முஸ்லீம்கள் 2018ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுகை நடத்தி வருவதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது இஸ்லாமிய வெறுப்பு அடிப்படையில் இயங்குகின்ற குழுக்களின் கைவேலையாக இருக்கும் என்றே யாரும் நினைக்கலாம். ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் இப்போது நேரடியாக அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். திறந்தவெளியில் தொழுகைகள் நடத்தப்படுவதை தனது அரசாங்கம் ‘சகித்துக் கொள்ளாது’ என்றும், முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்துகின்ற ஆட்சேபணைக்குரிய மொழியில் கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் கட்டார் முஸ்லீம்களை எச்சரித்திருந்தார்.இதுபோன்ற பிரச்சனைகளை முதலமைச்சர் ஒருவரே உருவாக்குவது மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற செயலாகவே இருக்கிறது. மதநம்பிக்கை கொண்ட முஸ்லீம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்று கூடி ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வது பொதுவான வழக்கம். மற்ற நாட்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நடத்திக் கொள்கின்றனர். இந்த நிலைதான் நாடு முழுவதும் இருந்து வருகிறது. ஏதோ முஸ்லீம்கள் சாலைகளிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து நாளொன்றிற்கு ஐந்து முறை தொழுகைகளை நடத்திக் கொண்டிருப்பதைப் போல, வீட்டில் மட்டுமே முஸ்லீம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்று குறிப்பாக ஹரியானா முதல்வர் எதற்காக உத்தரவிட வேண்டும்?
இரண்டாவதாக முதல்வர் கட்டார் தன்னுடைய உரையில் உண்மைகளைக் கூறுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். குருகிராம் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான முஸ்லீம்களே இருக்கின்றனர். குருகிராமில் அதிக எண்ணிக்கையில் மசூதிகள் இல்லாததால், வெள்ளிக்கிழமை ஜமாஅத் தொழுகையை நடத்துவதில் அவர்கள் பெரும்சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கான இடங்களை வாங்குவதற்கு முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அதிகாரப்பூர்வ நிறுவனங்களால் முறியடிக்கப்படுகின்ற அதேசமயத்தில் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பிரச்சனைகள் எதுவுமின்றி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது அரசு நிறுவனங்களிடம் இருக்கின்ற வக்ஃப் நிலங்களில் மசூதிகள் கட்டிக் கொள்ளலாம் அல்லது தொழுகைக்காக சுற்றுச்சுவர்களுடனான திறந்த வெளிகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை மீட்டுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் நிலத்தை மீளப் பெற்றுத் தருவதாக 2018ஆம் ஆண்டே அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அதன் பிறகு பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மூன்றாவதாக திறந்தவெளியில் தொழுகை நடத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு நிர்வாகத்தால் இப்போது ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு முதலமைச்சரிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. சில அமைப்புகள் பொது இடங்களில் தொழுகை நடத்த 2018ஆம் ஆண்டு மே மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரசு நிர்வாகம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கென்று முப்பத்தியேழு இடங்களை ஒதுக்கித் தந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. இரண்டு ரக்அத்கள் ஓதப்படும். ஒரு குத்பா ஓதப்பட்டால், அது பொதுவாக பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும். குருகிராமில் தொழுகைக்காக அரசால் ஒதுக்கித் தரப்பட்ட பெரும்பாலான இடங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அமைந்திருக்கவில்லை. அவை முக்கிய சாலைகள் அல்லது தொழிற்சாலைப் பகுதிகளை ஒட்டியுள்ள லாரிகள் நிறுத்தப் பயன்படுத்தப்படுகின்ற காலி இடங்களாகவே இருந்தன. தொழுகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, வழித்தடங்கள் எதுவும் தடைபட்டதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. அந்த ஒப்பந்தத்தை இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன? அந்த இடங்களின் எண்ணிக்கையைத் தற்போது பத்துக்கும் குறைவான இடங்களாக நிர்வாகம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசின் நேர்மைற்ற, நியாயமற்ற செயலாக இருப்பதுடன் அது முற்றிலும் ஒருபக்கச் சார்பானதாகவும் இருக்கிறது.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மிரட்டல், அச்சுறுத்தலில் மாநில முதல்வரே ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கு நேர்மாறாக முஸ்லீம்களிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கிய பிற குடிமக்களும் குருகிராமில் இருக்கவே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்பவர்களில் பலர் ஆடை மற்றும் பிற தொழில்களில் பணிபுரியும் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களாக அல்லது அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். போதிய இடவசதியுடன் உள்ள சில தொழிற்சாலைகளில் அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் – பெரும்பாலும் ஹிந்துக்கள் – அங்கேயே தங்கள் தொழிலாளர்களை தொழுது கொள்வதற்கு அனுமதிக்கின்றனர். வகுப்புவாதப் பிரிவினைகள் தங்கள் தொழிற்சாலையில் நடைபெறுகின்ற வேலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது அதன் மூலம் தெளிவாகிறது. ஆயினும் காரணம் எதுவாக இருந்தாலும், அது நேர்மறையான விளைவையே கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் சக ஊழியர்களும், ஹிந்துக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவொரு சம்பவமும் நடைபெற்றிருக்கவில்லை. குருகிராமில் வசிக்கும் பலரும் தொழுகைக்கான இடங்களை வழங்குவதில் ஆதரவுடனே இருந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் இரண்டு இணையான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவதாக தொழிலாளர்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி வெளிப்படுத்திக் காட்டியுள்ள ஒற்றுமை அரசியல். அந்த ஒற்றுமையே பல்வேறு பிராந்தியங்களில் கட்டப்பட்டிருக்கும் வகுப்புவாதச் சுவர்களை உடைத்தெறிந்து, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கத்தைத் தள்ளியதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.
இரண்டாவதாக குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மத்திய ஆளுகின்ற கட்சியின் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் – அவை ஹரியானா முதல்வரின் அல்லது குஜராத் மாநில வருவாய் அமைச்சர் ராஜேந்திர திரிவேதியின் வார்த்தைகளில் தென்படுகின்றன. சாலைகளில் அசைவ உணவுகளை வெளிப்படையாக விற்பது ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக திரிவேதி கூறியிருந்தார். அதுபோன்ற பேச்சுகள் புறந்தள்ளக் கூடியவையாக இருந்தாலும், அவை ஒரு தொகுதியை வலுப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகின்றன. குருகிராமில் தீவிரவாத ஹிந்துத்துவா குழுக்கள் தொழுகையை நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், குஜராத்தில் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அசைவ உணவு விற்பனையாளர்களுக்குத் தடை விதித்து, அவர்களின் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். குஜராத்தில் நடந்தது குஜராத் உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தில் மத்திய மற்றும் மாநில அளவிலான பாஜக தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையிலேயே இருக்கின்றன.இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றாலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மோசமாகச் சித்தரித்து அச்சுறுத்துகின்ற இப்போதைய போக்கு கூடுதல் கவலையளிப்பதாகவே இருக்கின்றது. குருகிராமில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் விஎச்பி தலைவர் ஒருவர் ‘இது தொழுகை அல்ல, ஜிஹாத், பயங்கரவாதம்’ என்று கூறுகின்றார். இது போன்ற பிரச்சாரமே ஹிந்துக்கள் வசிக்கின்ற உள்ளூர்ப் பகுதிகளுக்குள் தெருவோர முஸ்லீம் வியாபாரிகள் நுழைவதை ஹிந்துத்துவா குழுக்கள் வலுக்கட்டாயமாகத் தடுக்கின்ற போது அல்லது முஸ்லீம்கள் வாடகை குடியிருப்பாளர்களாக நிராகரிக்கப்பட்டிருக்கும் பிற குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சாரம் ஒரு சமூகத்தைப் பற்றிய அச்ச உணர்வை உருவாக்க பெரும்பாலும் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இது ஹிந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்ற திட்டமிட்ட உத்தியாகும். அது அவர்களுடைய உன்னதமான தேசியவாதம், பெரும்பான்மைவாதத்துடன் முற்றிலும் பொருந்திப் போவதாக இருக்கிறது.
விவசாயிகள் போராட்டத்தைப் போல் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை வெகுஜனப் போராட்ட அரசியலின் பலத்தால் முறியடித்திட முடியும். ஆனால் அது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு போராட்டத்தின் போது உருவாகும் தன்னிச்சையான சகோதரத்துவ உணர்வுகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டியது அவசியம். பிளவுபடுத்துகின்ற வகுப்புவாத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு எதிராக தன்னுனர்வு கொண்ட போராட்டத்திற்கான அரசியல் நோக்குநிலை நிச்சயமாக இப்போது தேவைப்படுகிறது. தானாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் பிரச்சனையைப் புறக்கணிக்கின்ற எந்தவொரு தற்காப்பு நிலையும், மதவெறி அடிப்படையில் மக்கள் பிளவுபடுகின்ற போது அதிக நன்மையடைகின்ற சக்திகளைத் தைரியப்படுத்துவதை மட்டுமே செய்யும்.
https://www.ndtv.com/opinion/haryana-chief-ministers-deceit-in-handling-the-namaaz-issue-2648573
நன்றி என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.