தொரட்டி.. சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கதையும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையை பேசுகிறது.
எழுத்தாளர், ஒவ்வொரு பிரச்சினையின் கருவாக எடுத்துக் கொண்டதை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை. அந்தக் கரு தான் தொரட்டியாக இழுத்துக் கொண்டிருக்கிறது பெண்களை, என்பதை பதிவு செய்கிறார். அது உண்மை தான்.
தினந்தோறும் இப்படியான பிரச்சனைகளை செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். அது சற்று தூரமாக நடப்பது போன்ற உணர்வு இருந்தது. ஆனால் இந்த புத்தகம் அந்த தூரத்தை குறைத்து நமக்கு மிக அருகாக கொண்டு வந்து வைக்க முற்படுகிறது.
பெண்ணை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், (சில) பெண்ணும், பார்க்கப்படும் அந்த பெண்ணானவர் வெறும் உடல் மட்டுமல்ல அவரும் நம்மை போன்ற உயிர் கொண்ட சக மனிதர் என்பதை உணர வேண்டும் என்ற அவசியத்தை உணரச் செய்கிறது. ஒருவகையில் அது ஒரு எச்சரிக்கையும் கூட!
ஆயினும், கருவை கதையாக சொன்ன விதத்தில் இன்னும் அழுத்தம் தேவை என்று தோன்றுகிறது.
உதாரணமாக, அந்த பொறுப்பேற்ற கணவர், ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் இறந்து விடுகிறார், என்று கதையை முடிக்கும் பொழுது, அதுவரை அந்த கதை பயணித்து வந்த தளமும் அதன் தாக்கமும் நீர்த்து போய் வேறொரு தளத்திற்கு சென்று விடுகிறது.
கதையின் நகர்வில் அடுத்து என்ன என்பதை எளிதாக யூகிக்க முடிகின்றது. சில கதைகள் ஏற்கனவே படித்த வேறு சில கதைகளின் சாயலை தருகின்றது. எனவே ஈர்ப்பு குறைந்து விடுகிறது.
பொதுவாக, தொரட்டியின் கூர்மைக்கு ஏற்பவே அறுபடும் பொருட்கள் விடுபடும். இந்த தொரட்டிக்கு கூர்மை இன்னும் தேவைப்படுகிறது.
நூலின் தகவல்கள்
நூல் : தொரட்டி
ஆசிரியர் : இறைமொழி
வெளியீடு : நம் பதிப்பகம்
பக்கங்கள் : 120
விலை : ரூ.160
எழுதியவர்
பா.பேகன்
செங்கல்பட்டு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.