வெறுப்பால் கட்டமைக்கப்படுகின்ற இந்தியாவை என்னுடைய குழந்தை பெறுவதில் எனக்கு விருப்பமில்லை:  ராஜீவ் பஜாஜ்  – ஸ்வாதி சதுர்வேதி (தமிழில்: தா.சந்திரகுரு)

வெறுப்பால் கட்டமைக்கப்படுகின்ற இந்தியாவை என்னுடைய குழந்தை பெறுவதில் எனக்கு விருப்பமில்லை:  ராஜீவ் பஜாஜ்  – ஸ்வாதி சதுர்வேதி (தமிழில்: தா.சந்திரகுரு)



ராஜீவ் பஜாஜ் தனது நிறுவனத்திற்கான விளம்பரங்களை விஷம் தோய்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

‘எம்.எஸ்.தோனி, என்னுடைய நெருங்கிய நண்பர்; எனது குடும்பத்தில் ஒருபகுதியாக இருக்கின்ற அவரது ஐந்து வயது பெண் குழந்தையை யாரோ ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி விடப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது நம்பமுடியாத அளவிற்கு வருத்தமடைந்த நான், இத்தகைய விஷம் தோய்ந்த வெறுப்பு நிறைந்த கருத்துக்கள் தேவையில்லை என்று கூறினேன். சமுதாயத்தில் விதைக்கப்படுகின்ற வெறுப்புணர்வை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஒருபோதும் அங்கீகரிக்காது. வலுவான பிராண்டுகளே வணிகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக இருக்கின்றன’ என்கிறார் இந்தியா இன்க்கில் மிகப் பிரமாண்ட நிறுவனமான இருக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனரான 53 வயதான ராஜீவ் பஜாஜ்.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\dhonis-daughter.jpg

விஷத்தில் தோய்ந்த வெறுப்புணர்வுகளைத் தூண்டுகின்ற வகையில் இருக்கின்ற மூன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களிடமிருந்து தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட முதலாவது  பெரும் தொழில்துறை நிறுவனமாக பஜாஜ் இருக்கிறது. பஜாஜின் இந்த முடிவு மற்ற பிராண்டுகளையும் அதனைப் பின்பற்ற வைத்திருக்கிறது. விஷத்தால் தோய்க்கப்பட்ட உள்ளடக்கத்தை ஒளிபரப்பி வருகின்ற சேனல்களில் இனி விளம்பரம் செய்ய மாட்டோம் என்று பார்லே தயாரிப்புகளும் அறிவித்திருக்கின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\Parle G in tow.jpg

கல்ஃப் நியூஸிற்காக ராஜீவ் பஜாஜுடன் நான் நடத்திய பிரத்தியேக நேர்காணலின் போது, மிகவும் அபூர்வமானவராக, இந்தியா இன்க்கின் நேர்மையான தொழிலதிபராக, தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதில் அஞ்சாதவராக அவர் இருப்பதைக் கண்டேன். அவரை ‘தனித்தன்மை கொண்டவர்’ என்று நான் வர்ணித்த போது, இருந்தாலும் அது ஒன்றும் தவறான நடவடிக்கை அல்ல என்று அவர் மென்மையாகச் சிரித்துக் கொண்டே கூறினார். உச்சத்தில் இருக்கின்ற  தொழிலதிபர்கள் அரசாங்கத்திற்கு துதிபாடுவதற்கும், அரசாங்கத்தின் ஒன்றிய பட்ஜெட்டிற்கு ஒவ்வொரு முறையும் 10/10 பதிப்பெண்களை வழங்குவதற்கு தங்களுக்குள் போட்டியிடுபவர்களாகவும் வரிசையில் நிற்கின்ற வேளையில், அந்த அமைப்பிற்குள் பஜாஜ் எப்போதுமே மிகுந்த தெளிவுடன் இருந்து வருவது தெரிகிறது.

இந்தியாவில் செய்தி சேனல்களுக்கிடையிலான போட்டியை எப்போதாவது அவர் பார்த்திருக்கிறாரா என்று அவரிடம் கேட்டேன். மிகவும் உறுதியாக இல்லை என்று கூறிய பஜாஜ், தன்னுடைய மன அமைதியும், சமநிலையும் தனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுவதால், செய்தித்தாள்களைக்கூட தான் வாசிப்பதில்லை என்பதை வலியுறுத்தினார். ‘எனக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் அதை விரும்ப மாட்டார் என்பதால் அவருடைய பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. தோனியின் மகள் குறித்து நான் வருத்தப்பட்டபோது, ​​அமிதாப் பச்சன் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டபோது சமூக ஊடகங்கள் அவருக்கு மரணத்தை அளித்த விதம் குறித்து அவர் என்னிடம் சொல்லி விட்டு, இது குறித்து நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்றார். இவ்வாறான வெறுப்புணர்வு நிறைந்த பேச்சுக்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துங்கள் என்றார். என்னுடைய குழந்தையோ அல்லது என் சகோதரனுடைய குழந்தைகளோ வெறுப்பைத் தூண்டுகின்ற இந்தியாவையோ அல்லது அத்தகைய சமூகத்தையோ பெறக் கூடாது என்பதால், அது என்னைப் பொறுத்தவரை ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவே இருந்தது. அது எனக்கு எளிய தேர்வாகவும் இருந்தது. அதையே நான் செய்திருக்கிறேன்’ என்று தனது முடிவு பற்றி பஜாஜ் குறிப்பிட்டார்.

பஜாஜ் மற்றொரு காரணத்தையும் என்னிடம் கூறினார். ‘என்னுடைய அம்மா ரூபா பஜாஜ் மிகவும் அமைதியான, வலிமையான பெண்மணி. எனக்கு 12 வயதாக இருந்தபோது எங்களுடைய தொழிற்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களால் எனது தந்தை சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். அப்போது ஹீராபாய் என்ற பெண்மணி என்னையும், என் சகோதரரையும் கவனித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த அவரது மகனும் போராட்டத்தில் இருந்ததை நான் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை ஏறக்குறைய என் தாயைப் போன்றவராகவே ஹீராபாய் இருந்து வந்தார். அவருடைய மகனை அவ்வாறு பார்த்தபோது, என்னுடைய தந்தை ஏதாவது தவறு செய்து விட்டாரா என்று நான் குழம்பிப் போனேன். அதைப் புரிந்துகொண்ட என் அம்மா, ‘நீ எப்போதும் கேட்க வேண்டிய மனசாட்சி என்று அழைக்கப்படுகிற மெல்லிய குரல் ஒன்று இருக்கிறது; வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசிக்கின்ற போது, நீ அந்தக் குரலைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றார். நான் எப்போதும் அதனாலேயே வழிநடத்தப்படுகிறேன்’ என்றார் பஜாஜ்.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\Rahul Rupa Bajaj.jpg

தனது 12ஆவது  வயதில் தனது தந்தையுடன் தான் வந்திருந்து மகிழ்ந்திருந்த, எரிக்கப்பட்ட அந்த ஆலையின் அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பஜாஜ் முடிவெடுத்திருந்தார். 12 வயதேயான ராஜீவின் அந்தக் கனவு, இந்த தசராவில் நிறைவேறப் போகிறது. மற்ற தொழிலதிபர்கள் சவுத் பிளாக்கிற்கும், பிரதமரின் அலுவலகத்திற்கும் ரகசியமான யாத்திரையை மேற்கொண்டிருக்கும் இந்த சகாப்தத்தில், இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியை ஒருபோதும் சந்திக்காத தொழிலதிபராக பஜாஜ் மிகவும் அரிய மனிதராக இருக்கிறார். அவ்வாறு தான் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\bajajqute.jpg

பஜாஜ் கியூட் நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்தியாவின் முதல் நான்குசக்கர சைக்கிளைப் பொறுத்தவரை, நிலவி வந்த ‘போட்டி’ ஆறு ஆண்டுகளாக அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் செய்ததாக ராஜீவ் விவரித்தார். அப்போது ​​‘மேக் இன் இந்தியா’ என்பது ‘மேட் (பைத்தியம்) இன் இந்தியா’ என்று இருப்பதாக பஜாஜ் கூறியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தானாக இடையிட்டு உரிய அனுமதியை வழங்க உதவினார்.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\Demonetisation Rajiv Bajaj.jpg

தனது மனதைத் திறந்து பேசியதற்காக தனக்கு ஒருபோதும் பின்னடைவு ஏற்பட்டதில்லை என்கிறார் பஜாஜ். இந்திய நாணயத்தின் மதிப்பில் 85 சதவீதத்தை ஒரே இரவில் செல்லாது என்று கூறி மோடி அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கம் என்ற தவறான முடிவை விமர்சித்த ஒரே தொழிலதிபராக அவர் இருந்தது பற்றி அவரிடமே கேட்டேன். 2016ஆம் ஆண்டில் அந்த நேரத்தில் தனது மாமனார் இறந்து போனதாகவும், மருத்துவமனையில் அவரைக் கவனித்துக்கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு அன்பளிப்பாக பணம் தரலாம் என்று தான் விரும்பியபோது, ​​தன்னிடம் பணம் இல்லை என்று பஜாஜ் அப்போதிருந்த நிலைமையை விளக்கினார். ‘நாமே இந்த அளவிற்குச் சிரமப்படுகிறோம் என்றால், துரதிர்ஷ்டசாலிகள் எந்த அளவிற்குத் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நான் எண்ணினேன்’ என்று அவர் கூறினார்.

யோகா, ஹோமியோபதியை உறுதியாகக் கடைப்பிடித்து உடல் நலம் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக பஜாஜ் இருக்கிறார். இறுதியாக, அவரது தந்தை ராகுல் பஜாஜ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கையாற்றியிருக்கிறது என்பதால் எப்போதாவது நீங்கள் அரசியலில் நுழைவீர்களா என்று அவரிடம் கேட்டேன். தான் அரசியல்வாதியானால் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவேன் என்று மென்மையாகப் புன்னகைத்துக் கொண்ட கூறிய பஜாஜ், ‘எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

C:\Users\Chandraguru\Pictures\Rajiv bajaj\Bindra Bajaj.jpg

தோனியின் மகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் தூண்டப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு, தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் ஒரே விளையாட்டு வீரரான அபிநவ் பிந்த்ராவைக் குறிப்பிடாமல் முழுமையடையாது. பஜாஜ் ஆட்டோவின் நிர்வாகக் குழுவில் பிந்த்ரா இயக்குனராக இருக்கிறார். ‘அவரிடம் உள்ள  உணர்வு நுண்ணறிவே நான் அவரை மிகவும் ரசிப்பதற்கான காரணமாகும். சமுதாயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதில் அவர் எப்போதும் முன்னணியில் இருந்து வழிநடத்தியுள்ளார். வெறுப்பைப் பரப்புகின்ற தொலைக்காட்சி சேனல்களை அங்கீகரிக்க வேண்டாம் என்ற முடிவைத் தேர்ந்தெடுப்பது கடலில் உள்ள ஒரு துளியாகத் தோன்றலாம். ஆனாலும் அது குறிப்பிடத்தக்க வகையிலான துளியாகவே இருக்கின்றது’ என்று அபினவ் கூறுகிறார்.

https://gulfnews.com/opinion/op-eds/i-dont-want-my-child-to-inherit-an-india-built-on-hate-says-rajiv-bajaj-1.1602498516101

நன்றி: கல்ஃப் நியூஸ்

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *