எங்கள் சமஸ்தானத்தில்
சில வேட்டைநாய்களை வளர்த்து வருகிறோம்
அவை பாய்ந்து பிடித்த திருடர்களை விட
எச்சில் வழியும் நாக்கால்
கவ்வித் தின்ற பிச்சை இலைகளே அதிகம்
இவை
சுதந்திரமாய் திரியும் தெருநாய்கள் என்று
சொல்லப்படுவதுண்டு ஆனால்
இவற்றின் கழுத்தை சுற்றியும் எஜமானனின்
சங்கிலி பிணைக்கப்பட்டுள்ளது
அது யாரைக் கடிக்க வேண்டுமென
மாமாமன்னர்களின் கட்டளைக்குப் பின்னே
பாய்ந்து பிறாண்டத் துவங்குகின்றன
வரி ஏய்ப்பவன் ஊர்ச்சொத்தைக் கொள்ளையடித்து
உலையிலிடுபவன் வருமானத்தை ஏமாற்றி
பொய் சொல்லுபவன் வீட்டிற்கெல்லாம்
ஒருபோதும் போவதில்லை
அவர்கள் போடும் எலும்புத்துண்டிற்கு
அத்தனை ருசி
காலமெல்லாம் அவர்கள்
கால் நக்கி கிடக்கின்றன.
ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்ட
நாய்களிடமிருந்து
ஊர்மக்கள் கேட்டதெல்லாம்
ஊளையிட்டலைந்த
சத்தம் மட்டுமே
அது திருடர்களிடம்
பிடிங்கித் தின்னும்
திருட்டு ஊளையென்பது
உலகிற்கு தெரியாதா என்ன
எதிரிகளின் கழுத்தை கவ்வவும்
வளர்ப்பவன் காலை நக்கித் தின்னவும்
கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன
சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டிருந்தால்
கள்ளப் பணக்காரர்
செல்வமெல்லாம் பிடுங்கப்பட்டு
அரசாங்கத்து கருவூலம் நிறைந்து வழிந்திருக்கும்
அமலாக்கத்துறைகள்
வருமானவரித்துறைகள்
சிபிஜ ரெய்டு
காக்கித் துறைகள்
கருப்பு மன்றங்கள்
இவையாவும்
வளர்ப்பு நாய்களுக்கு
வைக்கப்பட்ட பெயரென்று
நீங்கள் நினைத்தால்
அதற்கு நான் பொறுப்பல்ல
இதுவொரு
பொறுப்பு துறப்பு…
எழுதியவர்
செ. தமிழ்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.