நூல் : சீமையில் இல்லாத புத்தகம் 
ஆசிரியர் : தேனி சுந்தர்

விலை : ரூ.₹100
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மனிதன் மொழியை இயற்கையிடமிருந்து கற்றான். பறவைகளின் கிறீச்சல்கள் பூச்சிகளின் ரீங்காரங்கள் காற்றின் அசைவு இலைகளின் இசைவுமழையின் ஓசை இடியின் மொழி அருவியின் சலசலப்பு என மொழிகளின் ஜீவிதம் இப்புவியில் தோன்றும் முன்னம் மனித உணர்வின் வெளிப்பாடுகளும் பரஸ்பர அறிவுறுத்தல்களும் இப்பேரண்ட படைப்புகளின் வழியே உதயமானது. தொடர்ந்து சப்த லயங்களும் குரல் ஓசைகளும் நாவின் சுழல்களும் மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்தன. சுற்றுச்சூழலின் வகைமைக்கேற்ப தட்பவெப்ப மாறுதலுக்கேற்ப மனிதக் குழுக்களின் ஒன்றிணைந்த பரிபாஷ சௌகரியங்கள் ஆங்காங்கே கவரப்பட்ட பல்லுயிர்களின் பரிபாலனங்களை உள்வாங்கியும் என மொழிகளின் ஜனனம் என்பது மனிதகுல பரிணாமத்தின் பரிமாண வளர்ச்சி, மொழி உற்பத்தியான வரலாறு.

அதே போல் ஒரு குழந்தை தனக்கான மொழியை முதன்முதலில் யாரிடம் கற்கிறது என்று ஆராய்ந்தால் படைப்பின் இயற்கை வழியாக என்பது ஒருபுறமிருந்தாலும், பிற உயிர்களுக்கு தன்னியல்பாக வெளிப்படும் குரலதிர்வு அவற்றின் தாய்வழி மொழி மனித குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் தேவையின் பொருட்டு தமது அழுகையில் வெளிப்படுத்துவதும், நிறைமையை தமது பொக்கை வாய் மலர சிரித்து அறிவித்தும் இவ்விரு உணர்வு சார்ந்த மொழிகளை மட்டுமே தனக்கானதாக அறிந்திருந்த மனித குழந்தைகள் சப்தத்வனியுடனான சொல்லாடல்களை மொழிப்புனைவுகளை தாயிடமிருந்து முதலிலும் உறவுகளிடமிருந்து அடுத்தும் சுற்றத்திடமிருந்து தொடர்ந்தும் வாழும் சூழலிலிருந்து தன்னியல்பாகவும் தமது கூரிய அவதானிப்பில் தமது தொடர் கேள்விகளின் ஆய்வுத் தேடலில் கண்டுணர்ந்தும் கற்றுத் தேர்ந்தும் குழந்தைகளின் சுயகற்றல் என்பது அனிச்சையான செயலின் மொழியிலிருந்தே பயணிக்கிறது.

கற்றுத் தேர்ந்த ஒலியின் கலவைகளை மொழியாக உரு வார்க்க முதலில் தத்தித்தத்தி பின் தித்தித்தோதி என திக்கி விக்கி வெளிப்படும் மழலையின் கொஞ்சலான கோர்வை கொச்சை உரையாடல்களை நோக்கிப் பயணிக்கும். குழந்தைகளின் கற்றல் ஆவலைப் பொருத்தமட்டில் உறங்கும் பொழுதுகளைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பொழுதுகளிலும் தனது தன்னார்வ சுய தேடலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கும்.
இப்படியான தமது புலனைந்தின் வழியாகத் தேடல் பயணத்தின் துவக்கக் காலங்களை மழலைப் பருவத்தை அலட்சியப்படுத்தியும் அவர்களின் மழலை மொழி அறிமுகத்தைப் புறக்கணித்தும் வரும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் இயல்பான விடாபிடித்தனத்தையும் சேட்டையையும் தொடர் கேள்விக்கணைகளில் துளைத்தெடுப்பதையும் அவதானித்தும் கொண்டாடியும் ஊக்கப்படுத்தியும் பிள்ளைமைப் பேச்சு மொழியை உண்டுச்சுவைத்தும் உற்சாகப்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் பேசவும் கேள்விக் கேட்கவும் முழு அனுமதி தந்த மாண்புப் பூண்ட பெற்றோராக, மழலைகளுடனே தமது வெகுவான அன்றாடத்தைக் கடத்தி அவர்களின் உளவியலைப் பூர்ணமாகத் துய்த்துணர்ந்த ஒரு ஆசிரியராக, இலக்கியத்தின் எழுத்து வடிவங்களில் கவித்துவத்தைக் களமாகக் கொண்டு மழலைகளின் மொழியை கவிதையின் அரூபமாக வெளிப்படுத்தி வெற்றிக் கண்ட தோழர் தேனி சுந்தர் அவர்களின் பிள்ளையுலகைக் கற்றறிய முனைந்த ஒவ்வொர் அடியும் பாராட்டிற்குரியது.

அலைபேசி நுகர்வு கலாச்சாரம் தலைவிரித்தாடும் இந்த யுகத்தில் பெற்றோர் முதல் பாலர் வரை இணையசெயலி போதைக்குள் தம்மை மறந்து தன்னிலை இழந்து வருகின்றனர். பிள்ளைகளுடன் பெற்றோர்களின் இணக்கம் என்பது குறைந்துக் கொண்டே வருகின்ற மேற்கத்திய கலாச்சாரத் தொற்று வியாதிப் பரவி வரும் நிலையில், பொருள்வாத மனோபாவத்தில் உழலும் பெற்றோர் சமூகத்தின் மத்தியில் பிள்ளைகளின் மனதைத் தட்டி எழுப்பி அவர்களின் அனிச்சையான பிள்ளைமையை தனக்கிச்சையானதாகக் கொண்டாடித் தானும் ஒரு சிறு பிள்ளையைப் போல் அவர்களுடன் கூடிக் களித்து பிள்ளைகளின் அன்றாட இயல்பு இயக்கங்களில் உறவாடியும் உரையாடியும் ஊடாடியும், பொழியும் மக்கட்மொழிகளைச் இதம் பூக்கும் சப்த நாதங்களைப் பிள்ளைமனிதர்களின் பரஸ்பர புனைவுப் பேச்சுக்களைச் செதுக்கி அருவவுருவமாக மாற்றி நூலாக ஒப்பேற்றி வாசக மனத்திற்கும் வாசிப்பு வனத்திற்கும் மீண்டும் வார்த்தளித்த எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் படைப்பு இலக்கிய உலகின் தனித்துவ பாணி. தோழரின் இப்படியான மழலைக் கவிதைத்தொகுப்பு என்பது புதிதல்ல முதல் பிரசவம் முடிந்து தாலாட்டி சீராட்டி வளர்ந்து உயர்ந்து வெற்றி நடைப் போட்டு முடிக்க,அடுத்தொரு மகப்பேறு வெற்றிவாகை சூட களமிறங்கியுள்ளது.

ஆம்…. டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி நூலின் தமக்கையாக “சீமையில் இல்லாத புத்தகம்” மலர்ந்து நிற்கிறது. மழலைகளின் பிஞ்சு மொழி மகிமையை நூலாக்கி வெளியிடும் புதுவகைமையான இலக்கிய வடிவம் ஆசிரியரின் போற்றப்பட வேண்டிய ஒன்று. இனி அடுத்தடுத்து ஒவ்வொரு இலக்கியப் பெற்றோரும் தமது பிள்ளைகளின் மழலை மொழியை படைப்பூக்கமாக்கும் செயல்பாட்டில் தீவிர முன்னெடுப்பைத் துவங்கவாய்ப்பாக நிறுவியுள்ளது. அதற்கான முன்னோடியாக முன்னணியாக தோழர் தேனி சுந்தர் அவர்களின் சீமையில் இல்லாத புத்தகம் பிள்ளைமைக் கொண்டாட்டத்தில் வழி நடத்தும்.

ஒருபுறம் சிறுபிள்ளைத்தனத்தைத் தாண்டிய அறிவார்ந்த பெரியத்தன பேச்சுக் கவிதைகள் மறுபுறம் அறிவியல் பூர்வ ஆக்கமான சிந்தனை ஆய்வகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் ‘கதை கதையாம் காரணமாம்’என்பது போல பிள்ளைகள் கதைகளைக் கொண்டும் காலாட்சேபங்களைக் கூட்டியும் விலாசுகின்றனர்.
இந்தத் தொகுப்பு நீட்டி முழக்கி இழுத்துப் பறிப்பதால் கதையா..
மழலை மொழியில் திக்கி விக்கி தொக்கி ததும்புவதால் சிறார் இலக்கியமா…
பிள்ளைகள் ஒன்று கூடி விலாவரியாக முழங்கும் மேடை விவாதங்களா..
இருபுறமும் கருத்துப் பரிமாற்றத்தில் அலசி ஆராயும் பட்டிமன்றமா… என்றால்

இவை எதற்குமே சாராத தமிழிலக்கியத்தின் தனித்த முத்திரையை தமது முத்தாய்ப்பான எழுத்தில் புதிய மாறுதலை அறிமுகப்படுத்தி சிறார் இலக்கியத்தில் புரட்சிக் கண்ட மழலைகளின் மகிமை சமைத்தக் கவித்துவ நூலாக அசலில் மாநிலம் மாகாணம் மத்தியம் தாண்டிய அண்டத்தை நிறைக்காத சீமையிலேயே இல்லாத புழக்கமாக வலம் வருகிறது.

பிள்ளைகளின் மொழியின் வழியே மனதைப் பயின்ற ஆசிரியராகத் திகழும் தேனிசுந்தர் அவர்கள், அறிவியல் இயக்கத் செயல்பாடுகளில் அடாது செயல்படுவதாலோ என்னவோ பிள்ளைகளின் இயல்பறிவியலை இயற்கையான சிந்தையாற்றலைத் துல்லியமாக வாசிக்கவும் அணுகவும் தெரிந்த அறிவியலாளராக குடும்பத்தின் பிள்ளைகளின் பிரியமான அப்பாவாக மக்கட்செல்வத்தை வசியப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களால் மழலைகளின் பஞ்சுபாத நடையில் கொஞ்சும் குழல் மொழியில் யாழிசையாக தமக்குள் பகிர்ந்துக் கொண்ட உணர்வு உரையாடல்களைத் தொகுத்துக் கவித்துவ மழலை மாலையாகவே அளித்துள்ளார்.

கீர்த்தி, புகழ்மணி, டார்வின் என்ற மூன்று குழந்தைகளும் கட்டி எழுப்பிய உலகிற்குள் வண்ண வண்ண சித்திரங்களாக ஒவ்வொரு பக்கத்தில் பேரின்பத்தை வழங்குகிறது.”டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி” நூல் ஆதியந்தமாக ஆரம்பமாகி மீள் தொடர்ச்சியாக அடுத்திருந்த நூல், மழலை சம்பாஷனைகள் இத்துடன் முடிந்து விடுமா என்றால் நிச்சயம் மழலைகளின் மொழிகளும் மென்மைத் தாங்கிய மெல்லிசையும் முடிவில்லா ஆகாயம் போல.. அந்தந்த பருவத்தின் மாற்றத்தில் குழந்தைகளின் மனம் வெள்ளெந்தியாய் புதிய புதிய ஆய்வுகளுக்குள் புகுந்து விடைகளைப் பூர்ணமாகக் கண்டடைய பரிணமித்துக் கொண்டே இருக்கும்.

நூலை புகழ்மதிக்கான பாகம் டார்வினுடனான பாகம் என பிரித்துப் பகுக்கும் வகையில் இருவரின் ஒத்த மழலை மொழி நம்மை சிலாகிக்கவும் சிதறடிக்கவும் வயிறுபுடையச் சிரிக்கவும் உடன் ரசிக்கவும் கவனமாகச் சிந்திக்கவும் வைக்கின்றன. பெருவாரியான பக்கங்களை வாசிக்கும் போது நூலாசிரியர் சுந்தர் அவர்களை நினைத்து..
“வெச்சி செய்றாய்ங்க போல பிள்ளைங்க…” என்பது போல மனதிற்குள் துள்ளி மகிழ்ந்தேன். அதுதானே பிள்ளைகளின் இயல்பு.
குழலினிது யாழினிது என்பார்..
மக்கட் சொல் கேளாதார்…
இது தானே படைப்பின் மனிதர்க்கான பேரின்பம்.

எலே சுந்தரு
இங்க வாடா..
அங்க பார்றா..

இது புகழ்மதி டயலாக்..

கீர்த்தி டயலாக்:
‘இந்தா மாமா வாரான்..
இந்தா வந்துட்டான்.
அடி நொறுக்கப் போறான்.

சேட்ட பண்ணாம இருந்துக்குங்க…!

இப்ப நம்ம தோழர் டென்சன்
ஆகிட்டார்..

நம்மள சீண்டுறதே
இதுகளுக்கு வேலயாப் போச்சு..!
நான் கோவமா பாத்தேன்…
என்னய திரும்பிக் கூட பாக்கல..!

கோவமும் வீணாப்போச்சு..
என்று நொந்துப் போனார் தோழர்..

அடுத்தது
இன்னைக்கு டார்வின் ரெண்டு மூணு மயிலிறகு வச்சிருந்தான் என தொடங்கும் சம்பவத்தின் அறிமுகம்…
தொடர்ந்து உரையாடல் மயிலிறகு பற்றி..

புக்லவச்சா நல்லா படிப்பு
வருமாக்கும்ப்பா…!

பரிசீலனைகள் நீள..
இறுதியில் இதுவெல்லாம் மூடநம்பகங்கள் என்று தாமாகவே உணர்ந்த டார்வின்..

பக்கத்துல
லவ் பேர்ட் இறகு
ஒன்னு கெடந்துச்சு..
அத எடுத்துக்கிட்டு சொன்னான்.

இத புக்ல வச்சா குஞ்சு பொரிக்கும்னு
சும்மாச்சுக்கும் சொல்லிவிட்டுர்றேன்..
நம்மளவே ஏமாத்திக்கிருக்காய்ங்க

ஆஹா.. என்னவொரு வில்லத்தனம்.. ஒரு இடத்தில்,
முன்பு பார்த்த வாத்து கூட்டம் இன்று காணவில்லை எங்கு போனது வாத்து கூட்டம் என்கின்ற பெரிய புலன்விசாரணை டார்வின் அப்பாவிற்கு மகனிடமிருந்து..
வாத்தை வயலுக்குள் விட்டால் புழு பூச்சு எல்லாம் வாத்து தின்றுவிடும் அவை அதன் உணவு என்று ஆரம்பித்த பாடம் இறுதியில் டார்வினின் ஆய்வு விசாரணை அறிவியல் ஆசிரியரை திக்குமுக்காடச் செய்தது.

இப்போ பாடம் நடத்தினார் நம்ம டார்வின் அப்பா..
புழு பூச்சி வாத்தோட உணவு
வாத்து மனுசனோட உணவு
கடைசில செத்துப் போன பெறகு மனுசன் புழு பூச்சிக்கு உணவு..!

இப்போ பாருங்க நம்ம டார்வின் எப்படி மடக்கறாங்க..
ஏற்கனவே செத்துப்போன பூச்சி
எப்படிப்பா மறுபடியும் வந்து
மனுசன திங்கும்…?

பதில் சொல்லுங்க ஆசிரியரே…

அடுத்தொரு சம்பவத்துல கண்டமேனிக்குக் கதற விடுறாப்புல நம்ம டார்வின் அப்பாவை பயணத்தின் போது..
வண்டியின் நம்பர் பிளேட் பற்றிய சர்ச்சை…

வண்டி வாங்கறப்பவே
நம்பர் எழுதி
மாட்டி விட்ருவாங்களாப்பா..
இது டார்வின்..

ஒரு வாரம்…
இல்லாட்டி
பத்து நாளு கழிச்சு கொடுப்பாங்க…
அப்பா பாவம் யதார்த்தமாய்..

அப்ப
அந்த வண்டியில இருக்கிற
நம்பருக்கு போன் போட்டா
அந்த வண்டிக்காரங்க
எடுத்து பேசுவாங்களா…?

அடடா…!ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போலருக்கே.. பிள்ளைங்க..

பெரியவர்கள் நமக்குள் தான் எத்தனை சிதிலமடைந்த சிந்தனைகளும் குழப்பமானமான முடிவுகளும்.. அத்தனையும் பெரியத்தன புகைச்சல்கள்…
நமது சேகரித்த அறிவில் தழைத்த கருவேகங்கள்..
சில நேரங்களில் பிள்ளைகளிடம் கருகிப் போகிறது..

டிவில பாட்டு வருது
பாட்டுல நெருக்கமான காட்சி
அடுத்து வரப்போகுது.
……….
சேனல மாத்த மனசு துடிக்குது..
.,…..
ஒரு பதட்டமான சூழ்நிலை..!

ரிமோட்டை எடுத்து
சேனலை மாத்திக்கிட்டே
டார்வின் கேட்டான்..
இந்நேரம்
சின்-சான் போட்டுருப்பாங்களப்பா…?

இதுதான் கறைபடா எழில்.. அனிச்சையான மனநிலை கள்ளமும் கபடமும் அற்ற பிள்ளைகளின் பிரத்யேக வெள்ளை மனம்..
தொடரும் நாட் குறிப்புகள் ஒவ்வொன்றும் வாசக விருந்து..
பிறகு ஒருநாள்…
பறவைகளில் ஜெண்டர் சம்பந்தமான சர்ச்சை அப்பாவிற்கும் மகனுக்கும்..

மேல் ஃபீமேல்..னா
என்னப்பா..?
இது டார்வின்..

இப்போ நம்ம ஆசிரியர்..
மேல்னா ஆண்…
ஃபீமேல்னா பெண்…
ஏன் கேக்குற..?
……….

நம்ம லவ் பேர்ட்ஸ்ல
எது மேல் எது ஃபீமேல்னு தெரியுமாப்பா…?

கேள்வி கேட்டாச்சு டார்வின் தரப்பில்..
சிக்கிட்டாரு நம்ம தோழரு..
இப்போ எப்படி சமாளிக்கிறார் பாருங்க…

இத வாங்கும்போதே
சொன்னேன்ல..
என்னென்ன கேக்கணுமோ எல்லாத்தையும்
கடக்காரங்க கிட்ட கேட்டுக்கன்னு…!

பிள்ளைகளை அமைதியாக்க ஆசிரியரின் யுக்தி இறுதியில் வெற்றி பெற்றது.. அமைதியானாங்க நம்ம டார்வின்.

அராத்து அராத்து என்பார்களே அது இது தானா..
அடா அடா அடா..சிரிச்சு மாள முடியல…

இனிமேல்’ லாம் அந்த ஆபீஸ்ல குப்பை கொட்ட முடியாதுங்க…
டார்வின் அம்மா..

இப்போ பாருங்க நம்ம ஹீரோ களம் இறங்கி அசத்துவதை..

என்னம்மா சொல்ற நீ ஆபீசுக்கு போறேன்னு நினைச்சா குப்பை கொட்ட போறேன்னு சொல்ற

இனிமே
காலைல காலைல
நம்ம தெருவுக்கு வர்ற டிராக்டர்லயே குப்பைய கொட்டிட்டு
பேசாம வீட்ல இரும்மா!

அது தான சூழல் கருக்கு இயல் ..

ஷாட் ஹேண்ட் எழுத்துரு கேள்விப்பட்டிருப்போமே.. அதை விட எளிமையான ஒரு எழுத்துருமை அவங்களுக்குத் தோதாக பிள்ளை கண்டுபிடித்து சாதித்து வெற்றியும் கண்டு விட்டாங்க டார்வின்‌..
கடைக்குப் போகச் சொல்லி அம்மா சொல்ல…
கத்தரிக்காய்.. ரசப்பூண்டு.. வெங்காயம்.. கொத்தமல்லி..
……..
வேகமாய் எழுதிக் கொண்டு வாங்கியும் வந்துட்டாங்க..
………
டார்வின் அப்பா காகிதத் தாளை வாங்கிப் பார்க்க..

க..
ர..
வெ….
கொ..
இம்புட்டு தான் எழுதிருக்கான்.

ஒன்றும் புரியாமல் அப்பா முழிக்க…

க.. கத்தரிக்காய்..!
ர…ரசப்பூண்டு..!
வாங்குனது கரெக்டா இருக்கான்னு மட்டும் பாருப்பா..

என்னே! மெத்த மேதாவித்தனம்..
விஞ்ஞானத்தைத் தாண்டிய மெய்ஞானம்…

இந்த சம்பவம் வேற லெவல்…
அநியாயத்துக்கு நல்லவர்களா இருக்காங்க… நாடு தாங்குமா…
வீடே தாங்காதே..

எப்பா..
நீ வீட்ல இருக்க
போன பீரோக்குள்ள வச்சி பூட்டிட்டு போ..
சாவிய ஒளிச்சு வச்சுரு…!
எதுக்குடா…?

எழுதணும்னு உக்காந்தா
இந்த போனு
என்னைய இழுத்துக்கே இருக்குப்பா
எழுத விட மாட்டுது..!

குழந்தைகள் அனைத்து மூடநம்பிக்கைகளையும் அது அறிவியல் சார்ந்தோ இல்ல அல்லது பாரம்பரியமாக புகுத்தப்பட்ட சடங்குக் கற்பித்தமோ அவர்களின் ஆழ்மனதில் அது எப்போதுமே அடாது அப்பி கிடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு பாடம்..

எனக்கு சிவப்பு வேணாம்…
ஏன்டா..?

சிவப்பு சட்டை போட்டா
காளை மாடு முட்டிபுடும்..

இது ஊடகத் தொற்றின் விளைவு..
ஹோட்டலில்..
டார்வின் கேட்டான்..
ஏம்ப்பா…
இவங்களெல்லாம் சீனாவா…?

எனக்குப் பசி வேற..
வடகிழக்கு மாநில
விளக்கமெல்லாம் எதுக்கு.. ஆமாம்னு சொன்னேன்..

உடனே கேட்கிறான்..
அப்ப நமக்கு கொரோனா வந்துடாதா
என்னப்பா நீய்யீ….!

பிள்ளைகளின் புத்திக்குள் புகுத்தப்பட்ட கொரோனா தொற்று அரசியல் பிரச்சாரத்தின் பக்கவிளைச்சல்

இப்ப நம்ம கதாநாயகி புகழ்மதி பாப்பாவின் மழலை மணியோசைகளும் மடக்கல்களும், மொழியாளுமையும், அறிவுத்தேடலும், பிரம்மாண்ட அணுகுமுறையும்..
என்னை மெய்சிலிர்த்திய கணங்கள்…
வாசித்து வசியமாக்கியது..

உணவுசேதாரமும் வீணாகுதலும் சமூக குற்றம்…
தெரியுமா நம் புகழ்மதி பாப்பாவிற்கு..‌அழுது புரளுவாங்க.. ஆக்கின சோறு வீணாணா..

இரவு படுக்கப் போகும் பாப்பா அழுதாங்களாம்..‌என்னான்னு அப்பா கேட்க, பாப்பா ஆக்கி வச்சது அண்ணன் டார்வின் சாப்பிடல.. பலத்த பரிந்துரைப்பில் சாப்பிட ஒத்துக் கொள்ள.. அழுது சாத்தியமாக்கினார்..

ஒரு டப்பா மூடிய எடுத்து சாப்பிடுவது போல
பாவ்லா பண்ணி வச்சிட்டான்..!

டார்வினின் சாதுர்யம்..
பாப்பாவின் சாமர்த்தியம்..

உடனே பாப்பா…
அதுல இன்னும்
நான் சாப்பாடு போடல..

சரி..போடு போடு..

சாப்பாடு போடுவதை போல் பாப்பா
சாப்பிடுவது போல் டார்வின்…!

அப்பவும் விடல…
இன்னும் நான்
கொழம்பே ஊத்தல..

பார்றா..
விட மாட்டோம்ல..

இறுதி முயற்சி
புகழ்மதி பாப்பாவிடம் தப்பிக்க..

சரி ஊத்து ஊத்து..
மறுபடியும் பாவ்லா…!
என்ன பாப்பா…
அண்ணன் சாப்பிட்டானா?
ம்ம்..

இப்ப தூங்கலாமா…?
ம்ம்..!

இதுக்கு போயா
இம்புட்டு அழுகை…!
ம்ம்… ஆக்கி வச்சது
வீணாப் போம்ல…!

எப்படி இருக்காங்க பொறுப்பா..

எப்பவும் எங்க போனாலும் நம்ம புகழ்மதி பாப்பாவின் மாறுபட்ட கருதுகோள்களும் ஒவ்வொன்றையும் அறிந்துத் தெளிய விடாப்பிடியாக நின்று சாதிக்கும் பல நிகழ்வுகள் என்னை வியப்பில் ஆழ்த்தின…

அப்பா குளிக்க வைத்தார்.பாத்ரூம் கழுவுற பிரஷ் கைப்பிடி ஒடஞ்சு கிடந்துச்சு..!
பாப்பா சென்சன்..
அம்மாவைப் பார்த்து…
யாருப்பா இத ஒடச்சது…?

கேள்வியும் நானே பதிலும் நானே..

தவளயாப்பா ஒடச்சிருக்கும்..? கதவை அடைச்சு தான வச்சிருந்தோம்..!
அப்ப எது வழியா வந்திருக்கும்..?
ஆயி இருக்குற கோப்பை வழியா வருமாப்பா…?

எப்படி அறிவா யோசித்து வழியை கண்டுபிடிக்கிறாங்க…

புகழ்மதி பாப்பா திரும்ப திரும்ப விடாமல் நட்டமாய் நின்றாலும் சலிப்பே வாராத மழலை மயக்க அதீதம்…
புத்தகங்களுடனான கொண்டாட்டக் களங்களில் ஒருநாள்..

அப்பா.
இந்த புத்தகமும்
இந்த புத்தகமும்
ஒரே மேட்ச்சா இருக்குப்பா..

அப்பா.
இந்த புத்தகமும்
என் சட்டையும்
ஒரே மேட்ச்சா இருக்குப்பா..

அப்பா..
இந்த புத்தகமும்
என் சட்டையும்
நம்ம மெத்தையும்
ஒரே மேச்சா இருக்குப்பா..

இதுதான் மேட்சிங் மேட்சிங் வாசிப்போ.. அடுக்குத் தொடர் இலக்கணம்..பிழையே கண்டறிய முடியாமல்..

அழகிய குட்டியூண்டு விரல்களையே எண்ணிக்கையாகக் கொண்டு எண்களைக் கூட்டிய கதையை அறிந்ததுண்டா.. கணிதமேதை கலங்கிப் போவார்..

என்ன பாப்பா…
கீர்த்தி இன்னைக்கு
ஸ்கூலுக்கு வந்துச்சா இல்லையா..?

கைய முன்னாடி வச்சு
ஒவ்வொரு விரலா நீட்டி நீட்டி
சொல்றாங்க..

நேத்தும்.. நேத்தும்..
நேத்தும்..நேத்தும்…
நேத்தும்..
கீர்த்தி ஸ்கூலுக்கு வரல…!

எத்தன நாளு வரல பாரு?!

மறுபடியும் கைய முன்னாடி வச்சு ஒவ்வொரு விரலா நீட்டி நீட்டி
சொல்றாங்க..
இத்தன.. இத்தன…
இத்தன. இத்தன..
இத்தன..
இத்தன நாளு வரலப்பா…?..

ஐந்து நாள் வரவில்லை என்று சொல்வது சாதா ஸ்பெஷல்..
நம்ம புகழ்மதி தான் ஸ்பெஷல் சாதா வாச்சே..
அப்படித்தான் கூட்டுவாங்க…நாம எண்ணிக்கனும்.. நல்லா இருக்குல.. அவங்களோட நாமும் வேல பாக்கனும்..

கட்டம் போட்ட நோட்ல எழுதும் போது பாப்பா ஒவ்வொரு கட்டத்துக்குமொரு “இதும்” (இதுவும்) போட்ட அழகு இருக்கே.. வாசிக்க வாசிக்க இதும் பேரழகு…

தனித்தனியா எழுதின எழுத்துக்கு எப்படி மொத்தமா வாசித்துக் காட்டுவது… முழுமையா எழுதினேன் என்று எப்படி விளங்க வச்சிருக்காங்க பாருங்க..

இதும்..
இதும்..
இதும்..
இதும்..
இதும் ..
இதும்..
இதும்..
இதும்.
இதும்..
இதும்.

அந்த பக்கத்துல இருக்க ஒவ்வொரு கட்டத்துக்கும்
ஒவ்வொரு எழுத்துக்கும்
ஒரு இதும்…?
எப்புடி நம்ம புகழ்மதியோட இதும்..

பிள்ளைகள் வெகுவாக தமது தேவையை நேரடியாகச் சுட்டிக்காட்டித் தமக்கான விழைகளுக்காக அடம்பிடித்தோ அழுதோ தாஜா செய்தோ கேட்டுப் பெறுவர். இது பிள்ளைகளுக்கேயுரிய நினைத்ததை சாதிக்க எத்தனிக்கும் இயல்பு. ஆனால் நம்ம பாப்பா ஸ்டைல் வேறு மாதிரி.. தமக்கான நியாயத்தைக் கண்டடையும் அனைத்துத் தரப்புகளையும் திறந்து வெளிப்படுத்தித் தமது விருப்பத்தைக் கோரி நிப்பாங்க..
இங்க பாருங்க பாப்பாவின் சாமர்த்தியத்தை..

அதாவது சம்பவம் நடந்த அன்று நாய் வளர்ப்பதைப் பற்றிய கரிசனங்கள் பெருமளவில் நெகிழ்ச்சியாய் அணிவகுத்தன மொழிகளில்..

அண்ணன்’ லாம் தொந்தரவு பண்ணுவான்…!
நான்லாம் கொலுசு சத்தம் கூட கேக்காம
இப்டி…இப்டி.. நடந்து போவேன்..!
…..

நாய்க்குட்டிய வாஷிங் மெஷின் பக்கத்துல படுக்க வச்சுருவோம்பா…!
அதுக்கும் சேத்து பால் வாங்கனும்..!
……

எப்பப் பா வாங்கித் தருவ..?
……
வாய்க் தெறிந்து சொல்லுங்கப்பா..!
நாய்க்குட்டி எப்ப வாங்கித் தருவ..?

யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துறாங்க நம்ம புகழ்மதி…..

சீமையில இல்லாத நம்ம நாயகியோட உடல் தொந்தரவுக் கால மருத்துவப் பரிசீலனை பிரமாதம்.. புதிய யுத்தி.. மருத்துவ உலகில் மற்றுமொரு புரட்சி..
பாப்பாவுக்கு சளி பிடிச்சிருக்கு..
அவங்க அத்தை உணவு பரிந்துரைப்பு செய்திருக்காங்க..
அதை அப்பாவிடம் சொல்லி செய்முறை வழியாக செயல்படுத்தனும்…

எனக்கு ஒரு ஆம்புலட்டு போட்டு குடுப்பா..

அந்த மஞ்சக் கருவுல் மெளகு போட்டு சாப்பிட்டா சளி சரியாயிரும்..!

இப்போ நம்ம நூலாசிரியருக்கு ஆம்புலட் போட்டுத் தர சுணக்கம்.. மகளுக்கு மாற்று உணவுப் பரிந்துரைப்புச் சொல்றார் தமக்குத் தோதாக….

ரசம் சோறு
இருக்கு பாப்பா
போட்டு தரவா..!

இப்போ பாருங்க நம்ம புகழ்மதி ட்விஸ்ட்… வலிநிவாரணி போல சளி நிவாரணி.. தேர்வின் அடிப்படையில்..

வேணாம்ப்பா…
எனக்கு ஆம்புலட்டு தான் வேணும்.‌
தோசை கூட சாப்பிலாம்ப்பா..!

ஆம்புலட்டும் தோசையும்
வட்டமா வட்டமா இருக்குல
அது சாப்பிட்டாலும்
சளி சரியாயிரும்..!

சரியாதான சொல்லியிருக்காங்க.. இங்க மனம் தான் நோய் தீர்க்கும் மருந்து.. வட்டமா இருக்கும் தோசையை ஆம்புலேட்டாக மனம் ஏற்றுப் பிடித்துத் தமக்கு உவப்பான உணவை எடுக்கும் பட்சம் தொந்தரவு சரியாகும் என்கிற உடல் சார் உணவு உளவியலையே இங்கு நமக்கான புரிதல்…

பிள்ளைகளின் அறிவு மேட்டிமை என்பது நமது பெரியத்தன அறிவிற்குப் புலப்படாத ஒன்று.. வானளாவிய எல்லை தாண்டி விரிந்துச் சிறந்து நிற்கும் அவர்களது தொலைநோக்குப் பார்வை.

காக்கா கைய்ய
இப்படி இப்படி செய்யாட்டி
கீழ விழுந்திருமாப்பா…!
அது கையி இல்ல பாப்பா றெக்கை..

அசலில் அது றெக்’ கை..
சரிதானே.. இதுகாறும் நமது குறுகிய அறிவு மேலோட்டமான அணுகுமுறை புறப்பார்வை… றெக்கை தான் பறவைகளின் கை என்பது சட்டென புலப்படவில்லை…

அதே போல்.
நம்ம டார்வினின் தீர்க்க சிந்தனையும் பலவிடங்களில் விந்தையைக் கிளப்பியது…

TATA தயாரிப்பு வண்டியொன்று முன்செல்ல, பேச்சு அப்பாவிற்கும் மகனுக்கும். டாட்டா நிறுவனத்தின் புறம் திணறியது..

நம்ம டிவில வேற
TATA ன்னு வந்துச்சே…!
…….

ஒரே கம்பெனி
வேற வேற பொருள்
தயாரிச்சு விப்பாங்க…

அப்போ
TATA SKY னு போட்டிருக்கு வானத்தையும்
தயாரிச்சு விப்பாங்களா..?

இப்படியான கேள்விகள் நமக்குள் ஒரு நாளும் எழுந்தது கூட இல்லை.கார்ப்பரேட் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை துளையிடுகின்றன டார்வின் கேள்வி..

இப்போது சீமையின் அடுத்த நாயகி நமது கீர்த்தி பாப்பாவின் பிள்ளைமொழியில் கொஞ்சம் கொஞ்சி நனையலாம்..பெரிய பஞ்சாயத்து ஒன்று.. புகழ்மதியின் பிறந்தநாளுக்கு டார்வின் கேக்கு வெட்டுவேன் என்று அடம் பிடிப்பதாகப் பஞ்சாயத்து கீர்த்தியிடம்…

நீ சொல்லு கீர்த்தி அவன் பிறந்தநாளுக்கு என்னைய வெட்ட விடுவானா அப்ப என் பிறந்த நாளைக்கு அவ வெட்ட கூடாது இல்ல கீர்த்தி..

நம்ம கீர்த்தி பாப்பா புகழ்மதியை அழைப்பதே ஒரு அழகு.. புகழ் ஐ…புலல் ன்னு கூட அழைக்கலாம் ல…
இப்போ பஞசாயத்துத் தலைவர் கீர்த்தி பாப்பா எப்படி தீர்ப்புக் தராங்க.. பார்ப்போம்….

ஆமா புலல்.
அவன் வெட்டக்கூடாது.
அவன் எதுக்கு வெட்டுறான்..!

டார்வின் வரட்டும் புலல்..
எதுக்குடா வெட்டு னண்டு
அவன் கிட்ட நான் கேக்குறேன்..

சூப்பர் ல.. ஒரு வழியா ஆறுமாதம் முன்பு வெளிச்சப்படாத பிரச்சனை இன்று தீர்வு கண்டது…

இறுதியாக டார்வின் சூதனமாகி நூதனமான முறையில் அப்பாவின் எழுத்துலக சாதனைக்கு வானளாவிய புகழுக்கான பின்னூட்டம், தங்களின் மழலை உரையாடலே என்பதை ஆய்வறிந்து புகழ்மதியிடம் குறிப்பாக உணர்த்துகிறார்.. என்ன ஒரு கண்டுபிடிப்பு..
அதையும் கூட புத்தகத்துல பதிவிட்ட நம்ம தோழரை என்னன்னு சொல்ல..

பாப்பா..
இனிமே
நம்ம ரெண்டு பேரும்
எதுவு ‘மே பேசக்கூடாது.. அமை…தியா இருக்கணும்..!

எதுக்குண்ணே…….?

பேசவே கூடாது பாப்பா…!

எதுக்குன்னு சொல்லுண்ணே…

நம்ம பேசுறத எல்லாம்
எழுதி
புக்கு போடுறாங்க
பாப்பா.,…!

இனி சத்தம் கேட்காமல் ஒருவருக்கொருவர் செவிமடல்களுக்கு மட்டுமே கேட்கும் உரையாடல் நடக்குமோ.. அல்லது ஆக்ஷன் வடிவில் திரைக்காணல்களா…
விரைவில்… அடுத்தப் பிரதியை நோக்கி….
குழந்தைகளின் சிந்தனை போக்கின் தடங்களாகவே நாம் இவற்றையெல்லாம் வாசித்து கற்க வேண்டும். எப்பொதும் பெரியவர் மனத்தின் உவப்பான உரையாடல்களையே வாசித்து பழகியுள்ளோம்.. நீண்டு நெடிந்து விவாதத்திற்குள்ளாகி வாசக வரப்பில் விரவியுள்ளோம்.. இங்கோ நூலாசிரியர் தேனிசுந்தர் மொழியியலின் தமிழ்ச்சூழலில் புதிதாய் மழலைகள் மனதை தமது கவித்துவ எள்ளலில் பிள்ளைக்கேயுரிய அசட்டையான ஆர்ப்பாட்ட துள்ளலைப் பெயர்த்து வாசிக்க வழங்கியுள்ளார்.

குடும்பம் என்கிற சாம்ராஜ்யத்தின் மழலை இளவரச இளவரசிகளை முக்கிய பிரமுகர்களாகச் சட்டசபைப் பிரதிநிதிகளாக மதித்துப் போற்றி வருகிறார் நாளொன்றிலும் தேனி சுந்தர் அவர்கள் என்பதற்கு இந்தத் தொகுப்பின் பிள்ளைகளின் ஒவ்வோர் கற்றல் தேடல், சிந்தனைச் செறிவு, ஆழமான அணுகுமுறை,கருத்துச்சுதந்திரம், தோன்றலின் தடைகளற்ற சூழல்கள் யாவும் சான்றுக்கோள்களாய் நிரூபிக்கின்றன. இந்நூல் இத்துடன் நிறைவுறாமல் தொடர்ந்து அடுத்தடுத்தக் கட்டங்களாகப் பிள்ளைகளின் செயல்திறன் சாயல்களுடன் படைப்புகளாக ஜீவித்திருக்க வேண்டும். புதிது புதிதான வடிவங்களில் பரிணமிக்க வேண்டும். கவிதை கட்டுரை சிறுகதை என ஆளுமைகளின் இலக்கிய ஆர்வங்களைத் தொகுத்திடலாம். மழலைகளின் அனிச்சையான செயல்களை அதற்கு உயிர்ப்புத் தரும் மொழிவளத்தைக் கோர்வையாக கொஞ்சமும் கூட்டாமலும் குறைக்காலும் அப்படியே தொகுப்பாக வடிவமாக்குவதற்குக் கூரிய அவதானிப்பும் அணுகுமுறைப் பொறுமையும் நிதானத்தின் தீவிரவாதியாகவும் இருப்பது அவசியம்.. இவை அனைத்தைக் காட்டிலும் பிள்ளைமை சேட்டைகளின் குறும்புகளின் தீவிர ரசிகராக இருப்பதும் கூடுதல் சிறப்பு.. இவ்வனைத்திலும் தம்மை ஒருமுகப்படுத்தியுள்ளார் தேனிசுந்தர் அவர்கள். அசாத்தியத்தைச் சாத்தியப்படுத்திய ஆசிரியரின் இந்த மாறுபட்ட வடிவம் இனி தமிழிலக்கியத்தின் தனித்தப் பிறப்பு….‌ சிறார் இலக்கியத்தில் சிறார் வாசிப்பு படைப்புகள் போல மழலை மொழி இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய இணைப்பு பிறக்கவிருக்க தேனி சுந்தர் அவர்களின் இந்தத் தொகுப்புகள் வித்தாக அமையப் போகும் அனைத்து திராணிகளையும் புலப்படுத்துகிறது. அடுத்தடுத்த மழலைகளின் அறுசுவைப் படையல்களை எதிர்நோக்கிய பேரறிவுடன் எனது விமர்சனத்தை நிறைவுசெய்கிறேன்.

து.பா.பரமேஸ்வரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *