அழகான சந்தேகம்
உணர்ச்சிகளின் விளைச்சலால் அறுவடை ஆவது கவிதை !கிளர்ச்சிகளின் வளர்ச்சியால் கிடைப்பது கவிதை!
தமிழ் உணர்ந்து கொண்டிருப்பது தமிழை பாடமாக எடுத்து படித்தவர்களால் மட்டுமல்ல தொழில்நுட்பம் படித்தவர்களாலும் தான்.
கவிஞர் மோகன் பாலகிருஷ்ணா அவர்கள் சிறந்த கட்டிடப் பொறியாளர் கட்டுப்பாட்டோடு அளவெடுத்து கோடு போடும் அவரது விரல்களில் விளைந்து வந்திருப்பவை கட்டுப்பாடற்ற கவிதைகள்!
மோகன் பாலகிருஷ்ணா மனோவசியக் கலையை நன்கு அறிந்தவர்; சிறந்த மனோதத்துவ நிபுணர்களால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனையுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வெற்றி கண்டவர்!
தகுதியில்லாமல் விளம்பரத்தால் வாழும் மனிதருக்கு மத்தியில் விளம்பர விருப்பம் இல்லாமல் வாழும் மனிதர் கவிஞர் மோகன் பாலகிருஷ்ணா.
அடித்தளம் போடும் ஆழம் அறிந்த இவரது உள்ளம் கவிதையின் ஆழத்தைக் கணக்கிட்டு வைத்திருக்கிறது.
முழுதும் தெரியாமல் ஒரு மொழியை அரைகுறையாய்ப் பேசி வாய் அழுகிப்போனவர்கள், தன் குழந்தைகள் ‘மம்மி’, ‘டாடி’ என்றால் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அந்த மதி கெட்டவர்களைப் பார்த்து நொந்து அவரது உள்ளத்தில் இருந்து ஓடி வந்திருக்கிறது ஒரு கவிதை அதன் தலைப்பு ‘ரயில் பெட்டிகள்’
இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; உங்கள் குழந்தைகள் ஆலம் விழுதா? ஐரோப்பிய பெட்டிகளா?
எல்லாரும் திருமணத்திற்கு முன்னால் காதலிப்பார்கள் இவர் திருமணத்திற்கு பின்னாலும் காதலித்திருக்கிறார்.
காதலிக்காகக காத்திருத்தல் கவிதையாகிவிடுகிறது.
ஒவ்வொரு காதலனுக்கும் காதலி புதிராகவே இருப்பார்களோ?
கவிஞர் மோகன் பாலகிருஷ்ணா அவர்கள் தன் காதலியின் விரல்களைக் கண்காணிக்கிறார் அவருக்கானச் சந்தேகம் இருப்பதாய் சந்தேகப்படுகிறார் அவருக்கோ புரியவில்லை எழுதுகிறார்
‘ஒன்றுமே புரியவில்லை!
எல்லாம் புதிராய்...
ஒருக்கால்
ஒவ்வொரு விரலும்
ஒவ்வொரு நீயா?
அவரது சந்தேகம் அழகான சந்தேகம். பூக்கள் என்பது இயற்கை படைத்த வெற்றி கோப்பை காற்று அதை நிரப்புகிறது.
பள்ளம் என்பது வெள்ளம் வந்து தங்கும் வசதியான தட்டு,
உள்ளம் கூட ஒரு வெற்றி கோப்பை தான் மோகன் பாலகிருஷ்ணா அழைக்கிறார்.
இந்த வெற்றுக் கோப்பை விழுந்து நொறுங்கி விடுவதற்கு முன்பு வந்து உன்னை நிரப்பு.
ஒழுகாமல் இருக்கும் இந்த ஓட்டை கிண்ணத்தில் அமுதமாய் வந்து அமர மாட்டாயா?
‘சனிக்கிழமைகளில்’ என்ற கவிதையில் ஆன்மீகத் தேடலுக்கு அலைக்கிறார்.
என் வெறுமைக்குள்
நீ
முழுமையாய் இறங்கு
நாம்
ஒருவரில் ஒருவர்
கலந்து மகிழலாம்
நண்பர் மோகன் பாலகிருஷ்ணா மனோவசிய கலையோடு (ஹிப்னோ தெரபி) கவிதைக் கலையையும் (பொயட்டித்தெரப்பி) தொடர்ந்து செய்து, வெற்றி காண விழைகிறேன்
கவிஞர் தமிழ்அமுதன்
திரைப்படப் பாடலாசிரியர்
நிறுவனர் – தலைவர்
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

