சின்ன வெங்காயம்
இன்று காய்கறிகள் எல்லாம் சுதந்திரமாக உள்ளன. ஆனால் ஒரு காலத்தில் காய்களும் கனிகளும் எலுமிச்சை மகாராஜாவின் அடிமையாக இருந்தன.
எலுமிச்சை மகாராஜா சரியான சிடுமூஞ்சி அதற்கு மஞ்சள் ராஜா என்றும் ஒரு பெயர் இருந்தது. தலையில் பச்சை தொப்பியும் அதில் ஒரு சிறிய மணியும் கட்டி இருந்தது. அது எந்த வேலையையும் செய்யாது எப்போதும் யாரிடமாவது சண்டை இழுக்க துடிக்கும். சும்மா தும்மினால் கூட சிரச்சேதம் , நாடு கடத்தல், கடுங்காவல் சிறை தண்டனை. சாக்கடையில் வீசி அழுக வைத்து கொன்று விடுவது இப்படி பல கொடுமைகள்.
அந்த நாட்டில்தான் வெங்காயம் வாழ்ந்தது. அதற்கு சின்ன வெங்காயம் என்று பெயர். அதன் அப்பாதான் பெரிய வெங்காயம் அவர்கள் ராஜாவின் கோட்டை இருந்த ஒரு நகரத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். நேற்று முன்தினம் மிகப்பெரியத் துயர சம்பவம் நடந்துவிட்டது.
மகாராஜா எலுமிச்சை நகர்வலம் வரப்போவதாக அறிவித்தார்கள். கோட்டையின் மிடுக்குத் தளபதியான தக்காளி அந்த நகரத்தின் அதிகாரத்தை தன்கையில் வைத்திருந்தது. அதை பார்த்து பயப்படாதவர்களே கிடையாது. தக்காளியின் கண்களில் விஷமத்தனம் அதிகம். அதன் பார்வை செக்க சிவந்த அதிகார பார்வையாக இருந்தது.
கோட்டையில் எலுமிச்சை மகாராஜாவின் சித்திகளான செர்ரி கோமாட்டிகள் வாழ்ந்தார்கள். இருவரும் விதவைகள். கொடுமைக்கார கோமகள்கள் அவர்கள். அவர்கள் வாழ்ந்த கோட்டையின் அடித்தளத்தில்தான் எல்லாவித கொடுமைகளும் நடந்த சிறைச்சாலை இருந்தது.
நேற்று முன்தினம் எலுமிச்சை மகாராஜாவின் நகர் வலத்தின்போது எல்லாரையும் போல நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. பெரிய வெங்காயம். அதாவது சின்ன வெங்காயத்தின் அப்பா. அப்போது கூட்டத்தில் யாரோ தள்ளிவிட பெரிய வெங்காயம் மன்னரின் வழித்தடத்தில் போய் விழுந்துவிட்டது. ஆனால் உடனே சுதாரித்து எழுந்து வந்தது. உடம்பில் அதற்கு காயம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் தக்காளி உடனே அதை தனது காவல் கூட்டத்தோடு போய் கைது செய்து கோட்டையின் சிறையில் தள்ளியது.
பாவம் சின்ன வெங்காயம் அப்பாவைத் தேடி அது சிறைக்கு சென்று சந்திக்க அனுமதி கேட்டது. தன் மகனை சந்தித்த பெரிய வெங்காயம் மிகவும் வருந்தியது. தன் குட்டிப் பையனான சின்ன வெங்காயத்திற்கு சில உண்மைகளை அது புரியவைத்தது.
சிறைச்சாலை என்பது கொலையாளிகளும் மக்களை கொள்ளை அடிப்பவர்களும் இருக்கவேண்டிய இடம். ஆனால் அவர்கள் எல்லோரும் வெளியே இருந்தார்கள். அப்பாவிகளும் அக்கிரமத்தை தட்டிக் கேட்டவர்களும் சிறையில் இருந்தார்கள்.
நேரே சுரக்காய் தாத்தாவிடம் சென்றது சின்ன வெங்காயம். சுரக்காய் தாத்தா ஊரிலேயே வயதானவர் தனக்காக ஒரு வீடுகட்டிக்கொள்ள எத்தனையோ வருடங்களாக முயன்று வருபவர். சின்ன வெங்காயம் அங்கே சென்றபோது ஏக தடபுடலாக இருந்தது. சுரக்காய் தாத்தாவை இரண்டு தக்காளி காவலர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எதிரில் தளபதி தக்காளி தாம்தூம் என்று குதித்துக் கொண்டிருந்தது.
‘வீடுகட்டுவதற்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது ….’ என்றது தக்காளி.
கட்டுமான கழிகள் செங்கல் என்று எடுத்து வீதியில் வீசினார்கள்.’ ’இனி வீடு நீ கட்டுவதை பார்த்தால் சிறையில்தான் உனக்கு முடிவு’ மிரட்டியது தக்காளி.
பிறகு சுரக்காய் தாத்தாவை பிடித்து கீழே தள்ளிவிட முயன்றது.. ‘என்ன முறைக்கிறாயா?’
ஆனால் அந்த நொடியில் சின்னவெங்காயம் தளபதி தக்காளிக்கும் சுரக்காய் தாத்தாவுக்கும் நடுவில் சென்று நின்றது.
‘ஒரு தாத்தாவிடம் உன் வீரத்தை காட்டுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா’ எங்கிருந்து தான் சின்ன வெங்காயத்திற்கு அப்படி ஒரு வீரம் வந்ததோ….
தக்காளி அதற்கு பதில் சொல்வதற்குள் அந்த வழியாக ஒரு மீஞ்சூறு எலி வந்தது.
எலியை பார்த்ததும் தளபதி தக்காளி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தது.
இதை பார்த்த தாத்தா சுரைக்காய் அசந்துபோனது. தக்காளி, சின்ன வெங்காயத்தை பார்த்து பயந்து ஓடியதாக அது நினைத்தது.
சற்று தொலைவுக்கு ஓடியபிறகு நின்று தக்காளி சின்ன வெங்காயத்தை பார்த்தது. ‘ உன் தராதரம் தெரிஞ்சு பேசு…. நீயெல்லாம் மண்ணுக்கு அடியில் பிறந்தவன்’….
மண்ணுக்கு அடியில் விளையும் வெங்காயம், கேரட், முள்ளங்கி எல்லாம் கீழ் பிறவிகள் என்றுதான் தக்காளி சொல்லியது. அந்த நாட்டில் அதுதான் பிரச்சினை கீழ்பிறவிகளை பின்னுக்கு தள்ளி செடியின் மரத்தின் மேலே வளரும் தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு செர்ரி எல்லாம் உயர்பிறவி என்று ஆதிக்கம் செலுத்தி இவர்களை அடிமையாக வைத்திருந்தன.
‘சுரக்காய் தாத்தா விடம் ஏன் வம்பு செய்கிறாய்… அவர் பூமிக்கு அடியிலா விளைகிறார்’ சின்ன வெங்காயம் விடவில்லை. இப்படி தளபதி தக்காளியைப் பார்த்து யாருமே எதிர்கேள்வி கேட்டது இல்லை.
‘வாயை மூடு… உனக்குப் புரியாது முட்டாள். சுரக்காய் பூசனி எல்லாம் மண்மீது வளரும்.. ஆனால் மேலே செடியில் வளருவது இல்ல..அவர்கள் இருபக்கமும் சேர்த்தி கிடையாது’ தக்காளி கீரிச்சிட்டது.
சின்ன வெங்காயத்தின் கவனம் இப்போது அங்கு வந்த எலியின் பக்கம் திரும்பியது. அந்த எலி நொண்டி நொண்டி வந்தது.
‘என்ன நண்பரே அடிபட்டு விட்டதா’ என்றது சின்ன வெங்காயம் அதன் குரலில் உண்மையான அக்கறையும் பரிவும் இருந்ததால் அந்த எலி நின்று ஆது யார் என்று பார்த்தது. பிறகு பின்காலை தூக்கியது. ‘நல்லா இடிச்சுகிட்டேன்’ என்றது. வலியில் அது அழுகிறது என்பதை சின்ன வெங்காயம் புரிந்துகொண்டது.
‘ என்னை எடுத்து லேசாக தரையில் தேய்த்து அடிபட்ட இடத்தில் தடவி விடுங்கள்…. சரியாகிவிடும்’ என்றது சின்ன வெங்காயம்.
‘உ … உனக்கு வலிக்காதா ’ என்றது எலி ‘பரவாயில்லை… நண்பனுக்காக ’ என்று சின்ன வெங்காயம் பதிலளித்தது.
என்ன அதிசயம். அது சொன்னதுபோலவே அதை எடுத்து தரையில் லேசாக தேய்த்து தன் காயத்தில் வைக்க கொஞ்சநேரத்தில் வலி போய்விட்டது.
தனக்காக தரையில் தேய்மானம் அனுபவித்த சின்ன வெங்காயத்தின் மீது எலிக்கு அன்பும் பரிவும் ஏற்பட்டன. ‘ எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அழைக்கலாம்.’ என்று சொல்லி பிரிந்தது.
சின்ன வெங்காயம், தன்னைப்போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் முள்ளங்கி, கேரட் உருளை என பலரையும் ஒன்று திரட்டியது. மேலும் அவர்களோடு இஞ்சி, மஞ்சள் என சிலரும் சேர்ந்தனர். முட்டைகோஸ், காலிஃபிளவர் என மண்மேல் படர்ந்து விளையும் சில காய்கறிகளும் தர்பூசனியும்கூட இப்போது சின்ன வெங்காயத்தின் கூட்டத்தில் சேர்ந்திருந்தன. இப்படி அவர்கள் ஒன்றிணைந்தது யாருக்கும் தெரியாது.
மறுபடி எலுமிச்சை மகாராஜா நகர் வலம் வரும்நாள் வந்தது. இம்முறை கோட்டையில் வசித்த கோமாட்டிகளும்கூட ராஜாவோடு வந்தார்கள் தளபதி தக்காளி முதல் மந்திரியான ஸ்டிராபெரி, திராட்சை என்று ஏகக்கூட்டம்.
எல்லாரும் நகர்வலத்தில் இருந்தபோது சின்ன வெங்காயமும் அதன் கூட்டத்தை சேர்ந்த மண்ணின் அடியில் தோன்றியவர்களும் அவர்களது தோழர்களும் கோட்டையை பிடித்தார்கள். மேலே ஏறி ஒரு வெள்ளைக்கொடியை சின்ன வெங்காயம் பறக்கவிட்டது. அந்த கொடியில் ‘அனைவரும் சமம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
கோட்டை பிடிக்கப்பட்டதை அறிந்த தக்காளி தன் படையோடு விரைந்தது.
சண்டை வேண்டாம் என்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சின்ன வெங்காயம்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த தக்காளி சின்ன வெங்யகாயத்தின்மீது பாய்ந்து தலைமுடியை பிடித்து பியித்து இழுத்தது. இதனால் அதன் தோல் உறிந்தது.
சின்னவெங்காயத்தை பிய்த்தால் என்ன ஆகும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.
தக்காளி கண்ணில் எரிச்சல். அந்த எதிரிபடையே கண்ணை கசக்கத்தொடங்கியது.
இதுதான் சந்தர்ப்பம் என்று தன் நண்பன் எலியை அழைத்தது சின்ன வெங்காயம்.
எலி தனது நண்பர்களோடு வந்தது. முதலில் மண்ணில் வலை-பொந்து தோண்டி சிறையில் இருந்த பெரிய வெங்காயத்தையும் பிறரையும் மீட்டது.
பிறகு முழு கோட்டையையும் பொந்துகள் வலைகள் தோண்டி தரைமட்டமாக்கியது எலிக்கூட்டம்.
‘ கோட்டையும் வேண்டாம்… அதிகாரமும் வேண்டாம் எல்லாரும் சமம்’ என்று அறிவித்தது சின்ன வெங்காயம்.
அதிலிருந்து எல்லா காய் கனிகளும் சுதந்திரமாக தங்கள் தங்கள் வேலையை செய்து வருகின்றன.
முந்தைய தொடரை வாசிக்க:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.