இருவர்
**********************************

உனது டைரியில் எழுதி வருகிறேன்
எனது நாட்குறிப்புகளை.
உனது டைரி முழுவதும்
எனது கையெழுத்து,
உதடுகளைச் சுழித்து என் எழுத்துக்களை நீ வாசிக்கையில்
லேசான தூறலில் குப்பை மேட்டிலிருந்து எழும் சாம்பலாய்
உனது டைரியிலிருந்து எழுகிறது
வியர்வையின் ,கண்ணீர்.
அழுகிய முட்டையை வேக வைத்துத் தீய்த்தது போன்ற
கசப்பும் புளிப்புமான அனுபவங்களின் பிரதிபலிப்பில்
என் உருவம் எங்கோ தட்டுத் தடுமாறி நடப்பதை
நட்சத்திரங்கள் பார்த்து உனக்குச் சொல்கின்றன.
டைரிக்கு வெளியே
துளித் துளியாக வலுக்கத் தொடங்கும் மழை
பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து பெய்கையில்
இணைந்து நனைகிறோம் நீயும் நானும்.
ஆழமாய்க் கிழிந்து ஆறாத காயம்போல்
இன்னமும் குருதி கசியும்
டைரிக்கு உள்ளே
நீயும் நானும் .
——————————————————————————————-
போர் முடிந்து விட்டது
**********************************
![]()
இறக்கைகள் வெட்டப்பட்ட பறவையைப் போல
கடலில் விழுந்து கிடக்கிறது சூரியன்
மொத்த வாயு மண்டலமும்
துரோக விஷம் கலந்து விம்மி நிற்கையில்
அகரத்தை சுவாசிக்கும் நாசிகள்
பிராண வாயு தேடி மூச்சுத் திணறி நிற்கின்றன
தலைவர்களின் நாவுகளில் கசக்கும் சுயநல அமிலத்தில்
மெல்லக் கரைகிறது மிட்டாய் போல தீவு.
வஞ்சகக் கறை படிந்த வாளைக் கழுவும்
கொண்டாட்டம் தொடங்கி விட்டது.
இசைக் கலைஞர்களே !
உலகின் எண்திசைகளிலிருந்தும் வாருங்கள்
உங்கள் இசைக்கருவிகளை மீட்டி வாழ்த்துப் பாடுங்கள்
கவிஞர்களே ! பொன்னாடைகளைப் போர்த்துங்கள்
புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்
விருதுகளைப் பெற்றுச் செல்லுங்கள்
காணாமல் போன கடவுள்
காற்றில் பாய் மரம் விம்மியபடி வரும்
ஏதெனும் ஒரு கப்பலில்
தங்களைக் காக்க வருவானோ என்று எதிர்பார்த்தபடி
பனை மர உச்சியில் ஏறி பார்த்திருக்கிறது
புராதன இனம் என்பதைக் கண்டு கொள்ளாதீர்கள்.
விருந்து தொடர்ந்து நடைபெறட்டும்
சிவப்புச் சாராயமாக
உங்கள் சொந்த சகோதரர்களின் ரத்தம்
பரிமாறப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
—————————————————————————————
பொம்மைத் தொழிற்சாலை
**********************************

மொழிக்குக் கீழே இருக்கும் சுரங்க அறைகளில்தான் உள்ளன
நாங்கள் இறக்கை கட்டி விளையாடுவதற்கான
பொம்மைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை.
நான் கூட அங்கேதான் வேலை செய்கிறேன்.
அதிகாலை, மதியம், நடுநிசி என்று மூன்று ஷிஃப்டுகள்.
தொடர்ந்து உழைக்கிறேன்.
ஆனால் என் மனைவி கடுமையாகப் புகார் சொல்கிறாள்
எனக்குப் பின்னால் ஒரு சவக்குழி தொண்டப்பட்டுக் கொண்டிருப்பதை நான் கவனிப்பதில்லை என்று.
தொழிற்சாலையின் அதிகாரிகள்
பார்த்துக் கொள்வார்கள் என்று நான் அவளிடம் சொல்கிறேன்.
அவள் நம்புவதில்லை ஏனோ.
கடலுக்கு அப்பாலிருந்து
மரணத்தின் வாசனை வருகிறபோதெல்லாம்
அதிகமாகக் கத்துகிறாள் அவள்.
நாங்கள் வழவழப்பான இனிய வலைகளால்
மூக்கைப் பொத்திக் கட்டிக் கொண்டு
எங்கள் வேலைகளைப் பார்க்கிறோம்.
********************************

