
பழுத்த வெள்ளரிப் பழம்
வெடிக்கும் அறுவடையின்றி
விவசாயி மனம்
காய்ந்து கிடைக்கும் நதி
கூழாங்கற்கள் பேசும்
புரண்ட கதைகள்
கடலுக்குள் மீனவன்
தினமும் பொட்டு இடுகிறாள்
முகத்தில் அவள்
பண்பலையில் பாட்டு
நாட்டியம் பயில்கின்றன
திரைச்சீலைகள்
அவளின் அழகிற்கு
ஒவ்வொன்றும் பொருந்துகிறது
யாரோ எழுதிய கவிதை
மணநாள் ஆல்பம்
மாறாமல் இருக்கும்
குழந்தைகள் சிரிப்பு

நிற்கிறது
விட்ட இடத்திலேயே
ஊர் சுற்றிய தேர்
கேட்கும்
பல்லாயிரம் குரல்கள்
ஆளில்லா காடு
பாறையில் மோதி
உடையவில்லை
நதியில் போகும் நிலா
அந்திப் பொழுது
ரசிக்க வைக்கும்
குழந்தையின் சிணுங்கல்
வரைந்த ஒற்றை கோடு
சிறந்த ஓவியன் கையில்
எத்தனை நளினம்
இன்னும் கூடடையவில்லை
இருள் சூழ்கிறது
மழையில் காடு
சருகுகள் உதிர
புன்னகைக்கிறார் ஞானி
நாளை பூக்கள்
காற்றை பெருமை செய்கிறான்
இசைக்கும் தம் இசையால்
புல்லாங்குழல் விற்பவன்
இங்கேதான் இருக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்
காதில் கேட்கும் குயில்

கோடையில் வரும் மழை
விட்டுவிட மனமில்லாமல்
சொட்டுகிறது இலை
அருவியின் சலசலப்பு
பொன்வண்டின் ரீங்காரம்
எதற்கோ தலையாட்டும் நாணல்
ரேஷன் கடை வாசலில்
கூட்டமாய் இருக்கும் காட்சி
சிட்டுக்குருவிகள்
வேலூர் இளையவன்
(முனைவர் க.இராமஜெயம்)

