சாம்பல் நதி
*****************
தேசப்பிரிவினை அவர்கள் இதயங்களைக் கிழித்து
எல்லையில் எறிந்தபோது
அது மேற்கில் விழுந்ததா
கிழக்கில் விழுந்ததா என்று
சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆய்வில் இருந்தீர்கள்
ஒரே ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதனும் ஒரு நாயும் கட்டிப்புரண்டபோது
அவன் சுன்னத் செய்திருந்தானா அல்லது
கிர்பான் தரையில் வீழ்ந்து கிடைந்ததா என
கோப்பை கோப்பையாய் தேநீரை காலி செய்தபடியே
கோட்டையில் விவாதித்துக்கொண்டு இருந்தீர்கள்
அவர்கள்
விளைவித்த செங்கதிர்மணிகளில்
தொலைந்துபோன தம் மூதாதையரின் முகங்களைக்கண்டவர்கள்
முன்னர் சிந்திய குருதியின் செம்மை ஜொலிக்கக் கண்டவர்கள்
அவர்கள் என் பாட்டனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் உன் பாட்டனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் என் தாய் தகப்பனுக்கு ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் உன் தாய் தகப்பனுக்கும் ரொட்டி தயாரித்தார்கள்
அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் பிள்ளைக்கும்
உனக்கும் உன் மனைவி பிள்ளைக்கும்
ரொட்டி தயாரிக்கின்றார்கள்
அதே செங்கதிர்மணிகளால்
நீயோ பொய்மையால் மழுங்கிய உன் பேனா முனைதான்
தலைமுறைகளாய் கூர் ஏறிய அவர்களின் ஏர் முனையை
இனி உய்விக்க இருப்பதாய் பசப்புகின்றாய்
உன் வெற்றுக் காகிதங்களால்
சட்டத் தோரணம் கட்டுகின்றாய்
உன் கார்பொரேட் நண்பர்களிடம்
கமிஷனுக்கு வாங்கிய துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகின்றாய்
நீ நினைக்கின்றாய்
அவர்கள் வெறும் கோதுமை மாவுடனும்
காய்கறிகளுடன் மட்டுமே வந்திருப்பதாக,
மறந்துவிடாதே,
சட்லெஜ் நதியின் கரையில்
இப்போதும் தகிக்கும் அவன் சாம்பலின் வெப்பத்தை
இதயத்தில் ஏந்தியபடி
உன் வாசலில் நிற்கின்றார்கள்
உன் ஆயுதங்களை எதிர்கொள்ள.
–இக்பால்