0
செல்பேசியில் மழலைக்குரல்
சட்டென அமைதியானது
தோட்டத்துச் சிள்வண்டு.
0
சிக்கிக்கொண்டது பட்டம்
வேகமாய் இழுக்கையில்
கூடவே வருகிறது ஒற்றைப்பூ.
0
கோழியின் றெக்கைகள்
அகலமாய் விரிந்தன
பதுங்கும் குஞ்சுகள்.
0
கதவிடுக்கில் உற்றுப்பார்க்கும்
இரண்டு கண்களிலும்
மஞ்சள் நிறம்.
0
வீசியெறிந்த தானியங்கள்
கொத்தித் தின்னும் புறாக்கள்
வலைக்குள் கால்கள்.
0
பேருந்துப் பயணம்
இறங்கவிடவில்லை
சன்னலோரத் தூக்கம்.
0
நின்றெரியும் சுடர்
போகும் பக்கமெல்லாம்
இழுத்துச்செல்லும் காற்று.
0
மேடையில் குவிந்திருக்கும்
பிரம்மாண்டமான வெளிச்சம்
அரங்கம் முழுக்க அடர்ந்த இருள்.
0
புல்வெளிக்குள்
வெறுங்காலால் நடந்தேன்
எத்தனையெத்தனை பனிமுத்தங்கள்.
0
குளக்கரையில் கொக்கு
மிரட்சியோடு பார்க்கிறது
செத்து மிதக்கும் மீன்களை.
0
பூங்காவிற்குள் நுழைகையில்
தோளுரசிப் போகின்றன
இணைந்த பட்டாம்பூச்சிகள்.
0
இரயில் பயணம்
பாலத்திலிருந்து பறக்கிறது
காலியான பாலித்தீன் பை.
0
தொடர் மழை நாள்கள்
கழட்டி வைத்த காலணிக்குள்
இரு குட்டித் தவளைகள்.
0
பழக்கடையைச் சுற்றி வந்தேன்
காணவேயில்லை
ஒரு தேனீயைக்கூட.
எழுதியவர்
மு.முருகேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.