மன்னராட்சி முடிந்துவிட்டது என்பவன் அறிவாளி
தொடர்கிறது என்பவன் முட்டாள்
ஆனால் கவிஞன் எப்போதும்
முட்டாளாகவே இருக்கிறான்.
சாதிக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது
அது அரூபமாய் இருக்கிறது.
சாதிக்கு ஓர் அரசர் இருக்கிறார்
அவர் மாறுவேடம் போட்டிருக்கிறார்.
சாதிக்கு ஒரு கோட்டை இருக்கிறது.
ஆனால் எலும்புக் கூடுகள் வெளியே தெரிவதில்லை.
சுற்றிலும்
அவ்வளவு ஆபத்தான அகழிகள் இருக்கின்றன
இருப்பினும் முதலைகளின் கருணை பற்றி
அறிவிப்புப் பலகை நடப்பட்டிருக்கிறது.
சாதிச் சிற்றரசர்
மதப் பேரரசருக்குக்
கலவரக் கப்பம் கட்டிவிடுகிறார்.
வரிகளாக
சடலங்கள் செலுத்தப்படுகின்றன.
மற்றபடி இங்கே
மனிதாபிமானம்தான்
சிம்மாசனத்தில் இருக்கிறது!
2
சம்புகன் தலைகளும்
ஏகலைவன் விரல்களும்
சேரிகளின் சேமிப்புக் கிடங்குகள்.
அவர்களின் முதுகெலும்புகள்
கிடைக் கோட்டில் இருந்தால்தான்
சமூக நல்லிணக்கத்திற்கு நல்லது.
அப்படியும் நிமிர்ந்துவிடக் கூடாது என்பதற்குத்தான்
முதுகில்
பாவத்தின் கரிமூடடைகள்.
3
பழைய சதுரங்கத்தில்
புதிய பகடைகள்
சொந்த உடலிலிருந்து
இதயத்தை அகற்றுதல்.
எதிரில் நிற்பவன் உடலில்
எலும்புக் கூடுகள் தேடுதல்.
சட்ட உடைகள் இல்லா நிர்வாணிகளின்
தோலுரித்தல்.
அக்கினிச் சட்டியில் பிறந்ததாகச் சொல்லி
தாயின் கருப்பை
உருவப் பொம்மை எரித்தல்.
கார்ப்பரேட் வாசலில்
காற்றடித்த பொம்மைகளின்
போலி கௌரவப் புடைத்தெழும் மார்புகளில்
புல்லரித்தல்!
முன்னேறும்
காலச் சக்கரங்களில்
சொந்த சகோதரர்களைத்
தலை வைத்துப் படுக்கச் சொல்லி
தர்மம் காத்தல்!
4
புராணங்களின் புவியியலில்
சுடுகாடுகளை நிர்மாணித்தல்
ஐதீகங்களால் சிதை வளர்த்தல்
வரலாறுகளை எரியூட்டுதல்.
5
ஜெய் பீம்
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையவனுமான
ஒருவனின்
மானுட குலத்திற்கான மந்திரச் சொற்கள்!
அவன் முகத்தில் சாணியடிக்க
யாரேனும்
அக்கினிச் சட்டியில் கைவிடுவார்களா?
ஏன்?
குரலற்றவனின் குரல்
முதல் முதலாய் ஒலிக்கிறபோது
காதைச் செவிடாக்கும்
காயத்ரி மந்திரங்கள்?….
விஷப் பாம்பைக்கூட
கைகளால் பிடித்துவிட்ட ராசாக்கண்ணுவை
விழுங்க
எத்தனை மலைப் பாம்புகள்?
5
சாதியற்ற சமூகம் காண
ஆகாய விமானத்திற்கு
ஆசைப்பட்டேன்.
சாதி நிழல் படியாத
மகோன்னத பூமி
மண்ணில் இருக்குமா?
தற்காலிகமாகவேனும்
தரிசிக்க முடியுமா?
இருட்டப்பனையும் மொசக்குட்டியையும்
கனடாவுக்கு அழைத்துவந்தேன்
செக்யூரிட்டி செக் – இல் மாட்டிக் கொண்டார்கள்.
இருவரின் கால்களிலும்
சங்கிலியால் பிணைத்த
ஜாதி உலோக இரும்புக் குண்டுகளாம்!
ஒருவனின் இரும்புக் குண்டுகளை
விதைகளாக்கினேன்.
மற்றவனுக்கு
கண்கள் பிடுங்கப்பட்டக்
குழிகளில் செருகினேன்.
இனி அவர்களின்
விடுதலை நோக்கிய வெளிநாட்டுப் பயணம்!
6
கனடாவில்
முதல் முதலாய்ச்
சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்கள்.
சாமீ என்று
யாரையும் அழைக்கும் அவசியமில்லை.
இருளா என்று யாரும் அவர்களை
இம்சிக்கவில்லை
இருட்டப்பனும் மொசக் குட்டியும்
என்னைக் கேட்டார்கள்….
“லாக் அப்பில்
எங்கள் கண்களில் தூவிய மிளகாய்ப் பொடி
உலகத்தின் கண்களை உறுத்தவேயில்லையா?”
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.