எல்லா மழையும் அருட்கொடை தான்
மாறுதலாய்
காளானைப் பிரசவித்த
அண்மை மழையின் தாய்மை
நம்பிக்கையை கூட்டிற்று
குழந்தையின் இதழ்களை
பிறைநிலவாக்கிய கடவுள்
நட்சத்திரங்களை கண்களில் மினுக்கவிட்டதில்
தெரிகிறது பேதமின்மை
ஒன்றைவிட பெரிதில்லை
துளிகளில் ஒன்று
ஒன்றுக்காக
ஒன்று இல்லை
உறுதியில்லை ஒன்றுக்குமெனில்
ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றும் ஒன்றும் ஒன்றி
சொல்லிக் கொண்டிருக்கிறது
ஒன்றை
உணருகையில்
இதமான சூடு ஒன்று
பரவசப்படுத்துகிறது
உள்ளுக்குள் பரவும் ஏகாந்தத்தை
தூரத்து மழை
இப்போது பெய்கிறது
என்னை நனைத்தபடி….
–யாழ் ராகவன்
..

