சீனு ராமசாமியின் கவிதைகள் – 2
நிஜத்தின் கற்பனை
………
இது நான்கு சிறுவர்களின்
கதை
மதிய உணவிற்கு
வரிசையில் முண்டும்
பாலகர்களின் துயரச் சம்பவம்.
மலையுச்சியில்
பட்டுப் பூச்சிகளையும்
சுக்கான் பாறையின் இடுக்கில்
காடை ஓடியதும்
கௌதாரி நின்றதும்
சொரட்டை பாம்பு துயில் கொண்ட
சோம்பலின் சுருண்ட வடிவமும்
காண நேர்ந்த சோகம்,
கொண்டு போன
நீரெல்லாம் சிறுநீராகக்
கழிந்த வரலாறு
மலையில் சிறுத்தை இருப்பதாகச் சொன்ன கருத்தக் கண்ணன் மாமா
லோட்டாவில் நாலைந்து பேருக்கு
ஏதோ நீர் தந்ததை
பார்த்த புதர் வைபவம்.
உயர இருந்து யாவற்றையும்
பார்த்தது ஒன்றே
ஏமாற்றத்திலும்
சிறு நன்மையென அறியாமல்
கீழ் இறங்கியவர்கள் நான்கு
அரைக்கால் சட்டைகள்.
மறு நாள் வகுப்பில்
மலையுச்சியில் சிறுத்தையோடு நிற்கிற
ஒரு கற்பனையின் தொடக்கச் சொல்லில்
கதைப் புலி என்னுள்
உறுமத் தொடங்கியது.
இடி
மின்னல் சேர்ந்து
காற்றும் வீசத் தொடங்கியது.
அன்பின் பரிசு
மேற்கூரை
ஓட்டில் காய்த்து
விட்டது பூசணிக்காய்
பௌர்ணமி போல்
வளர்ந்து விட்டது
முதல் சினேகிதிக்கு
வாஞ்சையுடன்
தரும் அன்பின்
பென்சிலென
உயிர் பணயம்
வைத்து ஓட்டில்
தவழ்ந்து
பறித்த காயை
தலையில் சுமந்தோடி
என் டீச்சருக்கு தந்தேன்.
சிறுமியின் வாழ்வு
…..
செங்காட்டில்
சிறுமியொருத்தி
மழைக்கு முந்தி
ஓடும் மூச்சிறைப்பின் ஓசை
கண் பூத்தக் கிழவி
ஈசல் பொந்தில்
ஊதும் ஒலியில்
கேட்கிறது.
பூப் பூவா
கண் பூவின் மேலே
பறக்கின்றன
ஈசல் கூட்டம்.
முடிந்ததை பிடிக்கிறாள்
முடியாததை பறக்கட்டும் என்றே பார்க்கிறாள்
சிறார்கள்
….
கம்மாய்க்கு வரும்
தூக்கணாங்குருவிகள்
மேக்கரையில் இருந்து
இக்கரைக்கு வருகின்றன
இக்கரையில் இருந்து
அக்கரைக்குப் போகின்றன.
அக்கரையில் அமர்திருக்கின்றன
அந்தியில் அதன் அதன்
கூடுக்களுக்குப் போய் விடுகின்றன.
நன்றியின் தோற்றம்
….
ஒருவர் போவோரை
மறைத்து அரை கிலோ மீட்டர் கடந்து இறங்குவதாக
இரு சக்கர வாகனத்தில்
ஏறிக்கொள்கிறார்.
நடந்தும் போகலாம்
இருந்தும் இருவரும்
அது பற்றி பேசவில்லை
என்பதில் அது உதவியில் சேர்ந்து நன்றியைப் பெறுகிறது.
அம்மா பசு
….
தண்ணிக் காட்ட
கூப்பிடும்
பசுவோட குரலுக்கு
சோளக்காட்டு குருவிக
பறக்க
ஓடி வருது செல்வி.
ஆளைப் பார்த்ததும்
கூடக் கத்துது போன மாசம் பொறந்த
கன்னு
முந்திக் குடிக்குது
கன்னு
பொறுத்து குடிக்குது
ஆத்தா.
அடி வானம்
சிவந்து மேகம் போகுது
தெக்க
தாய்
…
பின்னிரவில் நெடிய நகரத்து
சாலையைப் பெருக்கியபடி
உக்கிரப்பனி
சூடிய முகம் தெரியாதப் பெண்களில்
அக்கா ஒருத்தி
நிலை தடுமாறி
விழுந்து கிடந்தவனின்
கால்களைச் சக்கரங்கள்
தின்று விடாமல்
இழுத்து
ரட்சித்த மாகாளி.
எழுதியவர் :
![]()
சீனு ராமசாமி
(சீனுராமசாமி இந்திய திரைப்பட இயக்குநர் அடிப்டையில் ஒரு கவிஞர்)
சீனுராமசாமியின் புத்தகளங்கள் நமது இணைய தளம் வழிப் பெற :
புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு:

நகரமயமாதல், புவி வெப்பமடைதல், பெருங்கடலின் சூழலியல், நிலத்தடி நீரின் சிக்கல்கள், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள், ஒலி மாசு, நுண் நெகிழிகள்… என எதையும் மனிதன் விட்டுவைக்கவில்லை என்று சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பேசும் இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நூலை பெற:
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்
https://thamizhbooks.com/product/samakala-sutru-suzhal-savalgal/
மேலும் தொடர்புக்கு: 44 2433 2924
மேலும் இதேபோல் சுற்றுசூழல் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளை படிக்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

