இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாத இதழான மகளிர் சிந்தனையில் 20 மாதங்களுக்கு மேல் திரு எஸ். ஜி. ரமேஷ்பாபு அவர்கள் எழுதிய கட்டுரைகளில் 1857 இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் பெண்களின் பங்கு என்கிற கருத்துக்களை முன்வைத்து இந்நூல் வெளிவந்துள்ளது.
வரலாற்று நூல் என்று பயந்து இதனைப் படிக்க ஆரம்பித்தால் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு சிறிதும் குறைவில்லாத வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
வரலாற்று நிகழ்வுகள் என்றாலே ஆண்டுகளும் பெயர்களும் மட்டுமே நம்மை குழப்புவதாக நாம் இதுவரை பாடப்புத்தகங்களில் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்நூல் அப்படியான எவ்வித குழப்பத்தையும் தராமல் ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு தொடர் போல தெளிவாக கூறி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போர் துவங்குவதற்கு சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பெரும் போராட்டத்தை முன்நின்று நடத்திய வேலுநாச்சியார் கதையோடு துவங்குகிறது இந்நூல்.
அவரைத் தொடர்ந்து கிட்டூர் ராணி சென்னம்மா, ஜான்சி ராணி லக்ஷ்மி பாய், ஜல்காரிபாய், பேகம் ஹஸ்ரத் மஹால் என தொடர்ந்து…… இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டாக செயலாற்றிய வேலு நாச்சியாரின் உடையாள் பெண்கள் படைக்குத் தலைமை பொறுப்பேற்ற குயிலி மற்றும் வங்கதேசத்தின் அவந்திபாயின் வரலாறுகள் வரை இச்சிறு புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நூலை வாசிப்பதன் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் வரலாறு நம் வசமாகும்.
நூல் : விடுதலைப் போரில் பெண்கள்- 1857 எழுச்சிகளின் பின்னணியில்.
ஆசிரியர் : எஸ். ஜி. ரமேஷ் பாபு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம். நன்றி : கேத்ரீன் – கடலூர்