ஆதிராவின் ஹைக்கூ முத்துக்கள்
1
கடலின் கோபம்
கரையில் வாரியிறைத்தது
நெகிழிக் குப்பைகளை.
2
குழலோசை
அந்திப்பொழுதை இனிதாக்கியது
தனிமை.
3
உயர்ந்த மலைகள்
நீண்டுகொண்டே செல்கிறது
தூக்கணாங்குருவிக் கூடு.
4
நிலவொளி
தொலைவில் மங்கலாகத் தெரியும்
வசந்தகாலக் கொக்கு.
5
வறண்ட பூமி
தண்ணீர்த் தேடித் தவமிருக்கின்றன
தாயின் கால்கள்.
6
தெருநாய் ஓலம்
சன்னலினூடே உள்நுழைகிறது
நிலவொளி.
7
எழுந்துவரும் அலைகள்
மேடும் பள்ளமுமாக நிறைந்திருக்கிறது
மீனவர் வாழ்க்கை.
8
தெருவில் கலவரம்
மௌனமாய் ஓய்ந்தடங்குகிறது
இறுதி ஊர்வலம்.
9
நல்ல விளைச்சல்
அறுவடைக்குத் தயாராயிருக்கிறது
வங்கிக் கடன்.
10
இலையுதிர் காலம்
அதிகளவில் நிரம்பியுள்ளது
முதியோர் இல்லம்.
11
சீறும் புயல்
வெள்ளத்திலும் பாதுகாப்பாய் இருக்கிறது
சிறுவனின் கைகளில் ஆட்டுக்குட்டி.
எழுதியவர்

– புதுகை ஆதிரா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எனது ஹைக்கூ கவிதைகளின் தேர்விற்கு மகிழ்வுடன் நன்றி🙏
புதுகை ஆதீரா.