சொமேட்டோ, சுவிக்கி, ஓலா, ஊபர் போன்ற நிறுவன ஊழியர்களை முறைசாரா ஊழியர்கள் என அறிவித்து அதன் மூலம் அவர்களை ‘முறைசாரா ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பு சட்டம் 2008’ இன் கீழ் கொண்டுவருமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் என்னவிதமான ஊழியர்கள்? எந்தவித சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லாத ஒப்பந்த ஊழியர்கள். அவர்கள் கிக் (gig) ஒர்க்கர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். (இந்த சொல் 1915இல் ஜாஸ் இசைக் கலைஞர்களால் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சிகளைக் குறிக்க உருவாக்கப்பட்டதாம். காலப்போக்கில் எல்லாவிதமான இசைக் கலைஞர்களுக்கும் இசைத்துறைக்கு அப்பாற்பட்டும் பயன்படுத்தப்படுகிறதாம்.) கிக் பொருளாதாரம் (Gig Economy) எனப் பெயரிடப்பட்டுள்ள இது அமெரிக்காவில் வளர்ந்துவருகிறதாம்.
கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா, சீனா, அமெரிக்க, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இவர்களது சேவை பளிச்சென்று தெரிய தொடங்கியது. அதோடு இவர்களது பிரச்சினைகளும் முன்னுக்கு வந்தன. சீனாவின் மிகப்பெரிய பத்திரிக்கையான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்களின் சேவையை முதல் பத்து பணிகளுக்குள் ஒன்றாக அறிவித்தது.
இவர்களுடைய பிரச்சனைகளை ஆய்வு செய்த ஒரு கட்டுரை சீனாவின் சமூக ஊடகங்களில் 200மில்லியன் முறைகள் பகிரப்பட்டதாம். பல வேலை நிறுத்தங்களும் நடைபெற்றனவாம். இறுதியில் அரசாங்கம் தலையிட்டு உணவு வழங்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தியது. ஊழியர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்; செயலியில் ஊழியர்களை மதிப்பீடு செய்யும் கணக்கீடுகளை (optimisation algorithams) நிறுவக்கூடாது; சமூக காப்பீடுடன் கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்; போன்ற வழிமுறைகளை இயற்றியது.

ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் ஊழியர்களது நிலைமைகள் குறித்து அதிருப்தி நிலவியதை அரசாங்கம் உணர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்காவிலும் விநியோக ஊழியர்கள் இன்ஸ்டா கார்ட் செயலியை நீக்கி தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இந்தப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் மட்டுமே போராடும் நிலைமை உள்ளது. தங்கள் ஊதியத்தை ரூ. 35இலிருந்து ரூ. 15 ஆக குறைத்ததை எதிர்த்து சுவிக்கி ஊழியர்கள் ஹைதராபாத்தில் 27நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர் நல ஆணையர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்திய பின்னே அது விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த வருடம் ஜூலை மாதம் சொமேட்டோவின் தொடக்கப் பங்கு (IPO) விற்பனையின்போது அந்த நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு குறித்து அதன் பணியாளர்கள் டுவிட்டர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தனர்.
சீனாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்றது போல இந்தியாவிலும் இந்தப் பணியாளர்களின் நிலைமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அப்பொழுதுதான் நமது செயலியில் ஒரு வாகனத்தில் அமர்ந்து வரும் சிற்றுருவாகத் தெரியும் படத்தின் பின்னே உள்ள ஒரு மனிதன் நமது வசதியான உணவுப் பழக்கத்திற்காக என்ன விலை கொடுக்கிறார் என்பது தெரியும்.
(இந்து ஆங்கில நாளிதழ் சவுமியா அசோக் அவர்களின் கட்டுரை மற்றும் இணையதளத் தகவல்களிலிருந்து)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

