இறப்பு மனிதனை வியப்பிலாழ்த்தும்; பயமுறுத்தும்; விடுதலை உணர்வளிக்கும். அது அவனுடைய வயதையும் வாழ்நிலைகளையும் பொறுத்தது. ஆனால் சாதாரண மனிதர்கள் யாரும் தங்களுக்கு ஒரு கல்லறை வேண்டுமென்றோ அது எப்படியிருக்க வேண்டுமென்றோ நினைப்பதில்லை. வாழும்போதே வீடில்லாதவர்கள்தான் அநேகர். அப்படியிருக்கும்போது இறந்தபிறகு ஒரு சமாதி, நினைவுச் சின்னம் அல்லது கல்லறை வேண்டுமென்று எப்படி நினைப்பார்கள். ஆனால் அரசர்கள், கவிஞர்கள், சாமியார்கள் தங்கள் சமாதி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்க முடியும். அவர்கள் நினைக்காவிட்டால்கூட அவர்களது உண்மையான தொண்டர்களோ அல்லது அவர்களது பெயர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ கண்டிப்பாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்புவார்கள். இதில் கவிஞர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் வாழ்வைப் பற்றி எவ்வளவு பாடியிருக்கிறார்களோ அதேபோல் மரணத்தைப் பற்றியும் செய்திருக்கிறார்கள். இயற்கையாகவே கல்லறையிலும் கவிதை புனையத்தானே செய்திருப்பார்கள்.
மேலை நாடுகளில் கவித்துவமான கல்லறைகள் குறித்து பார்க்கும்போது ஷேக்ஸ்பியரின் கல்லறையில் காணப்படும் இரு வரி வாசகமும் ஒரு கவிதையும் புதிராக இருக்கின்றனவாம். முதலில் காணப்படும் வரிகளை இப்படி மொழியாக்கம் செய்யலாம்.
‘அறிவில் நெஸ்டர்;
தத்துவ புலமையில் சாக்ரட்டீஸ்;
கவித்துவத்தில் விர்ஜில்.
அவனை மண் உள்வாங்கிக் கொண்டது;
மக்கள் துக்கத்தில் மூழ்கினர்;
ஒலிம்பஸ் அவனை ஐக்கியப்படுத்திக் கொண்டது’
இதற்கு வேறொரு விதமாகவும் பொருள் கொள்ளப்படுகிறதாம். இந்த வரிகள் ஷேக்ஸ்பியரைக் குறிப்பதில்லை என்றும் அந்த வரிகளுக்குப் பொருள்
‘நெஸ்டரின் அறிவை,
சாக்ரட்டீசின் புலமையை,
விர்ஜிலின் கவித்துவத்தை
மண் உள்வாங்கிக் கொண்டது;
மக்கள் துக்கப்பட்டனர்;
ஒலிம்பஸ் ஐக்கியப்படுத்திக் கொண்டது’ என்பதாம்.
அடுத்து அவருடைய கல்லறையில் எழுதியிருந்த கவிதையைப் பார்ப்போம்.
Stay Passenger, why goest thou by so fast? Read if thou canst, whom envious Death hath plast |
(As modernized by Katherine Duncan-Jones)
இந்தக் கவிதை குறித்து பெரும் ஆராய்ச்சி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
‘கல்லறையைக் கடக்கும் பயணியே
விரைந்து செல்வதேன்?
இங்கு இருப்பவர் யாரென்று அறிவாயா?
பொறாமை கொண்ட இறப்பு
அடக்கம் செய்த ஒருவர்.
எழுத்து அவருடன் இறந்துவிட்டது.
இங்கு செதுக்கியிருக்கும் சித்திரமெல்லாம்
கலையல்ல; அவரது காலடிக்கு
செய்யும் சேவகம்.’
என்பது சற்று எளிமையான மொழியாக்கம். ஆர்வமுள்ளவர்கள் அந்த ஆய்வுகளைப் படிக்கலாம். அவருக்கு நினைவுச்சின்னம் தேவையா என்று இன்னொரு கவிஞர் கேள்வி எழுப்புகிறார்.
‘என்னருமை ஷேக்ஸ்பியரே
உன் ஆயுட்கால உழைப்பிற்கு
உன் பெருமைமிகு உடலுக்கு
நினைவுச் சின்னம் ஒன்று வேண்டுமா?
புனித அங்கங்களுக்கு
வான் நோக்கிய கோபுரமா?
எங்கள் நினைவில் நீங்கா மைந்தனே
புகழின் அருந்தவப் புதல்வனே
உன் புகழுக்கு இந்த அற்பங்களெல்லாம்
ஈடாகுமா?
என்றென்றும் நிலைத்திருக்கும்
அதிசய நினைவுச் சின்னம் ஒன்று
நீயே எழுப்பிகொண்டாய்.
உன் திறமை காணா
மந்த இலக்கிய உலகம்
உன் கவிமழை கண்டு மயங்கியது.
உன் மதிப்புறு நூல்களில்
மந்திரம் போன்ற சொற்கள்
ஆயிரம் இதயங்களில்.
ஆழப் பதிந்தன.
உன் மரணத்தால்
துயருறுவதாய் கற்பனை செய்தாலும்
உன் சிந்தனைச் செறிவு
எங்களைப் பளிங்காய் மாற்றும்.
எங்கள் மனக் கல்லறையில்
மாண்புடன் நீ வீற்றிருப்பது கண்டு
மன்னர்களே மரணத்திற்கு ஆசைப்படுகின்றனர்.’
(ஷேக்ஸ்பியர் குறித்து ஜான் மில்டன் எழுதிய கவிதை.)
தனி நபர்கள் குறித்து நினைவுக் கவிதைகள் எழுதப்படுவது இயல்பு. ஒரு இனத்துக்கே, ஒரு நாட்டுக்கே கவிதையில் சமாதி சமைத்தத்தைப் பார்ப்போமா?
உன் கல்லறை
சமரசம் உலாவும்
இங்கிலாந்தில்
எழும்வரை
உன் தறியே
உனக்கு பாடைத்துணி நெய்யும்
உன் கலப்பையும் களைக் கொத்தியும்
மண்வெட்டியுமே
உன் சவக்குழி தோண்டும்;.
சமாதியும் கட்டும்.
(ஷெல்லி – மென் ஆப் இங்கிலாந்து)
இங்கிலாந்துத் தொழிலாளர்கள் தங்களது நிலைமையை எதிர்த்து கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பது குறித்த ஷெல்லியின் கவிதை இது.
அடுத்து ஹென்றிக் ஹீனி ஜெர்மனியின் நெசவாளர்கள் பாடுவதாக எழுதியது.( The Silesian Weavers)
………………..
பொய்யே தாய்மொழியாய்ப் போன
தந்தைநாடே! உனக்கும் ஒரு சாபம்.
வெட்கமும் அவமானமும் அல்லாமல்
வேறென்ன விளைகிறதிங்கே?
மலருமுன்னே வதங்கும் மலர்களிங்கே!
பூசணங்கள் புழுக்களுக்குத் துணைபோகுமிங்கே!
நாங்கள்நெய்கிறோம்; நாங்கள் நெய்கிறோம்
தெறித்தோடும் ஓடம்
முக்கி முனகும் தறிச் சட்டம்
இரவும் பகலும் இமை மூடாது இயங்குகிறோம்.
புராதன ஜெர்மனியே!
மூன்றடுக்கு சாப இழைகள் கோர்த்து
உனக்கொரு பாடைத் துணி நெய்கிறோம்.
நாங்கள் நெய்கிறோம்; நாங்கள் நெய்கிறோம்.’
இப்படியெல்லாம் பாடி சோசலிசத்தை நோக்கிப் போன ஹீனி இறுதியில் மதத்திற்கே திரும்பினார். அதனால்தான் என்னவோ அவரது கல்லறையில் இப்படி எழுதியிருந்தது.
அலைந்து திரிந்து
சோர்வுற்ற நான்
என்னுடய ஆலயத்தையும்
சொர்க்கத்தையும்
எங்கே காண்பேன்?
என் சமாதி
பனைக்கூட்டத்தின் அடியிலா?
ரைன் நதிக்கரையில்
லிண்டென் மரங்களடியிலா?
முகந்தெரியா அன்னியனின்
கரங்களால் பாலைவனப் படுகையில்
புதைக்கப்படுவேனா?
நேசமிகு கடற்கரையில்
பாசமிகு மணலால்
மூடப்படுவேனா?
இவைகளில் என்ன இருக்கிறது?
கடவுளின் விண்ணுலம்
நம் மண்ணுலகைவிட விரிந்தது.
சொர்க்கத்தில் ஆடும் நட்சத்திரங்களே
என் சமாதியின் ஒளி விளக்குகள்.
காதலிக்கு பளிங்கில் கல்லறை காட்டிய ஷாஜஹானைப் போல தன் காதலியின் கல்லறையின் அருகிலேயே படுத்துக் கிடக்கிறேன் என்கிறார் எட்கர் ஆலன் போ,
‘இரவெல்லாம்
அலையேற்றத்தின் அருகில்
ஓலமிடும் அலையின் ஓரத்தில்
கடலருகே
அவள் கல்லறையில்
என் வாழ்வும் என் இணையுமான
என்னருமை அனாபெல்லின்
பக்கத்தில் படுத்திருந்தேன்.’
கல்லறைகளில் கவிதை எழுதுவது இருக்கட்டும். கவிதையே கல்லறையான நிகழ்வும் நம் தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது. அறம் வைத்துப் பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் எனும் பல்லவ மன்னன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தணியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.
“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!”
தன் கல்லறையில் தமிழ் புத்தகங்களை வைத்துப் புதைக்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயரும் உண்டு. அவர்தான் ஜி.யு.போப். முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்
இறப்புக்கு பின் தனது கல்லறையில்’இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை)
தமது கல்லறைக்கு செலவிடும் தொகையில் ஒரு சிறு பகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். இதன்படி பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் செல்வ கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
(விக்கிபீடியா – தமிழ் இலக்கண நூல் ;டாக்டர் ஜி.யூ.போப். பக்கம் 7-30))
சாவு பற்றி எழுதினாலும் சரி வாழ்வு பற்றி எழுதினாலும் சரி சாவா இலக்கியம் படைக்கிறார்கள் சான்றோர்கள்.