சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி, ஆனால் வர்த்தகம் சீனாவுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இவ்வாறு, இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும்போது ஒரு வர்த்தகப் போரில் இறங்குவது பலன் தராது.
(இந்தக் கட்டுரை 2020 ஜூன் 9 அன்று வயரில் வெளியானது. 2020 ஜூன் 17 அன்று மீண்டும் வெளியிடப்படுகிறது)
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்துக்கு உரையாற்றும் போது, ஒரு ‘ஆத்மநிர்பார் பாரத்’த்துக்கு (சுயசார்புள்ள இந்தியா) வலுவான அழைப்பு விடுத்தார். நமது மக்களிடையே நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது ஒரு மறைமுகமான கண்டனம் வலுத்திருப்பது போல் தோன்றுகிறது. இந்த ஆத்திரம் பொங்கும் வெறுப்பு குறிப்பாக நமது அண்டை நாடான சீனாவை நோக்கியே இருந்தது. நாவல் கரோனா வைரசை உற்பத்தி செய்து பரப்புவதாகப் பிரகடனம் செய்யப்பட்ட நாடு.
இந்திய எல்லைக் கொட்டுக்கு அருகிலுள்ள லடாக்கைச் சேர்ந்தவரும், இயக்குநர்விது வினோத் சோப்ராவின் புகழ் பெற்ற படமான த்ரேஇடியட்சை எடுப்பதற்கு ஊக்கமளிப்பவராக இருந்தவருமான, பொறியாளர், கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக்‘சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நிராகரிப்போம்’ என்ற கோஷத்தை சமூக ஊடகத்துக்கு எடுத்துச் சென்றார். அவரது வீடியோவை இரண்டே நாட்களில் இருபது லட்சம் பேர் பார்த்திருந்தனர். ஆனால் அவர் மேலும் சென்று இந்த அறைகூவல் சீன அரசைத் துன்புறுத்தும் அளவுக்கு ஸ்தூலமான எதாவதாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவையெல்லாம் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தேவைப்படுகிறது. இந்த உலக வர்த்தக அசுரனுக்கு எதிராக நம்மைத் தயார் செய்து கொண்டு, பொருட்களின் இறக்குமதிப் படையெடுப்பை நாம் பேசுவது எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது?
கள நிதர்சனங்கள்
இந்தியாதான் சீனாவின் நுகர்வுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்பதை வர்த்தக விவரங்கள் காட்டுகின்றன. இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட ஏழு மடங்குப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்குச் சீனாவிடம் மிகப்பெரும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. வேறு எந்த நாட்டுடனும் இருப்பதை விட மிக அதிகம். 2018-19இல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது $16.7 பில்லியன் டாலர். இறக்குமதி 70.3 பில்லியன் டாலர். இதில் வர்த்தகப் பற்றாக்குறை 53.6 பில்லியன் டாலர்.
சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது அதன் மொத்த ஏற்றுமதியில் வெறும் 2 சதவீதமே ஆகும். எனவே இந்தியர்கள் அங்கிருந்து இறக்குமதியை முழுவதும் புறக்கணித்தாலும், அது சீனாவின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் வர்த்தகம் பெரிய அளவில் சீனாவுக்கு ஆதரவாகவே உள்ளது. எனவே இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்டே இருக்கையில் ஒரு வர்த்தகப் போரைத் தொடங்குவது இந்தியாவுக்கு ஆதரவாக இருக்காது.
சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் வகைகள் மிகவும் பரந்தவை: நுகர்வுப் பொருட்கள்; அதாவது மின்னணுப் பொருட்கள், ஸ்மார்ட்போன், தொழிற்சாலைப் பண்டங்கள், வண்டிகள், சூரிய மின்கலங்கள், காசநோய், தொழுநோய்க்கான மருந்துகள், நுண்ணூயிர்கொல்லிகள்உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் பல பொருட்கள்.
2017-18இல் இந்தியாவுக்குத் தேவையான ஏறத்தாழ 60% மின்னணுப் பொருட்களும், மின்பொருட்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவில் மிக அதிகமாக விற்கும் ஐந்து |ஸ்மார்ட்ஃபோன்பிராண்டுகளில் நான்கு சீனாவைச் சேர்ந்தவை – ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ. இந்த நான்கு பிராண்டுகளும் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 60%ஐ ஆக்கிரமித்துள்ளன. மறுபுறம், இந்தியாவின் ஆட்டோமொபைல்உதிரிப்பாகங்களில் 30% சீனாதான் தருகிறது. இந்தியாவின் பொம்மை சந்தையில் 90%ஐ சீனா ஆக்கிரமித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் சைக்கிள் சந்தையில் அதன் தேவையில் 50% கிராக்கியை நிறைவு செய்வதில் சீனா பெரும்பங்கு வகிக்கிறது. இவ்வாறாக, இந்தியப் பொருளாதாரத்தில் சில முக்கியமான பகுதிகள் சீனாவை மோசமான அளவுக்குச் சார்ந்துள்ளன.
நமது தொழில்நுட்பப் பகுதியில் சீனாவின் முதலீடுகள் சமீப காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளன. உலக உறவுகளுக்கான இந்திய கவுன்சிலுடன் தொடர்புடைய ஒரு இந்தியச் சிந்தனை நிறுவனமான கேட்வேஹவுஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி இந்தியாவின் தொடக்க நிறுவனங்களில் சீனாவின் முதலீடு சுமார் 4 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது. அலிபாப நிறுவனம் மட்டுமே பிக்பாஸ்கட்(250 மில்லியன் டாலர்), பேடிஎம்.காம்(400 மில்.டாலர்), பேடிஎம்மால் (150 மில். டாலர்), சொமாட்டோ (200 மில். டாலர்), ஸ்னாப்டீல் (700 மில். டாலர்) என கேந்திரமான முதலீடுகளை இட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு சீன குழுவான டென்செண்ட்ஹோல்டிங்ஸ் இந்திய நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் – பைஜூஸ் (50 மில்.டாலர்), ட்ரீம் 11 (150 மில். டாலர்), ஃப்ளிப்கார்ட் (300 மில்.டாலர்), ஹைக்மெசஞ்சர் (150 மில்.டாலர்), ஓலா (500 மில். டாலர்), ஸ்விக்கி (500 மில். டாலர்). கூடுதலாக, இந்த சீன நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தளங்களின் ஒரே முதலாளியுமல்ல. பல இந்திய, சீனரல்லாத முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் பெரும்பாலான கட்டுப்பாட்டை வைத்துள்ளதால், அவற்றை சீனம் அல்லது சீனரல்லாத நிறுவனம் என்று வகைப்படுத்துவது கடினம். இந்த உறவால் இந்தியா பெரும் பலன்களைப் பார்க்காமல் வெறும் வார்த்தை ஜால நிராகரிப்பு என்ற உடனடி சிந்தனைகளை இந்தப் பார்வை மறுக்கிறது.
வர்த்தகப் புள்ளிவிவரமானது இந்தியா குறைவாக ஏற்றுமதி செய்வதையும் (முக்கியமாகக் கச்சாப் பொருட்கள்), அதிகமாக இறக்குமதி செய்வதையும் (முக்கியமாக எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் அதிக கிராக்கி கொண்ட உற்பத்திப் பொருட்கள்) காட்டுகிறது. இந்தியாவின் மருந்துத் துறை மருந்து உற்பத்திக்காகப் பயன்படுத்தும் பொருட்களுக்குச் சீனாவை அபாயகரமான அளவு சார்ந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சமீபத்தில் கோவிட் 19க்கு வாய்ப்புள்ள மருந்தாகக் கருதப்பட்ட ஹைட்ரோகுளோரோகுவினைனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் திறன் பெருமளவுக்குச் செயல்பாடுள்ள மருந்து இடுபொருட்களை (Active Pharmacheutical Ingredients –API) சார்ந்துள்ளது. அதாவது இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் கச்சாப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து விற்கும் ஒரு நாடு சீனா. ஆகச் சீனப் பொருட்களை நாம் நிராகரிப்பது என்பதற்கு முன்னதாக இது எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது. சீனாவுமே தனது உற்பத்திப் பொருட்களுக்குப் புதிய சந்தைகளுக்கு ஆசைப்படுகிறது. இந்தியாவில் அது அதன் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு, குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பெரிய சந்தை உள்ளது. ஆனால் சீனா பிற ஆசிய நாடுகளில் ஏன் ஆப்பிரிக்காவில் கூட வளரும் சந்தைகள் மீது கண்வைக்க முடியும். அது ஐரோப்பாவிலும் அதன் பொருட்களுக்கு ஒரு சந்தையை உருவாக்க முயல்கிறது. சீனா தனது சந்தைக்கு இந்தியாவை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது என்ற கற்பனைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதேபோல், உலகமயக் காலத்தில், உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளால் நிர்வகிக்கப்படும் சமயத்தில், தேசங்களுக்கிடையே எளிதான வர்த்தகம் நடைபெறுவதற்கு மலிவான வார்த்தை ஜாலங்களால் தடை போட முயல்வதற்கு ஒரு வழியிலோ இன்னொரு வழியிலோ எதிர்வினை ஏற்படும்.
இந்த வகையில் கடந்த கால முயற்சிகள்
இது போன்று நுகர்வுப் பொருட்களை நிராகரிப்பதற்கான அறைகூவல்கள் புதுமையானவையோ தனித்துவமானவையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இத்தகைய முயற்சிகள் பல முறை எந்த வெற்றியுமின்றி செய்யப்பட்டதை வரலாறு சான்றளிக்கிறது. 1930களின் முற்பகுதியில் சீனாவே ஜப்பானியப் பொருட்களை ஜப்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக நிராகரிக்க முயன்றது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு ஈராக்குக்குத் தனது துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ் மறுத்தபோது அமெரிக்க நுகர்வு அமைப்புக்களும் 2003இல் பிரான்சின் பொருட்களை நிராகரிக்க முயன்றன. பாலஸ்தீன் மீதான இஸ்ரேலிய, அமெரிக்க நிலைப்பாட்டின் காரணமாகப் பலமுறை ஆப்பிரிக்கத் தேசங்களும் அவற்றின் பொருட்களை நிராகரித்துள்ளன.
இந்த நிகழ்வுகளிலெல்லாம் பொதுவான அம்சம் என்னவென்றால் இவை எதுவுமே வெற்றி பெறவில்லை, சில வாரங்களில் நீர்த்துப் போயின. இந்தத் தோல்விக்கான காரணம் எளிதானது: உணர்ச்சிகளாலும், தனிமைப்படுத்துதலாலும் தூண்டப்பட்ட அனைத்து விலங்குகளையும் பொருளாதாரம் ஏமாற்றி விடுகிறது.
ஒரு சமயத்தில் ஒரு அடி
நிராகரிக்க வேண்டுமென்ற வார்த்தை ஜால அறைகூவல்கள் நமக்கு சுய சார்பையோ ஆத்மநிர்பார் பாரத்தையோ பெற்றுத் தந்து விடாது. அந்த இடத்தில் நிலைமைக்குத் தகுந்த செயல்திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம்.
சீனப் பொருட்களுக்கு மாற்றாக அதன் தரம், விலையுடன் போட்டிப் போடும் விதமாக மாற்றுப் பொருட்களை உருவாக்கவும், இறக்குமதி செய்யவுமான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஆராய்ச்சி, வளர்ச்சிக்குச் செலவிடப் படும் குறைந்த செலவு, குறிப்பாகத் தனியார்த் துறையின் குறைந்த ஒதுக்கீடு இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழலுக்கான முக்கியமான சவாலாக உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத் தகவல் அமைப்பு (NSTMIS) அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சி வளர்ச்சி புள்ளிவிவரமானது, 2004-05 இலிருந்து 2014-15 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கான செலவினம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. எனினும் இது ஜி.டி.பி.யில் வெறும் 0.7% மட்டுமேயாகும். இது சீனா செலவிடும் 2%கும், பிரேசில் செலவிடும் 1.2%க்கும் மிகவும் குறைவு. இஸ்ரேல் போன்ற நாடுகள் தமது ஜி.டி.பி.யில் 4.3%ஐ ஆராய்ச்சி, வளர்ச்சிக்குச் செலவிடுகின்றன. இது நமது ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு நாம் அதிகமாக நிதியாதாரத்தை ஒதுக்குவது குறித்து சிந்திப்பதை அவசியமாக்குகிறது. அதன் விளைவாக நமது தொழில்கள் இந்த வர்த்தகப் போரை நடத்துவதற்கான போதுமான தொழில்நுட்பத்தையும், திறனையும் பெற அவற்றுக்குத் திறனை அளிக்கும்.
இரண்டாவதாக, சீனாவைப் போலவே இந்திய அரசும் இந்திய நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். சமீபத்தில் தாம் பிழைத்திருப்பதற்குப் போராடும் பல்வேறு தொழில் பகுதியினரின் தேவைகளை ஊக்குவிக்க சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இவை வெறும் ஜூம்லாக்களாக மாறி விடாமல் அவை உண்மையாகவே அமலாவதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுக்க வேண்டும். மேலும் இந்தியா சீனாவுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிடத் தயார் செய்ய அவற்றுக்கு உட்கட்டுமானம், சேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
மூன்றாவதாக, அன்னிய முதலீட்டுக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட வேண்டும். சீனா பெறுவதில் வெறும் 25% அன்னிய முதலீட்டையும், அமெரிக்கா பெறுவதில் 10%ஐயும்தான் இந்தியா பெறுகிறது. அன்னிய முதலீடுகளின் அளவு அதிகரிப்பது நமது தொழில்துறை நல்ல உற்பத்தியையும், திறனையும் பெற்று முன்னேற உந்துதல் அளிக்கும்.
கடைசியாக, நாம் நமது இறக்குமதித் தேவைகளுக்குச் சீனாவை முழுதும் நம்புவதை விட்டுவிட்டு, அவற்றை வகைப்படுத்திப் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் மொத்தத்தில் நம்மை சுயச்சார்புக்கு அருகில் இட்டுச் செல்லக் கூடும்.
முன்பு இருக்கும் வழி
முரட்டுத் தேசபக்தியும், அதீதமான தேசபக்தியும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தரவே முடியாது. பிரதேச முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் மூலம் தீர்க்க முயல வேண்டும். உச்ச நிலைகளில் கருத்து வேறுபாடுகளைக் களைய நெருங்கிய பேச்சுவார்த்தைகள் இதற்கு அத்தியாவசியமாகிறது.
பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பதும், சீனாவின் சர்வதேச இறக்குமதி எக்ஸ்போவில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிப்பதும் இந்த இரண்டு பொருளாதார அசுரர்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சியில் சீனாவுக்குக் கேந்திரமான பங்கு இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கோவிட் 19ஆனது சிதைந்து போன பொருளாதாரம் நம்மையெல்லாம் ஒரு உலகமய சகாப்தத்தில் மொத்தமாகப் பாதிக்கும் என்பதைக் காட்டியுள்ளது. இவ்வாறாக, ஒரு புதிய இந்திய-சீன உறவு இருநாட்டு மக்களுக்கு ஒரு பரஸ்பர இலாபத்துக்கு மட்டுமல்ல, இந்தப் பிரதேசத்துக்கும் உலகுக்கும் முக்கியம்.
பாசித் அமீன் மக்தூமி
(ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்)
தமிழில்: கி.ரமேஷ்