உலகம் போற்றும் இந்திய தாவர மரபணுவியல் வித்தகர் சுனில் குமார் முகர்ஜி (Sunil Kumar Mukherjee)
– ஆயிஷா.இரா.நடராசன்
தொடர் : 54 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
தாவர மரபணுவியல் மற்றும் மூலக்கூறில் விஞ்ஞானியான சுனில் குமார் முகர்ஜி (Sunil Kumar Mukherjee) புது டில்லியில் இருக்கும் தேசிய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆய்வகத்தின் தாவர மூலக்கூறு இயல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நோயற்ற தாவரங்களை உருவாக்குவதில் உலகில் மிகப்பெரிய வழிகாட்டியாக அவருடைய ஆய்வுகள் திகழ்கின்றன. தாவர உயிரியல் வல்லுநரான சுனில் குமார் முகர்ஜி DNA ரெப்ளிகேஷன் என்று அழைக்கப்படும்.. மரபணு பிரதியாக்கத் துறையிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலகின் 40 சதவிகித பயிர்கள் பூச்சிகள் அல்லது கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் ஆகியவற்றால் பாக்கி அழிக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்களை பட்டினியில் கடத்துவதை அறிவித்துள்ளது. தற்போதைய காலநிலை மாற்றங்களும் ஏனைய சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் சேர்ந்து இந்த நுண்ணுயிரிகளை தாவரங்களை தாக்குவதற்கான பலம் பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளன. இவற்றை சமாளிப்பதற்கு பூச்சிக்கொல்லிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் காற்றையும், குடிநீரையும் நச்சு ஆக்குகின்றனத்தோடு நமக்கு கிடைக்கும் உணவுப் பொருளின் சத்தையும் பெருமளவு தாக்கி நசிந்து போக வைக்கின்றன.

மரபணு மாற்ற பொறியியலின் மூலம் இந்த பிரச்சினைக்கு அற்புதமான தீர்வு கண்டவர்தான் விஞ்ஞானி சுனில் குமார் முகர்ஜி (Sunil Kumar Mukherjee). பூச்சி கொல்லிகளை பயன்படுத்த பயன்படுத்த அவை விவசாய மண்ணை முற்றிலும் சிதைப்பதோடு மட்டுமல்ல இந்த நுண்ணுயிரிகளை மேலும் மேலும் அவற்றை தாங்கக்கூடிய சக்தி உடையவையாக பூச்சிக்கொல்லிகள் மாற்றிவிட்டன. முகர்ஜி போன்ற விஞ்ஞானிகள் இந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு தாவரங்களினுடைய உடலுக்குள் இருக்கும் செல்களின் மரபணுக்களில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியுமா என்பதை நோக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
தாவர உயிரியலாளராக முகர்ஜி தாவரத்தின் உடைய மரபணுக்கள் ஆன DNA மற்றும் RNA களில் சிறிதளவு மாற்றத்தை தூண்டிவிட்டவுடன் அத்தாவரங்கள் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றதை கண்டுபிடித்து இருக்கிறார். RNA இந்த விஷயத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அது இரண்டு விதமாக செயல்படுகிறது. இதற்கு RNA INTERFERENCE என்று பெயர். விஞ்ஞானிகள் அதனை சுருக்கமாக RNAi என்று அழைக்கிறார்கள். இது இரண்டு விதமாக செயல்படுகிறது. முதலாவதாக இது தாவரம் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான புரதங்களையும் நோய் காலங்களில் இருமடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது. இரண்டாவதாக வைரஸ் போன்ற தாக்குதலின் பொழுது வைரஸ்கள் செயல்பட முடியாமல் அவை இனப்பெருக்கம் செய்யவிடாமல் RNAi தடுக்கிறது என்பதை முகர்ஜி கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்.

இந்த விஷயத்தில் தாவரங்களுக்குள் நுழைகின்ற வைரஸ்களும் தாவரத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள RNAi வகை மூலக்கூறுகளும் ஒன்றுக்கு ஒன்று எப்படி கடும் தாக்குதலில் ஈடுபடுகின்றன என்பதை மூலக்கூறுகளின் குவாண்ட உலகிற்குள் நுழைந்து முகர்ஜி கண்டுபிடித்தார். பாக்டீரியாக்கள் பூஞ்சைகள் ஆகியவற்றை விட வைரஸ்கள் மிகவும் மோசமான ஊடுருவும் எதிரிகளாகும். இவை ஒரு தாவர செல்லுக்குள் நுழையும் பொழுது அதனுடைய DNA வை செயலாக்க விடாமல் தடுத்து தங்களுக்கு சேவை செய்யுமாறு அவற்றை திருப்பி விடுகின்றன. இந்த DNA -க்கள் தங்களுடைய தாவர செல் சம்பந்தமான உற்பத்தியில் ஈடுபட ஈடுபடுவதை விட்டுவிட்டு வைரஸ்களின் இனப்பெருக்கத்திற்கு உதவி செய்ய தொடங்குகின்றன. இந்த இடத்தில் தான் RNA நுழைகிறது. RNA தலையீடு என்று நாம் அழைக்கும் RNA INTERFERENCE உடனடியாக செயல்பட தொடங்குகிறது. இது வைரஸினுடைய முக்கியமான தகவல்களை உடைத்து அவற்றை இனப்பெருக்கம் செய்யவிடாமல் தடுக்கின்றன.
ஆனால் வைரஸ்கள் நாம் நினைப்பதைப் போல அவ்வளவு எளிதாக போராட்டத்தை கைவிடுவதில்லை. அவை இந்த RNA களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. RNAi க்கு எதிராக RNAs எனப்படும் RNAக்களை ஒடுக்குகின்ற RNA SUPPRESSORS எனும் வகை மூலக்கூறுகளை உருவாக்கி மேலும் தாவரத்தை ஆக்கிரமிக்க வைரஸ் முயற்சி செய்கிறது என்பதை முகர்ஜி கண்டுபிடித்தார். RNAi மற்றும் RNAs இரண்டுக்குமான கடும் போராட்டத்தில் RNAi வெற்றி பெற்றால் தாவரம் காப்பாற்றப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்த முகர்ஜி 16 வகையான உணவு தாவர பயிர்களில் வைரஸ்களுக்கு எதிரான RNAi மூலக்கூறுகளை பலப்படுத்தும் வித்தைகளை உலகிற்கு அறிமுகம் செய்தார்.
![]()
தாவரத்தின் உடைய விதை களுக்குள்ளேயே மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. நெல் சாகுபடி கோதுமை பருப்பு வகைகள் தானியங்கள் உலக அளவிலான ஏனைய உணவு தாவரங்களில் முகர்ஜியின் RNAi மூலக்கூறு உருவாக்கம் எனும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
சுனில் குமார் முகர்ஜி (Sunil Kumar Mukherjee) கல்கத்தாவில் பிறந்தவர். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டத்திற்கு தாவரயியல் பாடத்தை எடுத்து படித்தவர், முதுகலை பட்டத்திற்கு தாவர உடலியல் சிறப்புப் பாடத்தை எடுத்து கொண்டார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காக மரபணு பிரதியாக்கம் என்கிற துறையை கையில் எடுத்தார். இன்று விஞ்ஞானி சுனில் குமார் முகர்ஜி (Sunil Kumar Mukherjee) கண்டுபிடித்து வழங்கிய தாவர நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தி மரபணு மாற்றம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய புற்றுநோய் எதிர்ப்பு மருந்தியல் நிபுணர் சீமா பட்நாகர் (#SeemaBhatnagar)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: பருப்பொருள் இயற்பியலாளர் சுபோத் ரகுநாத் ஷெனா