இந்திய மரபணு பொறியியல் விஞ்ஞானி டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi)
தொடர் 77 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi) ஹைதராபாத்தில் உள்ள மரபணு கைரேகை மற்றும் நோய்களை கண்டறியும் மையத்தில் – CDFC- தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் மரபணு கைரேகை என்பதற்கும், அவருக்கும் சம்பந்தமில்லை. நாம் நினைப்பதை போல குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ அல்லது பெற்றோர்கள் யார் என்பதற்கான வழக்குகளை தீர்த்து வைப்பதோ தியாகியின் வேலை அல்ல. LEUKEMIA என்கிற கொடிய ரத்த புற்று நோய் குழந்தைகளை எப்படி தாக்குகிறது என்கிற துறையில் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை வெளியிட்டவர்தான் சுவேதா தியாகி.
இந்தியாவில் லுகேமியா (Leukemia) என்று அழைக்கப்படுகின்ற ரத்தப் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் 100 குழந்தைகளில் மூன்று குழந்தைகள் மட்டும் தான் உயிரோடு மிஞ்சுகின்றன என்பது மிக கொடுமையான புள்ளி விவரமாகும். ரத்த அணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றால், அவை லுகேமியா (Leukemia) செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பரம்பரை நோய் என்பதை கடந்து சூழலியல் நோயாக இந்த வகை புற்று நோயை வளர்த்து எடுத்துள்ளது. இந்தியாவில் இந்த வகை புற்றுநோய் பெறுவதற்கான பெரிய காரணியாக நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கார்பன் மோனாக்சைடும், பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பொழுது வெளிவரும் புகையை குழந்தைகள் உள்வாங்குவதுமாக இருப்பது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும்.

பரம்பரை மற்றும் சூழலியல் காரணிகளால் ஏற்படுகின்ற லுக்கேமியா இந்திய குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கிறது. நம்முடைய பாதிப்பு அடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அளவுக்கு மருத்துவமனைகள் இல்லை, சிகிச்சை முறைகளும் இல்லை, கடுமையாக செலவு பிடிக்கும் இந்த கொடிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் பல பெற்றோர்கள் குழந்தைகளை மரணத்திற்கு காவு கொடுக்கின்றனர். இந்த வகை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் மிக எளிமையான செலவு பிடிக்காத ஒரு முறையை நம் நாட்டில் விஞ்ஞானி டாக்டர் சுவேதா தியாகி அறிமுகம் செய்தார். ஒரு செல் உருவாகின்ற உயிர் சுழற்சியில் ஒரு மரபணு பிறழும் பொழுது, அது புற்றுநோய் செல்களாக மாற்றுகிறது. இந்த பூவி என்கிற உயிர் கோளில் உயிரிகள் தோன்றுவது என்பது ஒரே ஒரு செல் முதலில் தோன்றுவதன் மூலம் ஏற்படுகிறது. இந்த முதல் செல்லுக்கு ZYGOTE என்று பெயர்.
இந்த ஒரு செல் பிறகு செல் பிரிவுகளை அனுபவித்து ட்ரில்லியன் கணக்கான செல்களாக வளர்கிறது. இந்த வளர்ச்சி பாதையில் சில புரதங்களில் ஏற்படுகின்ற பிறழ்வுகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi) அவர்கள் இந்த வகை புற்றுநோய் உருவாக்கத்திற்கான அடிப்படைகளை கண்டறிந்தார். உதாரணமாக லுகேமியா (Leukemia) பாதிக்கப்பட்ட குழந்தைகளில் mll என்று அழைக்கப்படுகின்ற புரதம் உற்பத்தி செய்யும் ஒரு வகை மரபணு, பிறழ்வு நிலை அடைகிறது.. இது புற்று நோய் செல்லாக அதை வடிவமைத்து வருகிறது.
MIXED LEANIAGE LEUKEMIA குறித்த அறிவியல் மிக புதியது ஆகும். இது புற்றுநோயியல் என்னும் துறையின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் என்ற புற்றுநோய்களின் பரம்பரை மற்றும் சூழலியல் காரணங்களை ஆய்வு செய்யும் இந்த துறை பெரும்பாலும் எலும்பு மஜ்ஜை சோதனைகளை நம்பியுள்ளது. இவ்வகை சோதனைகளை மேற்கொள்வது சிக்கலான ஒன்றாக உள்ளது. லுக்கேமியா நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்றுவரை உலக அளவில் எட்டப்படவில்லை. மரபியல் காரணிகள் மற்றும் சூழலியல் காரணிகளின் கலவையான ஒரு விஷயம் கண்டிப்பாக ஒரு பாத்திரத்தை வகிப்பதாக நம்பப்படுகிறது நான்கு வகையான லுக்கேமியாக்கள் உள்ளன.

அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கேமியா-LL-, அக்யூட் மைலோயித் லுக்குமியா AML, நாட்பட்ட லிம்போ சைட்பிக் லுகேமியா CLL, மற்றும் நாட்பட்ட மைலோயித் லுகேமியா CML என்று அவை வகைப்படுத்தப்படுகின்றன. சுவேதா தியாகி அம்மையாரின் தலையிட்டுக்கு முன் இவ்வகையான புற்று நோய்களுக்கு பொது மருந்துகளை பயன்படுத்தினார்கள். இந்த சிகிச்சை முறைகள் கிமோ தெரப்பி கதிர்வீச்சு சிகிச்சை போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தது. சிலருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi) அம்மையார் அவர்கள் முன் வைக்கின்ற மருத்துவ முறை இலக்கு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
இந்த வகையான லூக்கோமியாவால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கு ஏற்றார்போல மருந்துகளையும் தனித்துவமான சிகிச்சை முறைகளையும் விஞ்ஞானி டாக்டர் சுவேதா தியாகி அறிமுகம் செய்தார். இந்த ஆய்வுகளின் பொழுது அவர் அற்புதமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மரபணு சேதம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான அந்த குறிப்பிட்ட புரத பிறழ்வு குழந்தைக்கு குழந்தை வேறுபடுகிறது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு. இந்த முறைக்கு மரபணுக்களின் டிரான்ஸ்கிரிப்ஷனில் ஒழுங்குமுறையை சீர்படுத்துதல் என்று பெயர்.

குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற ரத்த புற்றுநோய் குறித்து கவனம் செலுத்துவதற்கும் டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi) ஒரு முக்கியமான விஷயத்தை ஏற்கனவே கண்டுபிடித்து உலகப் புகழ் பெற்றவர். அவர் மனித உயிரணுக்களில் டிரான்ஸ்கிரிப்ஷன் ஒழுங்கு முறையை ஆய்வு செய்தார். செல் பெருக்கத்தின் காரணிகளை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி அதீத செல் பெருக்கம் என்பது கலப்பு பரம்பரை லூக்கோமியா என்கிற இந்த நோய்வாய்ப்பட்ட சூழல்களில் எப்படி HCF-1 டிரான்ஸ்கிரிப்ஷன் நடக்கும் பொழுது, E2F1 என்று வகைப்படுத்தப்பட்ட ஒருவகை புரத மரபணு அதீத மாற்றத்தை தூண்டுகிறது என்பதை துல்லியமாக கண்டுபிடித்து அறிவித்தார். புரதம் மற்றும் அப்போடோசிஸ் E2F1 சார்ந்த அவருடைய ஆய்வுகள் உலகப்பிரசித்தி பெற்றவை ஆகும்.
உலக பிரசித்தி பெற்ற குழந்தைகள் புற்றுநோய் விஞ்ஞானியான டாக்டர் ஸ்வேதா தியாகி, புது டெல்லியை சேர்ந்தவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் இளம் அறிவியல் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஜெனெடிக் இன்ஜினியரிங் அண்ட் பயோ டெக்னாலஜி எனும் புது தில்லியின் நிறுவனத்தில் டாக்டர் சுனில் லால் என்பவர் வழிகாட்டுதலின் பெயரில் மஞ்சள் காமாலை வைரஸ்களை உடம்பில் தூண்டுகின்ற புரதமான ORF3 வகை புரதத்தை கட்டுடைத்து வெற்றி கண்டார்.
முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு நியூயார்க் நகரில் உள்ள கோல்ட் ஸ்ப்ரிங் ஹார்பர் ஆய்வுக் கூடத்தில் பேராசிரியர் வின்ஷிப் ஹேர் எனும் உலகப் பிரசித்தி பெற்ற மரபணு விஞ்ஞானியின் ஆய்வுக்குழுவில் இடம் பிடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து ஸ்விசர்லாந்தில் லூசென் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகான உயர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டபொழுது அவருக்கு லுக்கேமியா நோயை ஏற்படுத்துகின்ற மரபணுக்கள் குறித்தும் அவற்றை சரிசெய்வதற்கான மரபணு பொறியியல் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது.
2010 ஆம் ஆண்டு அவர் ஹைதராபாத்துக்கு திரும்பினார். அங்கு டிஎன்என் ஃபிங்கர்ப்ரின்ட்ன் கோ மற்றும் கோசிஸ் நிறுவனத்தில் தலைமை ஆய்வாளராக இணைந்து கொண்டார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் சுவேதா தியாகியின் கண்டுபிடிப்புகள் மற்றும் லுகேமியா (Leukemia) சிகிச்சை முறைகள் இன்று உலகெங்கும் பின்பற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு வான் இயற்பியலாளர் ரமேஷ் நாராயண் (Prof. Ramesh Narayan)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: வனவிலங்கு சூழலியல் விஞ்ஞானி அபராஜிதா தத்தா