உலகம் அறிந்த இந்திய ஒட்டுண்ணியியல் நிபுணர் வீணா டாண்டன் (Parasitologist Veena Tandon)
தொடர் 96: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பயோடெக் பூங்கா NASI நிறுவனத்தின மூத்த விஞ்ஞானியாக ஒட்டுண்ணியியலில் பணியாற்றி வருபவர் தான் வீணா டாண்டன். வடகிழக்கு இந்திய ஹெல்மின் ஒட்டுண்ணி (Parasite) தகவல் தரவுதளத்தில் மிக முக்கிய நிபுணர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். உணவு மதிப்புள்ள விலங்குகளை பாதிக்கும் புழு நோய் தொற்றுகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக இவர் உலக பிரசித்தி பெற்றார்.
விஞ்ஞானி வீணா டாண்டன் சார்ந்திருக்கும் துறை, PARASITOLOGY என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணியியல் துறை ஆகும். ஒரு ஆய்வு துறையாக ஒட்டுண்ணியியலின் நோக்கம் ஒரு கேள்விக்குரிய உயிரினம் அல்லது சுற்றுச் சூழலால் ஏற்படுகின்ற வாழ்க்கை முறையில் உருவாகும் நோய் தொற்றுகள் குறித்தானது ஆகும்.
இது ஏனைய துறைகளில் மையப்புள்ளியை உருவாக்குகிறது. செல் உயிரியல், உயிர் தகவலியல், உயிர் வேதியியல், மூலக்கூறு உயிரியல், நோய் எதிர்ப்பு மரபியல், பரிணாம இயல் மற்றும் சூழலியல் ஆகிய துறைகளை ஒன்றிணைக்க கூடிய ஒரு துறையாகவும் ஒட்டுண்ணியியல் (Parasitology) இருப்பதை நாம் பார்க்கலாம். இந்த துறையில் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உலகளவில் பேசப்படுபவர் தான் இந்தியாவின் விஞ்ஞானி வீணா டாண்டன்.
வீணா டாண்டனின் பங்களிப்பு மாறுபட்ட உயிரினங்களை பற்றிய ஆய்வுத்துறை சார்ந்தது ஆகும். மனிதர்கள் கிட்டத்தட்ட 300 வகையான ஒட்டுண்ணி (Parasite) புழுக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட புரோட்டோசோவா இனங்கள் ஆகியவற்றால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் மூதாதையரிடமிருந்து நாம் பெற்றுக் கொண்டவையாகும். நம் உடலிலேயே இந்த ஒட்டுண்ணிகள் இருந்து வளர்ந்து நம்மை பாதிக்கின்றன.
ஒட்டுண்ணி மருத்துவத்தின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான மருத்துவ ஒட்டுண்ணியியல் (Parasitology) என்பது மனிதர்களை பாதிக்கும் ஒட்டுண்ணிகள் அவற்றால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை துல்லியமாக ஆய்வுசெய்து சிகிச்சை முறைகளையும் தடுப்பு முறைகளையும் அறிவிக்கிறது. அந்த முறையில் குடல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்ற என்டமீபா மற்றும் ஜார்ஜியா போன்ற வயிற்று போக்குகளை ஏற்படுத்தும் உபாதைகளுக்கு சிகிச்சை முறைகளை முன்னறிவித்தவர் தான் வீணா டாண்டன் (Parasitologist Veena Tandon).
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிபூரில், 1949ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் பட்டம் வென்றார். அதே நிறுவனத்தில் முதுகலை பட்டமும் படித்த பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறையில் மூளை மற்றும் கல்லீரல் திசுக்களில் மதுபானங்களின் பாதிப்புகளில் அடிப்படைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுபானங்கள் அருந்துவதன் மூலம் எப்படி நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் புகுந்து பலவகையான நோய்களை உற்பத்தி செய்கின்றன என்பதுதான் இவருடைய முதல் ஆய்வு முடிவாக அமைந்தது.
மதுபானங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவுகின்ற நுண்ணுயிரி நோய்கள் குறித்த வீனா டாண்டனின் ஆய்வுகள் மிக மிக முக்கியமானதாகும். STRONGYLOIDES STERCORALIS எனும் ஒட்டுண்ணி (Parasite) மது அருந்தாதவர்களை விட நாள்பட்ட குடிகாரர்களை மிக அதிகம் பாதிக்கிறது. இந்த ஒரு நோய் தொற்றின் மூலம் மிக கொடுமையான ஆபத்துகளை மது பழக்கம் உள்ளவர்கள் எதிர்கொள்கிறார்கள். வீணா டாண்டனின் கண்டுபிடிப்பின் படி இந்த கிருமியின் தாக்குதல் காரணமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அடிப்படை மாறுகிறது தன்னியக்க நோய் தொற்றின் வாய்ப்பை இது அதிகரிக்கிறது.
நாள்பட்ட குடிப்பழக்கம் உள்ளவர்கள், கார்டிசோலின் என்கிற ஒரு முக்கிய வேதிப் பொருளின் அளவை உடலுக்குள் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் வேறு ஒட்டுண்ணிகள் அவர்களை தாக்குகின்றன. குடல் இயக்கத்தை பாதிக்கின்ற இந்த வகையான ஒட்டுண்ணிகள் ஸ்டிராய்டு வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகின்றன. இதன் மூலம் ஒரு சில உறுப்புகள் முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை வீணா டாண்டன் உலகிற்கு அறிவித்தார்.
இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக தன் பணியை அவர் தொடங்கினார். ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைக்குச் சென்று அங்கு ஆய்வாளராக இணைந்து கொண்டார். இந்தியாவின் தேசிய அறிவியல் அக்கடமியின் பிளாட்டினம் ஜூபிலி பெல்லோஷிப்பெற்று ஹெல்மின்தாலஜி என்று என்று அழைக்கப்படும் புதிய துறையில் ஆய்வுகளைத் தொடர்ந்தார். HELMINTHOLOGY என்பது சாதாரண பூச்சி இனமான வெட்டுக்கிளிகளை பயிர்களை தாக்கும் ஒட்டுண்ணிகளாக மாற்றுகின்ற பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்டதாகும். நம்முடைய இந்தியாவின் பெரும்பாலான விவசாய நிலங்களை லட்சக்கணக்கில் வந்து ஆக்கிரமித்துக்கொண்டு பயிர் சேதங்களை மோசமான முறையில் ஏற்படுத்தும் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு முடிவு காணுகின்ற முக்கிய அறிவியல் தீர்வுகளை வீணா டாண்டன் (Parasitologist Veena Tandon) முன்வைத்தார்.
லக்னோவிலுள்ள பயோடெக் பூங்காவில் அவர் இணைந்து கொண்டார். கால்நடைகளை பாதிக்கும் ஒட்டுண்ணிகள் குறித்து டாண்டன் முன்னோடி ஆராய்ச்சி செய்ததற்காக பெரிய அளவில் போற்றப்படுகிறார். வடகிழக்கு பிராந்தியத்தின் ஒட்டுண்ணி (Parasite) பல்லுயிர் குறித்து நன்கு புரிந்துகொள்ள அவர் உதவினார். வடகிழக்கு இந்தியாவினுடைய ஹெல்த் ஒட்டுண்ணி தகவல் தரவுதளத்தை இணையத்தில் கச்சிதமாக பல ஆண்டுகள் உழைப்பின் மூலம் தயாரித்து கொடுத்தார். வடகிழக்கு ஒட்டுண்ணி (Parasite) தகவல் பகுப்பாய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளராக இன்றும் விளங்குகின்றார். 350க்கும் மேற்பட்ட மிக முக்கியமான ஒட்டுண்ணிகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல சர்வதேச சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. உலகில் ஒட்டுண்ணியியல் (Parasitology) எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு வீணா டாண்டனின் பல கண்டுபிடிப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
வீணா டாண்டன் கல்வியாளரும் வடகிழக்கு மலைப்பிராந்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பிரமோத் டாண்டனை மணந்தார். நேஷனல் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் மற்றும் இந்தியன் சொசைட்டி ஃபார் பாராசிட்டலஜி எனும் அமைப்புகளில் கௌரவ உறுப்பினராக உள்ளார். சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மிக முக்கியமான விலங்கு அறிவியல் ஆலோசகராக தொடர்கிறார். பல அறிவியல் மாநாடுகளில் உலகெங்கும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை வழங்கியவர். 2011 ஆம் ஆண்டு இவருக்கு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஜானகி அம்மாள் விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்:
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் கால்நடை மருத்துவயியல் விஞ்ஞானி டாக்டர் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கால்நடைகளை பாதிக்கும் ஒட்டுண்ணிகள் குறித்து டாண்டன் முன்னோடி ஆராய்ச்சி செய்ததற்காக பெரிய அளவில் போற்றப்படுபவரும், இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றவரும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஜானகி அம்மாள் விருது பெற்ற விஞ்ஞானி வீணா டாண்டன் அம்மையார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரது அறிவியல் பங்களிப்பை உலகம் அறியும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ள முனைவர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி ஐயா 🙏
Pingback: அணுவியல் பாதுகாப்பு விஞ்ஞானி பலராமமூர்த்தி