மதுரை புறநகர் மாவட்ட 15 ஆவது மாநாட்டில் குழந்தை கவிஞர் தோழர் குராயூர் எரியீட்டி அவர்கள் எழுதி வெளியிடப்பட்ட இல்லறத்தில் இவர்கள் எனும் காரல்மார்க்ஸ் ஜென்னியின் வாழ்க்கை சரிதத்தை ரத்தினச் சுருக்கமாக 32 பக்கத்தில் மாபெரும் மேதையின் வாழ்க்கை பெருங்காவியத்தை வடித்துத் தந்திருக்கின்றார்.
உலகின் விடியலுக்காக அறிவுத்தளத்தில் உழைத்தவரின் வாழ்வு எவ்வளவு இருள் சூழ்ந்தது என்பதையும், அதில் கை விளக்கேந்தி மதிப்பெண் வாழ்வில் ஒளிவீசிய தோழர் ஜென்னியின் தியாகத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார். செல்வச் சீமாட்டியாக வளமிக்கதொரு வாழ்வு வாழும் பெரும் தனவந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உலகை மாற்றியமைக்க பெரும் கனவோடு இரண்டாயிர வருட மனித சரிதத்தின் சுரண்டல் வர்க்க பிழையைச் சீர்திருத்தும் சூத்திரத்தைக் கண்டடைவதில் ஊன் உறக்கம் இழந்து மானுட சமுத்திரத்திற்கான மனிதநேய தத்துவத்தைக் கண்டடைந்தவர்க்கு உறுதுணையாக இருந்து காலமெலாம் அவரோடு துயர்மிகும் உயர் துன்பத்தை சகித்துக்கொண்டு பயணித்த ஜென்னியின் தியாகம் மகத்தானவை.
காரல்மார்க்ஸ் ஜென்னியின் இல்லற வாழ்வில் அன்பு மட்டுமே மூலதனமாக இருந்தது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு வறுமை அவர்களைத் தின்றுகொண்டிருந்தது. வாசிக்கும் யாவர்க்கும் தன்னையறியாமல் கண்ணீர் சொரிந்துகொண்டிருக்கும். தோழர் எரியீட்டி6 தலைப்புகளில் எழுதி இருக்கிறார். விரிவாக வாசிக்கச் செல்வோர்க்கு இதோர் சிற்றேடு. பிறப்பு, கல்வி, திருமணம், குழந்தைகள், வாசிப்பு, இறப்பு என்றெழுதியிருக்கிறார்.
பொன்னுலகம் படைக்கக் கனவு கண்டவரின் இல்லற வாழ்வை ஒரு மின்மினிப் பூச்சி சிந்தும் வெளிச்சம் அளவு கோடிட்டுக் காட்டியிருக்கிறார். மதுரை மாவட்டத்தின் தமுஎகசவின் மிக மூத்த முன்னோடி இத்தனை ஆண்டுகளின் தனது வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இருந்து கரும்பைப் பிழிவதுபோல் சொற்சொட்டாய் சாறு பிழிந்து தந்திருக்கிறார். இதைப் பருகுகிறவர்கள் இத்துடன் நிற்க மாட்டார்கள் இதன் விரிவும் ஆழமும் தேடிப் பயணிப்பார்கள். அதில் முழுமையானதொரு புதையலைக் கண்டடைவார்கள். இச்சிறு நூலில் ஆங்காங்கே குழந்தை கவிஞர் குராயூர் எரியீட்டி தூவியிருக்கும் கவித்துவமான வரிகள் வாசிப்போர்க்கு நிச்சயம் சிலிர்ப்பூட்டுபவை. உதாரணத்திற்கு சில
“உயிர் அறுக்கும் பசி
உடல் குறைக்கும் பிணி
நாடுகடத்தும் பகை”.
“ஓயாத உழைப்பு
உறுக்குலைக்கும் வறுமை
உடல் கெட்ட நிலை”.
“வறுமை வரினும் வரட்டும்
வாழ்க்கை துயர் தரினும் தரட்டும்
பொறுமை எனக்கு மிகவுண்டு
நான் போகுந்தூரம்
நெடுந்தூரம்”.
இச்சிறு நூலை இன்னும் கொஞ்சம் விவரித்து எழுதி இருக்கலாம். அதற்கான ஆற்றலும் அனுபவமும் தோழருக்கு உண்டு.அத்துடன் மார்க்ஸ் ஜென்னி காதல் கடிதங்களை இணைத்திருக்கலாம். அவை உலகத்தரமான காதல் இலக்கியங்கள் அவர்கள் இல்லற வாழ்வு ஓரளவிற்கேனும் ஒளிவீசியதில் உயிர்த்தோழர் ஏங்கெல்சிற்கு பெரும்பங்குண்டு என்பதையும் கோடிட்டு காட்டியிருக்கலாம்.
எதிர்வரும் பதிப்புகளில் மேற்சொன்னவைகளை இணைத்து விரிவாக்கினால் இளைய தலைமுறைகளுக்கு பிரகாசமானதொரு நூலாக ஒளிரும்.
அழகு மிளிரும் அட்டைபடமும் தரமான தாளும் தந்து சிறப்புற வெளியிட்டிருக்கும் காலம் பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள். மதுரை புறநகர் தமுஎகச மாவட்ட மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதி தோழர்களுக்கு அன்புப் பரிசாக இந்நூலை வழங்கிய
எங்களது ஆசானுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
ctamilraj@gmail.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

