புலம் பெயர் தேசம்
ஐம்புலன்களும்
ஒடுக்கி வைத்து தான்
பயணம் வந்தோம்..
குளிரோ வெயிலோ
பிழைப்பு இது தான்
என்றே அறிந்தோம்..
நாடு விட்டு நாடு வந்தோம்
உயிரும் கூடு விட்டு கூடு
பாய்வது உணர்ந்தோம்..
இட்லி கறிக்குழம்பு
ஞாயிறு மீன்குழம்பு
நாக்கின் சுவை மறந்தோம்..
குழந்தைக்காய் வாங்கிய
மிட்டாய் கசக்கிறது
ஏனென்று அறியோம்..
பேருக்கு பிள்ளை வெளிநாட்டில்
விடியும் பொழுதுகள் சுடுகாட்டில்
புலம்பித் தான் தீர்க்கிறோம்..
புலம் பெயர் தேசமிது..
புலனக்குழுவில் கடவுள்
இன்னொரு தோசைக்காக
கண்கள் கசக்கிய
ஏழையின் சிறு மகளையும்
மீண்டும் தனது
சட்டைப் பையை
சில்லறைக்காக
துழாவும் தந்தையையும்
முச்சந்தியின்
மரத்தின் அடியில்
வீற்றிருந்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்
பூட்டுப் போட்ட உண்டியலுக்கு
பின்புறத்தில்
அந்தக் கடவுள்
இந்தக் காட்சியை
படம் பிடித்து பதிவிட்டு
‘உதவுங்கள்’ என்றவுடன்
இரு புலனக் குழு கடவுள்கள்
அனிச்சையாய் வெளிப்பட்டனர்.
இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது…
“புலனக்கடவுள்கள்” இல்லாதவர்களுக்கு உதவும் கரங்கள் எல்லாமே பிராத்திக்கும் கரங்களை விட உயர்வானதே…அருமை அருமை…
குழந்தைகள் பெற்ற குழந்தைகளுக்கு பேபிசிட்டிங் பண்ண போய் அங்கேயே இருக்க பணிக்கப்படும் பல பெரியவர்களின் மனக்குமுறல் உங்கள் முதல் கவிதையில்..இதுவும் சிறப்பாக👌💐…தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள் தோழர்💐
நன்றி தோழர்.. 😊😊😊