Hakim Vitra Hanuman ShortStory by Raman Mullipallam ஹக்கீம் விற்ற ஹனுமான் சிறுகதை - இராமன் முள்ளிப்பள்ளம்




பல வகை கார்கள் அடுத்தடுத்து பந்தயத்திற்கு தயாரானது போல் நின்றன. விசில் கொடுத்தால் சீறி ஓடும் கார்கள், ஆனால் விசில் வராது. எச்சரிக்கை விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறினால்  உடனே காதைப் பிளக்கும் ஒலியுடன் எல்லா கார்களும் தூளை எழுப்பி புகையை  பரப்பி ஓடத் துவங்கும். ஆனால் அதற்கு முன் நூறு வினாடிகள் விற்பனைக்குரிய பொழுது. ஹக்கீம் வாழ்க்கை இந்த நூறு நொடிகளின் விற்பனையில்தான் உள்ளது. அது ஐந்து சாலைகளின் சங்கமம். முட்டும் சாலைகளை முட்டுவதே அவன் போராட்டம். கார் காராக சென்று குனிந்து ஓட்டுனர் இருக்கையில் இருப்பவரிடம் அவன் அனுமான் பொம்மையை காட்டுவான், ‘’அய்யா ஐம்பது ரூபாய்’’ என்பான். சிலர் வாங்குவார்கள். பலர் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். இவன் கழுத்தை திருப்பிக் கொண்டு வேறு ஒரு காரை நாடுவான்.

ஒரு முறை அப்படி ஐந்து முக்கு சாலையில் அனுமானை விற்றுக் கொண்டிருக்கையில் ஒரு கார் ஓட்டி ஆவனைப் பார்த்து கை அசைத்தார். அவனும் வேகமாக அந்த காரிடம் போக ஒரு  சிறு பெண் அவனோடு மோத அவனுடைய பல அனுமான் பொம்மைகள் கீழே விழுந்து முறிந்தன. அவன் உடைந்த பொம்மைகளை குனிந்து பொறுக்கையில் அந்த பெண் கார் ஓட்டுபவனிடம் பேனா கொடுத்து பணம் பெற்றதை பார்த்தான். அப்படியானால் அந்த கார்க்காரன் அவனை அழைக்கவில்லை. தவறு அவனுடையதுதான். எச்சரிக்கை விளக்கு சிவப்பானது. அடுத்த சாலைக்கு செல்ல வேண்டும். அந்தப் பெண் அவனிடம் வந்தாள்.

’’அண்ணே நிறைய பொம்மை உடைஞ்சு போச்சா அண்ணே ?”’ 

அவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான். மீண்டும்

’’அண்ணே உடைஞ்ச பொம்மைக்கு நான் காசு கொடுத்திடறேன்’’

‘’நீ ஏன் கொடுக்கனும்’’

‘’அந்த கார்க்காரர் உங்களத்தான் கூப்பிட்டாரு ஆனா நான் போனதால ஏங்கிட்ட பேனா வாங்குனாரு’’

’’எப்படி சொல்ற’’

‘’அவர்தான் சொன்னாரு உன்னய கூப்பிடல்ல அனுமான் பொம்மைய வாங்கனும்னார், அதுக்குள்ள பக்கத்துல இருந்த அம்மா சொன்னாங்க, ‘’ ’’பாவம் இந்தப் பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா இவகிட்ட பேனா வாங்குங்க’’ அப்படி அந்த அம்மா சொல்லிச்சு’’

‘’நீ எனக்கு உடஞ்ச பொம்ம காசு தர வேணாம்.’’

சிவப்பு விளக்கு பச்சையானது. இருவரும் கார்களை நோக்கி ஓடினார்கள்.

மாலை இருளாக மாறியது, ஹக்கீம் அந்தப் பெண்ணை பார்த்தான். அவளும் தன் விற்பனை பொருட்களான பேனாக்களை ஒரு பெரிய பையில் போட்டு முடிச்சு போட்டுக் கொண்டிருந்தாள். அவள் அவன் கண்களுக்கு அழகிய குழந்தை போல் தென்பட்டாள். அவனுக்கு உறவு இல்லை. வட இந்தியாவிலிருந்த உத்திர பிரதேசத்தின் ஏழ்மையிலிருந்து தப்பித்து வந்தவன். சில மாதங்கள் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தான். அங்குதான் பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்டான். அந்த ஃபேக்டரி மூடப்பட்டது.

பின் அவனே இந்த பொம்மைகளை தயாரிக்க துவங்கினான். நைலான் சாக்கு உற்பத்தி செய்த கம்பெனியில் பிளாஸ்டிக் சீவல்களை வாங்கினான். அதை உருக்கி மோல்டில் போட்டு அனுமாரை தயாரித்தான். காரின் முன் இருக்கைகள் மேலே பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிக்கு பின்னே அவன் அனுமார் தொங்குவார். பறக்கும் நிலையில் உள்ள அனுமார். ஹக்கீம் தயாரிப்பது. அதுவே அவன் சரக்கு. அதை விற்பது ஐந்து சாலை சந்திக்கும் சிக்னலில். மீண்டும் அந்த சிறு அழகிய பெண்ணைப் பார்த்தான். உறவு இல்லாத அவன் அந்த பெண்ணை மனதளவில் உறவாக்கிக் கொண்டான். அவள் சாலையோரம் சென்று மறைந்தாள். 

அடுத்த நாள். அவன் விற்பனை துவங்க வேண்டிய நேரம். வேலையை துவக்காமல் காத்திருந்தான். அந்த சிறு பெண்ணுக்காக. இரண்டு மணி நேரம் ஓடியது. விற்க மனமில்லாமல் தேநீர் கடைக்கு சென்றான். அது தள்ளு வண்டி கடை. அவனை பார்த்ததும் கடைக்காரன் ஒரு காகித கோப்பையில் சூடான தேநீரை ஊற்றிக் கொடுத்தான். ஹக்கீம் உறிஞ்சி குடித்தான்

’’என்ன பாய் இன்னும் போனி ஆகல்லயா’’

’’இல்ல இந்தாங்க ‘’ தள்ளு வண்டிக்காரன் கையில் தேநீருக்கான ஐந்து ரூபாயை வைத்தான்

மீண்டும் சாலை பரபரப்பில் நுழைந்தான். இப்போது அனுமாரை முப்பது ரூபாய்க்கு விற்க முடிவு செய்தான். காரில் இருந்தவர். ‘’இருபது’’ என்றார்’. அவனும் சரியென தலையாட்டி அனுமாரை இருபது ரூபாய்க்கு கொடுத்தான். அவன் சரக்கின் விலையை அவ்வப்போது வயிற்றின் பசிக்கு ஏற்ப மாற்றுவான். முதலில் எப்படியும் நூறு ரூபாய் ஈட்ட வேண்டும். அந்த நூறு என்பது ஒரு நாள் உணவுச் செலவு. அதன் பின் அவன் சொல்வதே விலை. ஐம்பதிலிருந்து அறுபது வரை விலை உயரும். அனுமானே அவன் உணவுக்கு வழி செய்பவன்

அந்த நாள் ஹக்கீமுக்கு சோகமாக இருந்தது. சோகமாகவே முடிந்தது. ஏன் அந்த குழந்தை முகம் கொண்ட பேணா விற்கும் பெண் வரவில்லை?. 

அடுத்த நாள் விற்பனையை எட்டு மணிக்கு துவக்கினான். முதல் அரை மணி நேரத்தில் ஐந்து அனுமான்களை ஒவ்வொன்றும் முப்பது ரூபாய்க்கு விற்று விட்டான். நூற்றி ஐம்பது கையில் வந்து விட்டது, இனிமேல் ஒரு அனுமான் அறுபது என தீர்மானித்தது மட்டுமல்ல விற்பனையை குறைத்து விட்டு அந்த குழந்தை முகத்தை தேட துவங்கினான். ஐந்து சாலைகளையும் குறுக்கும் நெடுக்குமாக கடந்தான். துழாவினான். பூ விற்போர், துணித் துவாலைகள் விற்போர், பலூன் விற்போர், குடைகள் விற்போர் என இவனை அறிந்தவர்கள் அனைவரும் இவன் என்ன செய்கிறான் என வியந்தனர். மிக மெதுவாக விற்றான், ஆனாலும் இருபது அனுமான்களை விற்றிருந்தான். ஆக உணவுச் செலவுக்கு விற்றது நூற்றி ஐம்பது ரூபாய், பின் அறுபது ரூபாய்க்கு விற்றது 1200 ரூபாய். மகிழ வேண்டிய அவன் சோகத்தை வலிய இழுத்து போர்த்திக் கொண்டான். அந்த சிறிய அழகிய பெண் வரவில்லையே இந்த ஆயிரத்து மூன்னூற்று ஐம்பது ரூபாய் ஆனந்தத்தை தரவில்லை.  

நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின, வாகனங்கள் ஓடின, அவற்றின் பின்னே ஹக்கீம் ஓடினான். அனுமான் பறந்தார். பணத்தை கொடுத்தார். மனதின் ஒரு மூலையில் அந்தப் பெண் குடியிருப்பதை அறிந்தான். அன்று ஒரு மழை நாள். எட்டு மணிக்கு துவங்கும் சிவப்பு பச்சை கண்ணாமூச்சி விளையாட்டு துவங்கவில்லை. சிக்னல் இல்லை, யாரும் எப்படியும் கடக்கலாம் விபத்து வந்தால் அது அவரவர் சக்கர எழுத்து. தலை எழுத்து என்பதெல்லாம் சாலை விபத்தில் இல்லை.

ஊர்திகள் நிற்காமல் ஓடுகையில் விற்பனை செய்ய முடியாது. ஆகவே சிவப்பு பச்சை விளையாட்டு துவங்குவதற்கு காத்திருந்தான். அப்போதுதான் அந்த பெண்ணை கண்டான். அவன் மனதில் இருந்த நகலின் நிச உருவத்தை கண்டான். அவள் தேநீர் குடிக்கும் தள்ளு வண்டி அருகே. அவன் கால்கள் ஓடின. மூன்று சாலைகளை கடந்தான். நான்கு ஓட்டுனர்கள் அவன் மீது வசை பாடினார்கள். மூச்சு இரைக்க அவள் அருகில் நின்றான். ஒரு கோடு அவள் வலது கண்ணத்தில், மற்றும் ஒரு கோடு அவள் இடது கண்ணத்தில் அவனை பார்த்து சிரிப்பதற்காக வரையப்பட்டது. அவனும் சிரித்தான். 

’’பாப்பா டீ குடிச்சியா’’

’’இல்ல டீ நான் தரல்ல காசு இல்ல டீ வேணும்னு கேட்டா நான் தர முடியாது’’ தேநீர் கடைக்காரன் சொன்னான்.

’’பாப்பாவுக்கு டீ கொடு நான் காசு தரேன்’’ அதோடு பேச்சை நிறுத்தாமல் அவளை பார்த்து கேட்டான்

’’பாப்பா வடை சாப்பிடுறயா’’

அவள் ஆம் என தலையசைக்க இரண்டு வடைகளை எடுத்து அவள் கையில் வைத்தான்.

அவள் காகித கோப்பை தேநீரை மற்றொரு கையில் வாங்க இருவரும் அருகில் இருந்த பாலத்தின் சிறு சுவரில் சென்று அமர்ந்தனர். ஹக்கீம் அவள் முகத்தை பார்த்தான். சிறிது அழகு குறைந்திருந்தது. மேலும் அவள் குழந்தை போன்ற முகம் தற்போது இல்லை. 

’’பாப்பா ஓ பேரு என்ன’’

’’சரஸ்வதி’’ வேகமாக வடைகளை சாப்பிட்டாலும் தெளிவாகவே பதில் சொன்னாள். அவள் டீ குடித்து முடிக்கட்டும் என காத்தான். அவள் தேநீரையும் வேகமாக குடித்தாள். பின் ஹக்கீம் கேட்டான்

‘’ இத்தன நாளா ஏ வரல்ல’’

இப்போது அழுகை அமைதியாக வந்தது. கண்ணீர் அவள் நெஞ்சில் வழிந்து கீழே விழுந்தது. ஹக்கீம் கலக்கம் கொண்டான். அவன் மனதில் இருந்த அவளின் நகலும் அழுவது போல் தோன்றியது. எந்த தயக்கமும் இல்லாமல் அவள் கைகளை பற்றினான்.

’’சொல்லு என்ன ஆச்சு’’

’’என்ன தூக்கிட்டு போனாங்க. ஒரு வீட்ல பூட்டி வச்சாங்க ,என்ன ஒருத்தர் கெடுத்தார்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளிய விட்டாங்க. இப்ப பசிக்குது, இன்னும் திங்க வேணும், குளிக்கனும்’’

ஹக்கீம் கைகள் துடித்தன. நெஞ்சினுள் ஒரு கனல். எழுந்தான், அவள் கை பற்றி இழுத்து சென்றான்.

ஹக்கீமின் அறையில் ஐந்து பேர், ஒவ்வொருவரும் மாத வாடகை ஆயிரம் கொடுத்தனர். நீர் பிரச்சினை இல்லை. ஒரு பெரிய ரூம். ஐந்து பேர் தரையில் புரண்டனர். கழிவறை வெளியே இருந்தது. உடன் தங்கியவர்கள் தம் தம் தொழிலுக்கு சென்றுள்ளதால் இரவு வரை பிரச்சினை இல்லை. ஒரு பெரிய வீட்டின் பக்கத்தில் இருந்த கார் ஷெட் .வீட்டுக்காரர் காரை விற்றதால் இந்த இடத்தை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த ஷெட்டின் மேலே ஒரு சிறிய அறை இருந்தது. முதல் தளத்தில் இருந்த அதற்கு வீட்டின் முன் வாசலில் இருந்த படிக்கட்டுகள் வழியே ஏற வேண்டும். மனதினுள் அந்த மாடி அறையை கொண்டு வந்தான்.

அடுத்த நாள் ஒரு குச்சியில் துணியைக் கட்டி அந்த முதல் மாடி சிறு அறையை மொழுகினான். சரஸ்வதி பார்த்துக் கொண்டிருந்தாள். மிக எளிதாக வீட்டு ஓட்டுனரிடம் பேசி அந்த அறையை வாடகைக்கு எடுத்து விட்டான். சரஸ்வதி மொத்த மார்க்கெட் போய் பேனாக்களுடன் வந்திருந்தாள். இரு நூறு பேனாக்களை இரு நாட்களில் விற்க முடியும் என்றாள். ஒரு பேணாவுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும் என்றாள். அவன் தன் வாழ்வை சரஸ்வதியுடன் துவக்க தீர்மானித்தான்.

ஒரு மாதம் கழிந்தது. . அவள் முகம் மீண்டும் ஒரு குழந்தைத் தன்மையை காட்டியது. என் வயித்துல ஒரு குழந்த இருக்கு, எப்படி வந்துச்சு தெரியுமா ?

அவன் எழுந்தான் ’’வா’   என்றான்

’அவனைத் தொடர்ந்து சரஸ்வதி வெளி மாடிக்கு வந்தாள்.

‘’இங்க பார்’’

’’மல்லிகை ஆ பூத்துருச்சு’’ அவள் கூவலில் ஒரு இனிமை, பின் கூறினான்

‘’ சிக்னல் பக்கத்துல பங்களா வீட்டு வேலியில இருந்து மல்லிகை கொடி பறிச்சேன் அத இந்த ரூமுக்கு வந்த அன்னைக்கே இந்த தொட்டியில பதியம் போட்டேன் இப்ப துளுத்து பூவும் விட்டுருச்சு, குழந்தையும் அப்படித்தான், நீ மல்லிகை கொடி.’’

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *