் தமிழாளா…!
– கௌதமன் நீல்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.