தாயின் அரவணைப்பு தவறிய
தொட்டில் பருவம்
பள்ளிப் பருவத்தில் அறிமுகமான
இளைய பசி
வறுமையால் விட்டு விலகிய
இனிய கல்வி
மூளைச்சலவையால் இளமையைத் தின்னும்
தீவிரவாதம்
பெண்குழந்தை பெற்றவளிடம்
தொடரும் பதற்றம்
படுக்கையில் விழுந்தவனின்
வாழ்வின் மிச்சம்
குழந்தை இல்லாதவளைக் கிழிக்கும்
சொற்களின் கூர்மை
வீரனையும் எளிதாக வீழ்த்தும்
ராஜ போதை
இல்லறத்தில் சந்தோசத்தை
விழுங்கும் சந்தேகம்
பாலியல் தொழிலாளியை நேசமாய்
நெருங்கும் இரவு
சுயநலவாதிகளிடம் அகப்பட்ட
நேர்மையற்ற ஆன்மீகம்
அடிமைகளைப் பிரசவிக்கும் அதிகாரத்தின்
நவீன அவதாரம்
மிருகத்தை விட மனிதனை
மலிவாக்கும் மதபேதம்
தீட்டை திருவாக்கும் உள்ளங்களால்
சாகாத சாதீயம்
சமத்துவத்தை ஊனமாக்கும் அரசியலின்
பிரிவினை வாதம்
நிழலாய்த் தொடர்ந்து
மனங்களை முடமாக்கும் மூடநம்பிக்கை
மூடிய வாசலை இன்னும் திறக்கும்
திருவோட்டின் அதிசயம்
வன்புணர்வால் கடவுள் சந்நிதியில்
படிந்துவரும் கறை
ஒருதலைக் காதலாய்
ஒவ்வொரு தோளிலும்
யாருமற்றுப் பயணிக்கிறது
புதிய வடிவங்களில்
ஏதேனும் ஒரு பார சிலுவை
ஆன்மாக்களின் தேடலில்
பிரதானமாய்
இன்னொரு தோள்…
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

