சோ.தர்மனின் சூல் நிறைசூலியும் நீர்ப்பாய்ச்சிகளின் அறமும் கொலையுண்ட வரலாறு.
அ.ம.அங்கவை யாழிசை

என் தாத்தா சோ.தர்மன் அவர்கள் எழுதிய ‘சூல்’ எனும் கதை நூலை அண்மையில் படித்து முடித்தேன். இந்நூலைப் படித்ததில் பேத்தியான எனக்குப் பெருமிதம்தான். இதனைப் படித்து முடிக்க வெகு நாட்கள் ஆகிவிட்டன. நூலின் பல பக்கங்களை ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். அதில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், அனுபவத் தத்துவங்களையும், அதில் வந்து போகும் சம்சாரிகளின் வாழ்வியல் அறங்களையும் என் மூளைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அந்தத் தகவல்களைக் குறித்து வைத்தும் எழுதி வைத்தும் வந்தேன். பக்கங்கள் செல்லச் செல்ல இப்படி எழுதி வந்தால் முழுப் புத்தகத்தையும் அப்படியே எழுத நேரிடும் என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு நிறைய மனிதர்களும், நிறைய தகவல்களும், நிறையக் கதைகளும் சூல் நூலில் நிரம்பிக் கிடக்கின்றன.

சூல் என்பது நீர் நிலைகளை மையமாகக் கொண்டது என்பதால், ‘நீர் சூழ்ந்த நிலப்பரப்பு’ என்பது போன்ற பொருள் கொண்டது என்றுதான் வாசிக்கும் முன்புவரை நினைத்திருந்தேன். பிறகு, அடிக்கடி கண்மாயை ‘நிறைசூல் கர்ப்பினி’யாக விவரிப்பதை வைத்து இதன் மெய்யான பொருளை விளங்கிக் கொண்டேன்.

முழுக்க முழுக்கக் கண்மாயை மையமாகக் கொண்ட கதைதான் சூல். அந்தக் காலத்தில் மொத்த ஊரும் வெள்ளாமையும் கண்மாயைச் சார்ந்திருந்தன. அந்தப் பின்புலமும் வாழ்வும்தான் சூல் காட்டும் பேருலகம்.

இதில் வரும் பல குறிப்புகள் எனக்கு ஆச்சரியமானதாகவும் மிகவும் புதியதாகவும் இருந்தன. ஆண் பனை, பெண் பனை வேறுபாடுகள், பறவைகள், விலங்குகளின் செயல்பாடுகளை வைத்து மழை அறிகுறி அறிதல், மழையைப் போதும் என வழியனுப்பும் வழிபாடு என மிகப் பல விடயங்கள் கிடைத்தன. அன்றைக்கு மக்கள் என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை நினைக்கையில் வியப்பாய் இருக்கிறது.

இந்தக் கதையில் இடம்பெறும் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்திருக்கிறது. அந்த மனிதர்கள் பல கதைகளைச் சுமப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய மனிதர்களைப்போல அன்றைய மனிதர்கள் எவரும் வெறுமையாக இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு கதையைச் சுமந்து கொண்டு நிறைந்திருந்தார்கள். உருளைக்குடி கண்மாயைப்போல அதைச் சார்ந்து இருந்த மக்களின் மனதும் விசாலமானதாய் இருந்திருக்கிறது. அந்தக் கண்மாய்த் தண்ணீரின் தூய்மையைப்போல மக்களின் மனதும் இருந்திருப்பதைப் பிரதிபலிப்பதாய் இருந்தது சூல் நூல்.

உருளைக்குடியில் வாழ்ந்த சம்சாரி மக்கள், தங்களைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தனர் அல்லது கதையாகச் சொல்லி வந்தனர். நாம் வணங்கும் பல தெய்வங்கள் விண்ணிலிருந்து பிறந்தவை அல்ல; நம்மோடு நம் மண்ணில் வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதற்கான முன்னோர் வழிபாட்டை உணர்த்தும் பல கதைகள் நூல் முழுவதிலும் வந்தன. காகத்திற்கு ஏன் கோனப் பார்வை என்பதற்குக்கூட ஒரு கதை சொல்வார்கள். இதுபோன்ற கற்பனைத் திறனின் உச்சங்களைப் பல கிளைக் கதைகளில் காணமுடிந்தது.

அந்தக் காலத்தில் பல நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள். இக்கால வழக்கின்படி அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். இந்த மூடநம்பிக்கைகள்தான், அந்தக் கால மக்களைப் பல மூடத்தனமான காரியங்களைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதையும் இந்நூல் சுட்டிச் செல்கிறது.

நம் மண்ணில் எங்கும் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், ஜிலேபிக் கெண்டை மீன்கள் இவற்றை ஆங்கிலேயர்கள்தான் நம் மண்ணில் விதைத்துச் சென்றதாக எண்ணினேன். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கம்தான் இம்மண்ணை பாழாக்கிட அந்த நிலத்தின் சம்சாரிகளையே நட வைத்தது என்பது எனக்குப் புதிய செய்தி.

உருளைக்குடி மக்களின் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தைக்கூட மறைத்தும் மறந்தும் வாழ்பவர்களுக்கு மத்தியில் இருந்தால் அந்த வாழ்க்கை அழகாய்த்தானே தெரியும். கதையில் வரும் உறவுக்காரர்களின் கேலிப் பேச்சுகள் எனக்கு மிகப் புதியதாக இருந்தன. என் அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் பலமுறை கேட்ட கேள்வி, இப்படி எல்லாம் கூடவா வெளிப்படையாப் பேசுவாங்க என்பதுதான். ஏனெனில், அவர்களின் பேச்சுக்கள் அவ்வளவும் வெளிப்படையாகவே இருந்தன.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தையப் பழமையான கிராமத்து வழக்காறுகள் என்பதால், நூலில் வரும் பல சொற்களின் பொருள்கள் எனக்கு முதலில் புலப்படவில்லை. கதைக்குள் போகப் போகத்தான் அவற்றின் பொருள் புரிந்தன. கதையில் அவர்கள் பேசும் வசவுச் சொற்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. நான் கவனித்த மட்டும், கதையில் ‘அம்மா’ என்ற சொல் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்று அஞ்ஞா அல்லது ஆத்தா. இவைதான் அம்மாவைக் குறித்த சொற்கள். அம்மா எனும் சொல் வரவே இல்லை. அப்பா என்பதற்கும் ஐயா அல்லது அப்பன் என்றுதான் வந்துள்ளன. மேலும், இந்த நூலின் வாயிலாகப் பழைய சொலவடைகள் எனக்குப் புதிதாக அறிமுகம் ஆயின.

அக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் சிந்திக்க வைக்கும்படி இருந்தன. ஒரு மாதத்திற்குக் கோவில் பகுதியைச் சுத்தம் செய்வது, கோவிலுக்கு விளக்குப் போடுவது என்று சமூக நெறிமுறைகளைச் சார்ந்தே இருந்திருக்கின்றன. குற்றத்திற்குத் தண்டனையும் குற்றவாளிக்கு மன்னிப்பும் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நூல் விவரித்திருக்கிறது.

நூலை முழுவதும் படித்து முடித்ததற்குப் பின்பாக, எனக்கு இப்போது சூல் நாவல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது, கொப்புலாயி பாட்டியும் அவளின் வெகுளித்தனமும்தான். அவளுடைய வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசியில் அவள் கூறுவது என்னைப் பிரமிக்க வைத்தது. காட்டுப்பூச்சிப் பயல் பட்டணத்திற்குச் சென்று வந்ததைக் கூறும்போது ‘துட்டு கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்’ என்று சொன்னது, கொப்புலாயி பாட்டியை மிகவும் பாதித்தது. ‘துட்டு வாங்கிட்டு சோறு போடுற ஊர் விளங்குமா? அந்த ஊர்ல மனுஷங்க எப்படி வாழ்றாங்க? அந்த ஊருக்கு என்ன பாவம் கிட்டுமோ? என்று புலம்பித் தீர்ப்பார்.

அந்தக் காலத்தில் வழிப்போக்கர்கள் கேட்டால் அன்னம் இடுவார்கள் என்பது தெரியும். ஆனால், அன்னத்திற்குக் காசு வாங்கக் கூடாது; அது பாவம் என்பது எனக்குத் தெரியாது. எவ்வளவு பெரிய விடயம் இது. ஊருக்குள் சாமியார்கள், பண்டாரங்கள் என யார் வந்தாலும், அவர்கள் தெருவில் வந்து கையேந்தக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆனதை அந்த ஊர் இளவட்டங்களே எல்லோர் வீட்டிலும் சென்று வாங்கி வந்து கொடுப்பார்கள் என்பதும் எனக்கு மேலும் புதிய விடயம். அவர்களை அன்னத்திற்காகக் கையேந்தவிடும் ஊர் விளங்காது என்பது அவர்களது நம்பிக்கை. அன்று வாழ்ந்த எல்லோரும் ஊருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். இல்லையென்றால் பாவத்திற்குக் கட்டுப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன.

முந்தையக் காலத்தில்தான் சாதிச் சண்டைகள் அதிகமாக இருந்தது அல்லது இருந்திருக்கும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால், கதையில் பல சமூகங்களுக்குள் உள்ள புரிதலும் ஒற்றுமையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி இருந்தவர்களைப் பிரித்துப் பகையாக்கியது யாரோ? எதுவோ?

கதையில் மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், அப்பாவத்தின் பலனாக ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும். விரோதம் காரணமாக ஊர்க் கண்மாயை உடைத்தவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும். இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன. எப்போதும் சிரிக்கும் கண்மாயை ஊமையாக்கியவன் பரம்பரையில் ஊமைப் பிள்ளை பிறக்கும். இது போன்ற பாவங்கள் ஜென்ம பாவங்கள் என்றும், தலைமுறையாகத் தொடரும் என்றும் நம்பினார்கள். ஆனால் இந்தப் பாவத்தைப் பற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. இந்தப் பாவத்திற்குப் பரிகாரங்களாக அவர்கள் சொன்னதெல்லாம், மரங்கள் வளர்ப்பது; ஆடு மாடுகள் பராமரிப்பது; கண்மாயைப் பராமரிப்பது என, இயற்கையை இணைத்துப் பயனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கதையில் வரும் குப்பாண்டிச் சாமியும் குஞ்சான் சாமியும் எதிர்காலத்தைப் பற்றி, அதாவது இன்றைய நிலையை அப்படியே கூறும்போது வினோதமாக இருக்கும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கும் நீர்நிலைகளுக்கும் ஏற்படாத அவல நிலை, நம் நாட்டவரின் ஆட்சியின்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வைத்தது. ஆங்கிலேயர்கள் மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த நம் நாட்டு அரசியல்வாதிகளால் மண் முழுதும் அடிமையானது. ஆங்கிலேயர்கள்தான் நம் வளத்தை எல்லாம் சுரண்டினார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தேன். ஆனால், மண்ணின் வளங்களைக் காக்க, அந்த வளத்தைப் பற்றி நன்கு தெரிந்த பரம்பரை அறிவு கொண்டவர்களிடம்தான் அதை ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதை இந்நூலில்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

கண்மாய்களைக் காக்கவும், வயல்களுக்கு அந்த நீரைப் பாய்ச்சவும் என நியமிக்கப்பட்டவர்கள்தான் நீராணிக்கர்கள் ஆவார்கள். கதையில் நீர்ப்பாய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நீர்ப்பாய்ச்சியும் ஊர்க் குடும்பனும்தான் ஊரின் முதன்மைத் தலைகள். இப்போது அதன் பொறுப்பை ஏற்று இருக்கும் பொதுப்பணித்துறையில் உள்ளவர்களுக்கு, சூழலியல் சார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாததன் காரணமாகத்தான், மண்ணும் தன் அடிப்படைக் குணத்தை இழந்து வருகிறது. பட்டறிவைவிட, பரம்பரை அறிவு முக்கியமானது. அது அனுபவங்களின் கோர்வை.

ஆங்கிலேயர்கள் சென்ற பின்பு, அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, உருளைக்குடியின் பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் உள்ள புறம்போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்வது நடக்கும். அந்த வயலுக்குக் கண்மாய் நீரைப் பாய்ச்சிட வேண்டுமென்று நீர்ப்பாய்ச்சியிடம் ஆணையிடும்போது, ‘முறை மாற்றி வாய்க்காலில் கண்மாய் நீர் செல்வதை அனுமதிக்க மாட்டேன்’ என்பார். அப்படி என்றால், மடைச் சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு பஞ்சாயத்துத் தலைவர் கேட்பார். ‘அய்யனாரப்பன் முன்பு ராசா தொட்டுக் கொடுத்த சாவி இது. இது எங்கிட்ட வாரதுக்கு முன்னாடி, எங்கப்பன் எப்படி அய்யனார்ட்ட ஒப்படச்சாரோ, அங்கயே நானும் ஒப்படைக்கிறேன்’ என்று கூறுவார். உருளைக்குடியின் கடைசி நீர்ப்பாய்ச்சியான அவர், மடைச்சாவியைக் கோயிலின் முன்பு வைத்து விட்டு வரும் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும்.

நிலத்தையும் நீரையும் கட்டிக்காத்த நீர்ப்பாய்ச்சிகளின் அறம் இதுதான். மிகவும் பலம் பொருந்திய காளையின் மூக்கணாங்கயிறு அவர் கையை விட்டுச் சென்றதாகவும், சரியான கைகளிடம் போய்ச் சேரவில்லை என்றால், அந்தக் காளை மாடு ஊர் நிலத்தை நாசமாக்கிவிடும் என்று கண்மாயைக் காளையாகவும், மடைச்சாவியை அதன் மூக்கணாங்கயிறாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கும்.

முன்பெல்லாம் கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை அந்தந்த ஊர் மக்களே செய்து வந்திருக்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள் நடக்கும் காட்சியை மிக அழகாகக் கூறியிருப்பார் நூலாசிரியர்.

ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த பிறகு, நாட்டில் இருந்த கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின்கீழ் சென்றன. இதனால், முன்பு போல ஊர் கூடி மராமத்துப் பணிகள் செய்ய முடியாமல் போனது. மராமத்துப் பணிகள் செய்திடப் பல பேரிடம் போய்க் கேட்டும், சாக்குப் போக்குச் சொல்லி வந்தனர் அரசியல்வாதிகள். பல வருடங்கள் ஆகியும் மராமத்துப் பணி நடக்காததால் கண்மாய்கள் மேடேரிப் போயின. இதனால் வருடத்தின் பாதியிலேயே கிணறுகள் வற்றிப்போயின. கண்மாய்களில் இருந்து வயல்களுக்குக் கரம்பை மண் எடுக்கவும் தடை. நம் ஊர்க் கண்மாயில் இருந்து நம் வயலுக்கு நாம் மண்ணெடுக்க முடியாது என்றால், எங்கு போவது? கண்மாய் அரசாங்கத்துக்கு உரியது என்றால், அரசாங்கம் யாருக்காக? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

குடிமராமத்துப் பணிகள் நடக்காத காரணத்தினாலேயே கண்மாய்களும் வயல்களும் தன் பொழிவை இழந்து போன துயர வரலாற்றைப் பேசும் சூல் நூலானது, நிறை சூலி கொலையுண்ட பெருவலியைப் பதிவு செய்திருக்கிறது. சூல் நூலானது, நீர்நிலை சார்ந்த நிலங்களையும், அந்நிலம் சார்ந்த சம்சாரி மனிதர்களையும், அம்மனிதர்களின் வாழ்வியல் பண்பாடுகளையும் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியிருப்பதாகவே உணர்கிறேன்.

பெருவாழ்வைத் தந்த நிறைசூலியும், நீர் அறத்தைக் காத்துவந்த நீர்ப்பாய்ச்சிகளும் இப்போது கொலையுண்டு போயிருப்பதை உணர்த்துகிறது இந்நூல். இதன் வலி நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பைத் தரத்தான் போகிறது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் தாத்தாவின் இந்த நூலைப் படித்ததில் பெருமை அடைகிறேன்.

நூல் : சூல்
ஆசிரியர் : சோ.தர்மன்
விலை : ரூ.₹450
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கட்டுரையாளர்:
அ.ம.அங்கவை யாழிசை,
இளநிலை சித்த மருத்துவ மாணவி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *