இருண்ட வீடு சிறுகதை – சுதா

இருண்ட வீடு சிறுகதை – சுதா




சென்னையில் இருந்து விழுப்புரம் பயணமானோம். எப்போதும் போல இன்றும் என் செவிகளுக்குள் காற்று நுழையும் சத்தம் கூட கேட்கவில்லை. காரில் ஏதோ பாடல் பாடுதுணு நினைக்கிறேன். என் அண்ணன் பாடலுக்கு ஆடுகிறான். என் அம்மா கோபப்பட்டு ஏதோ சொல்கிறார் உடனே டிரைவர் சீட்டில் இருந்த என் அப்பா ரேடியோ சத்தத்தை குறைக்கிறார். ஆனால் எனக்கு எதுவும் கேட்கவில்லை.

நான் இப்போது மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்கிறேன். என் அண்ணன் ஆறு முடித்து 7 செல்கிறான்.நாங்கள் சென்னையில் உள்ள வீட்டை காலி செய்து விழுப்புரத்தில் தங்க உள்ளோம். விழுப்புரத்தில் என் அம்மாச்சி வீடு உள்ளது. அது இன்னும் என்னை சந்தோஷப்படுத்துகிறது.நான் காது கேளாதவர் பள்ளியில் பயில வில்லை. என் அண்ணன் படித்த அதே பள்ளியில் தான் படித்தேன். அங்கு எல்லா பிள்ளைகளுக்கும் காது கேட்கும் போல. எல்லோரும் ஏதேதோ பேசுவார்கள். என்னைப் பார்த்துப் பார்த்து சிரிப்பார்கள். டீச்சரும் சிரிக்க சிரிக்க பேசுவாங்க எனக்கு சிரிக்கவே தெரியாது. என்னோட ஒரே ஃபிரண்ட் அமைதி மட்டும்தான்.

கொஞ்ச நாள் கழிச்சு என்னோட காதல ஒரு மெஷின் மாட்டினாங்க. அப்ப எனக்கு சின்ன சின்ன சத்தம் கூட பெருசா கேட்கும். காக்கா கத்துவது கூட பெரிய சத்தமா கேட்கும் அப்ப வகுப்பறையில் பிள்ளைங்க கத்துறது எனக்கு எவ்வளவு சத்தமா கேட்கும் என நீங்களே நெனச்சு பாருங்க. பரவால்ல எந்த சத்தமும் கேட்காம இருந்த என் காதுக்கு இந்த சத்தம் இசையாதான் இருக்குது.

நாங்க நாலு பேரும் அம்மாச்சி வீட்டிற்கு போயிட்டோம் அம்மாச்சி நல்லா சமைப்பாங்க. நான் சொல்லவே தேவையில்லை எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சாப்பிடுவதை வச்சு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அன்னைக்கு அம்மாச்சி வீட்டுக்கு போயி நல்லா சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன். தூங்கி எழுந்ததும் காது மிஷின தான் தேடினேன். எடுத்து மாட்டிகிட்டு வெளியில போனேன். என்னோட அம்மா பக்கத்து வீட்டு அத்தை கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னும் இல்லையாம் சின்ன குறை தானாம் சீக்கிரம் சரி ஆயிடுமாம் எல்லாரும் படிக்கிற ஸ்கூல்ல நானும் படிக்கலாம் அப்படின்னு அம்மா அத்தைகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா எனக்கு மட்டும் இல்ல அம்மாவுக்கும் தெரியும் நான் எல்லோரும் படிக்கக்கூடிய பள்ளியில் படிக்கிறதுக்கு சரியான பையன் இல்ல அப்படின்னு. எதனால அம்மா இப்படி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல ஒரு வேளை நான் குறையா இருக்குறத மத்தவங்க கிட்ட சொல்ல கஷ்டப்படுறாங்கலோ என்னவோ..

காது கேட்காமல் வாய் பேச முடியாத நான் எப்படி ஆரோக்கியமா இருக்கக்கூடிய குழந்தைங்க கூட போட்டி போட முடியும். என்னால முடியுமா அப்படின்னு யோசிக்கும்போதே பக்கத்து வீட்டு அத்தைகிட்ட அம்மா சொன்னாங்க நாளைக்கு ஒரு ஸ்கூல என்றன்ஸ் எழுத போறோம் அப்படின்னு.எனக்கு மனசுக்குள்ள கொஞ்சம் பயம் வந்துடுச்சு.

மறுநாள் காலையில நான் தூங்கி எழும்போதே எல்லோரும் கிளம்பிட்டாங்க ஒருவேளை என்ட்ரன்ஸ் க்கு அண்ணன் மட்டும் தானு நினைச்சேன்.ஆனா நானும் கிளம்பி அந்த ஸ்கூலுக்குப் போனேன்.எனக்கும் எழுதறதுக்கு பேப்பர் கொடுத்தாங்க. நானும் எழுத முயற்சி பண்ணினேன். ஆனா என்னால எழுத முடியல.

எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு எதுவுமே தெரியல. உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன் நான் சிறப்பு குழந்தை. என்னைச் சிறப்பு பள்ளியில் சேர்த்துருங்கன்னு. எழுதவும் பேசவும் முடியாத நான் என்னுடைய எண்ணங்களை எப்படித்தான் வெளிப்படுத்த. இதை வாசிக்கிற நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த குழந்தை இப்படி இருந்தா நான் சொல்றதை கொஞ்சம் நினைத்து பாருங்க. உறவுக்காரங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்காதீங்க. எங்கள மாதிரி குழந்தைகளுடைய எண்ணங்களை யோசிங்க.

இதையெல்லாம் யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்தேன். வீடு இருண்டு தெரிஞ்சுச்சு. இருண்ட வீட்டில் செவிகள் அற்ற ஓர் அமைதி. கொஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கலந்தது…உங்களுக்கு தெரியாது…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. கவிதா ராம்குமார்

    குழந்தைகளோட மனசு எப்போதும் வித்தியாசமானது தோழர்….. பொக்கிஷமும் கூட .நாம் அதை கடந்து வந்தாலும் அவர்களது குணாதிசயங்களை பார்க்கும் பொழுது இன்று நாம் வளர்ந்து இப்போது இருக்கும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கற்றுக்கொண்ட குணங்கள் அனைத்தையும் வெறுக்க செய்கிறது ……

    • Sudha

      குழந்தைகளின் எண்ணங்களைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *