“இலந்தை வடை” சிறுகதை
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு சனிக்கிழமை காலை.
வானம் சாம்பல் மேகங்களால் முழுதும் மூடப்பட்டிருந்தது.
வாசல் எதிரே வண்டியை நிறுத்தியபோது, பழைய புழுதி மணமும் சுண்ணாம்பு வாசனையும் காற்றில் கலந்து அடித்தன. கதவைத் திறந்து இறங்கிய கணத்தில், என் காலடியில் ஒரு பழைய நிழல் மெதுவாகப் படர்வது போல தோன்றியது.
பள்ளி இனி பள்ளியாக இல்லை.
கான்கிரீட் கோபுரங்களுக்கு நடுவே நின்ற ஒரு சிறிய, ஆனால் அசைக்க முடியாத கோட்டை. உயர்ந்த சுவர்கள். மேலே முள்தாழி கம்பிகள். தானியங்கி இரும்புக் கதவு. சி.சி.டி.வி கண்கள். பளிங்குத் தரை. ஏ.சி. பேருந்துகள். எல்லாம் குளிர்ச்சியாகவும் பளபளப்பாகவும் இருந்தன.
என் காலத்து திறந்த மைதானமும், சுதந்திரமாக ஓடிய நிழல்களும் முற்றிலும் மறைந்திருந்தன.
பழைய ஆலமரம் மட்டும் தப்பியிருந்தது. அதே தண்டு. அதே கிளைகள்.
ஆனால் அதன் நிழல் இனி சுவரைத் தாண்டவில்லை. உள்ளேயே சிறைபட்டிருந்தது.
மரத்தின் மேலே இரண்டு அணில்கள். ஒன்று சுவரின் உச்சியில் ஓடி, திரும்பி மீண்டும் மரத்துக்குள் பாய்ந்தது. அவை இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து, இங்கேயே செத்துப்போகும். அந்தக் கோட்டை அவற்றுக்கு ஒரு பெரிய கூண்டு.
வாசலுக்கு எதிரே இருந்தது அந்தச் சின்னக் கடை.
பழைய மர அலமாரி மறைந்து, கண்ணாடி உறை புதிதாய் வந்திருந்தது.
உள்ளே புதிய பொட்டலங்கள், சாக்லேட்டுகள், வண்ணமயமான பிஸ்கெட்டுகள்.
ஆனால் ஒரு மூலையில், கவனிக்கப்படாமல், அதே இலந்தை வடை.
மஞ்சள் நிறம். சற்றே காய்ந்தது. அதன் மேல் மெல்லிய புழுதி படிந்திருந்தது.
கடைக்காரர் புதியவர்.
அவர் என்னை அறியவில்லை. நானும் அவரை அறியவில்லை.
ஆனால் அந்த வடை என்னை அறிந்தது.
நான் கண்ணாடி உறையின் முன் நின்றேன்.
என் மூச்சு அதன் மேல் மெதுவாக படர்ந்தது.
இருக்கிறது.
இன்னும் இருக்கிறது.
அந்த நொடியில் என் கண்முன்னே ஏழு வயதுச் சிறுவன் நின்றான்.
செருப்பில்லாத கால்கள். பழைய சட்டை. கையில் கிழிந்த புத்தகப் பை.
அவன் இதே கடை முன் நின்று, கண்ணாடி இல்லாத அலமாரியை உற்று நோக்குவான். பாக்கெட்டில் ஒரு காசும் இல்லை. ஆனால் முதல் பார்வை எப்போதும் இலந்தை வடைக்கே.
இருந்தால் — அந்த ஒரு கணம் போதும்.
உலகம் இன்னும் அவனை முழுவதும் கைவிட்டுவிடவில்லை என்ற ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை அவன் உள்ளுக்குள் மெல்ல முளைக்கும்.
வாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.
அது அங்கே இருப்பதே போதும்.
“எனக்கும் இவ்வுலகத்தில் ஒரு சின்ன இடம் இருக்கிறது” என்று அது சொல்லாமல் சொல்லும்.
அந்த நம்பிக்கை சிறியது. உடைந்துபோனது போலத் தோன்றும்.
ஆனால் உண்மையில் அது ஒருபோதும் உடையவில்லை.
இலந்தை வடை அதைக் காலம் காலமாக நிரூபித்துக் கொண்டிருந்தது.
இப்போதும் அது என்னைத் தொட்டது.
வயதான என் கைகள் கண்ணாடியின் மீது மெதுவாகப் பதிந்தன.
நான் வாங்கவில்லை. வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
முப்பது ஆண்டுகள் நகரத்தை மாற்றியிருந்தன.
என்னை மாற்றியிருந்தன.
பள்ளியை ஒரு கோட்டையாக மாற்றியிருந்தன.
ஆனால் அந்த ஒரு சின்ன இலந்தை வடை மட்டும் மாறாமல் இருந்தது.
அதனால்,
இந்த உலகம் இன்னும் என்னை முழுவதும் கைவிட்டுவிடவில்லை என்பது உறுதியானது.
நான் மெல்லத் திரும்பி நடந்தேன்.
பின்னால் தானியங்கி இரும்புக் கதவு
ஒரு கனத்த சத்தத்துடன் மூடியது.
மரத்தில் ஒரு அணில் கிளையிலிருந்து கிளைக்குத் தாவியது.
வானம் இன்னும் அதே சாம்பல் நிறத்தில் இருந்தது.
கடையில்
இலந்தை வடை இன்னும் இருக்கும்.
நான் மீண்டும் வரும்வரை.
வருவேன்.
எனக்குத் தெரியும்.
எழுதியவர் :
✍🏻 – அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
