ஏப்ரல் 29 - சர்வதேச நடன தினம் | International Dance Day - நவீன பாலேவின் "தந்தை" ஜீன்-ஜார்ஜஸ் நோவர்ரே (Jean-Georges Noverre) பிறந்த தினமாகும் - https://bookday.in/

ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம்

சர்வதேச நடன தினம்

மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றோடு நீடித்த பிணைப்பைக் கொண்டிருக்கிறது நடனம். சிறு குழந்தைகள் தொடங்கி, அனைத்து வயதினரும் வாழ்வில் ஒரு தருணத்திலாவது நடனத்திற்கு தங்கள் மனதை பறிகொடுத்து இருப்பார்கள். பொழுதுபோக்காக, தொழில்முறையாக, பண்பாடாக, கலாச்சாரமாக, நம்பிக்கையாக அவ்வளவு ஏன் மருத்துவ சிகிச்சையாக கூட நடனம் பரிணமித்து இருக்கிறது. மனித நாகரீக வளர்ச்சியின் காலப் பயணத்தோடு, நீண்டநிலைத்த தொடர்பை கொண்டிருக்கும் நடனத்தை சிறப்பிக்கும் சர்வதேச தினம் இன்று. இந்த தினத்தில், நடனத்தின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போமா.

வரலாறு

நடனக்கலை என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று காலத்திற்கு முன்பே தோன்றியது என வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மனித நாகரீக வளர்ச்சி தொடங்கி இருந்த காலகட்டத்திலேயே மனிதர்களோடு நடனக்கலையும் சேர்ந்தே பரணமித்திருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலம் பீம்பெட்க (Bhimbetka) குகை ஓவியங்களில், மக்கள் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஓவியங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.இதுவே மிகவும் பழமையான நடனம் குறித்த வரலாற்று சான்றாகவும் கருதப்படுகிறது. அதேபோல, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்து நாகரீகத்தில் நடன கலை காணப்பட்டதை,அங்கு இருக்கும் பிரமிடு சிற்பங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

நடன கலை என்பது வரலாற்றின் வளர்ச்சியில் பொழுதுபோக்காகவும், நம்பிக்கையாகவும், கலாச்சாரமாகவும், வழிபாட்டு முறையாகவும் வளர்ந்து வந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில், இன்றளவும் கூட பண்பாட்டு நம்பிக்கையாக நடனக்கலைகள் அரங்கேற்றப்படுகிறது. ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு தனித்துவமான இனக்குழுக்களைக் கொண்ட பிரதேசங்களில், மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுடைய நடனங்கள் அமைந்திருக்கிறது. நடனத்திற்கு ஏற்ப, இசையும் அத்தோடு சேர்ந்து பரிணமித்து இருப்பதை கவனிக்க முடிகிறது.

இந்திய நடனம்

இந்திய பாரம்பரிய நடனங்கள் கிமு.200 களில் வளர்ச்சி பெற தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்திய பாரம்பரிய நடனங்கள் பெரும்பாலும், நம்பிக்கை சார்ந்த பண்பாடுகளை அடிவோற்றி வளர்ந்திருக்கிறது. மாநிலங்கள், பிரதேசங்கள்,மொழிகள் மற்றும் பண்பாடுகள் அடிப்படையில் இந்திய நடனக்கலை பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது. பரதநாட்டியம், கதகளி, கதக், குச்சிப்புடி, கோமார் உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான பாரம்பரிய நடன கலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

உலகளாவிய அளவில் இந்திய பாரம்பரிய நடனங்கள் தனித்த கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை.
ஐக்கிய நாடுகள் அவை போன்ற உலகளாவிய அமைப்புகள்,இந்திய நாட்டுப்புற கலாச்சார நடனங்களை அங்கீகரித்து சிறப்பு செய்திருக்கிறது.

திரைத்துறையின் வளர்ச்சிக்கு பிறகு, இந்திய நாட்டுப்புற நடனங்கள் பெருமளவில் திரைக்காட்சிகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கூட இந்திய பாரம்பரிய நடனங்கள் தெளிவுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1948 ஆம் ஆண்டு, இந்திய பாரம்பரிய நடன கலைஞரான, உதய் சங்கர் மற்றும் லலிதா-பத்மினி சகோதரிகள் உட்பட பலர் நடிப்பில் வெளியான “கல்பனா” எனும் ஹிந்தி திரைப்படம் தான் இந்திய பாரம்பரிய நடனங்களை ஆவணப்படுத்திய முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படமானது, இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக திரைத் திருவிழாவில் கூட, திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கூட பரதநாட்டிய உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை அடிப்படையாகக் கொண்ட, சலங்கை ஒலி(1983), தில்லானா மோகனாம்பாள் (1968) போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

தமிழ்நாடு:-

பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் என தமிழர்தம் பண்பாடோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்புற நடனங்கள் இன்றளவும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தப்படுகிறது.

சங்ககாலத்தில், மக்கள் தம் நம்பிக்கை வழிபாட்டோடு சார்ந்த “வேலன் வெறியாட்டம்” குறித்து குறுந்தொகை 263 வது பாடலில் குறிப்பிடப்பட்டு இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோதக் கன்றே தோழி! – குறுந்தொகை 263

நாட்டிய மங்கையான மாதவி மற்றும் அவளது மகள் மணிமேகலை என தமிழ் மொழியில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய காப்பியங்களில் கூட நடனக் கலைக்கு தனித்த ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மணிமேகலை காப்பியத்தில், நடனக் கலையினையும் கடந்து, நாட்டிய மேடை அமைத்தல் மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் திரைச்சீலைகள்(எழினி)குறித்து கூட பல்வேறு பாடல்கள் வழி, சீத்தலை சாத்தனார் விளக்குகிறார்.

மேடை நடனத்தையும் கடந்து, நீச்சல் நடனம் (synchronize swimming) குறித்தும், சங்கத்தமிழ் பாடல்கள் நமக்கு அரிய குறிப்புகளை வழங்குகிறது. சேர நாட்டை சேர்ந்த இளவரசன் ஆட்டனத்திக்கும், கரிகால் சோழனின் மகள் ஆதிமந்திக்குமான காதல் திருமண உறவு குறித்து அகநானூற்றுப் பாடல்களில் பரணர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது குறித்து, பெ. தூரன் அவர்கள் ஆதி அத்தி எனும் நாடகத்தையும் இயற்றி இருக்கிறார்.
இதன்மூலம்,தமிழர்தம் கலை இலக்கியப் பண்பாட்டில், நடனக்கலை பெற்றிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

நன்மைகள்

நடனத்தின் மூலம் பல்வேறு நன்மைகளும் சேர்ந்தே விளைகின்றன. மனித உடல் இயங்கியலில், நடனக்கலை பல்வேறு நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. நடனத்தின் மூலம் தசைகளின் இயக்கம் சீர்படுத்தப்படுவதோடு, உடல் சமநிலையும் அதிகரிக்கிறது.
நடனம் ஆடுவதன் மூலம் உடலில் இருக்கும் கலோரிகள் செலவழிக்கப்படுவதோடு, உடல் எடையை கட்டுப்படுத்துவதிலும் பங்களிக்கிறது.

மனதிற்கு அபரிவிதமான புத்துணர்ச்சியை தருவதில் நடனத்திற்கு என தனித்த பங்கு உள்ளது. நடனம் ஆடுவதன் மூலம் சமூக தொடர்புகள் அதிகரிப்பதோடு, தயக்க உணர்வும் பறந்து போகிறது. உளவியல் சார் பிரச்சனைகள் கூட, மனதிற்குப் பிடித்த இசையோடு சில நிமிடம் ஆடும் நடனத்தில் கரைந்து போவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நடனம் என்பது குறிப்பிட்ட வயதினருக்கானது என்பதல்ல. அனைத்து வயதினராலும் நடனமாட முடியும். மேலும், ரத்த அழுத்தம்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், முறையான மருத்துவ ஆலோசனையோடு சில நிமிடங்கள் தினம் தோறும் நடனப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

திரையில் நடனம்

உலகளாவிய திரைத்துறை வளர்ச்சியின் தாக்கத்தில் நடனத்திற்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது. பல்வேறு திரைப்படங்களை நினைவு வைத்துக் கொள்வதற்கு திரைப்படங்களின் திரை இசை பாடல்களும், சிறந்த நடனக்கலையுமே சான்றாக அமைகின்றன. மேலும், உலகளாவிய நாடுகளின் நடன கலைகளும் திரைகளின் மூலம் உலகறிய செய்யப்பட்டுள்ளது.

தற்காலத்தில் வெளியாகும் சினிமா திரைப்படங்களில் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பாடல் காட்சிகளும், அதில் இரண்டு முதல் நான்கு நடன காட்சிகளும் தவறாமல் இடம்பெற்று விடுகிறது.உலக சினிமாவில் நடன காட்சிகளுக்காகவே கொண்டாடப்படும் திரைப்படங்களுக்கு தனி பட்டியலே தயாரிக்க முடியும்.

அதேபோல,தன்னுடைய நடனக் கலையின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியவர் தான் மைக்கேல் ஜாக்சன். அவர் மறைந்தாலும், அவருடைய மூன் வாக்(moon walk) நடனத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். திரைத்துறையின் அடுத்தடுத்த பரிணாமங்களிலும் நடன கலை தொடர்ந்து பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடன வியாதி

ஜூலை மாதம் 1518 ஆம் ஆண்டு புனித ரோம சாம்ராஜ்யத்தில் திடீரென சில பேர் தொடர்ந்து நடனமாட தொடங்கினர். அவர்களைப் பார்த்த பிறரும், இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டு நடனமாட தொடங்கினர். சிலர் தொடர்ந்து பல மணி நேரம் நடனமாடியதாக கூட கதைகள் இருக்கின்றன. இறுதியாக தொடர்ந்து நடனமாடி மாரடைப்பு ஏற்பட்டு, 400க்கும் அதிகமான நபர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் உயிரிழந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அக்கால, மக்கள் இது ஒரு புதுவித நோய் அல்லது சாபம் என நம்பத் தொடங்கினர். பிற்காலத்தில் இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள், அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக, இது போன்ற நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான மன அழுத்தம், தீவிர உளவியல் சார் பிரச்சனைகளின் காரணமாக, திடீரென நடனம் ஆட வேண்டும் எனும் எண்ணங்கள் கூட ஏற்படலாம் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். திடீரென உணர்ச்சிவசப்பட்டு, சத்தம் போட்டுக்கொண்டு நடனம் ஆடுவதற்கு பின்னாலும் இது போன்ற உளவியல் சார் நோய்கள் காரணமாக இருக்கலாம்.ஆனால், தற்கால சிகிச்சை முறைகளின் மூலம் இதை சரி செய்து விட முடியும். இருந்தபோதிலும், வரலாற்றில் நடனமும் ஒரு வியாதியாக பரவியது எனும் கதையை படிக்கும் போது சற்றே சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

சிறப்பு தினம் :

உலக நடன தினமானது, ஆண்டுதோறும் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடப்படும் என 1982 யுனெஸ்கோவின் துணை அமைப்பான ITI(international theatre institute)ஆல் அறிவிக்கப்பட்டது. நவீன பாலே(Ballet)நடனத்தின் தந்தை என வர்ணிக்கப்படும், பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த சான் சியார்ச் நோவேர் அவர்களின் பிறந்த நாள் தான், உலக நடன தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், நடனம் மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்த சிறப்பு தினம் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் நிகழ்த்தப்படும் நடனக்கலையின் சிறப்பை எடுத்துச் சொல்லும் உலக நடன தினம் இன்று.

கட்டுரையாளர்:

ஶ்ரீ காளீஸ்வரர் செ
இளங்கலை இயற்பியல் மாணவர்
தெ.தி.இந்து கல்லூரி.
நாகர்கோவில் – 02

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *