காண்பது எப்போது …
~~~~~~~~~~~~~~~~~
முண்டியடித்து இடம்பிடித்து
சிலநாள் அமர்ந்தும்
பலநாள் அமராமலும் பயணித்த
தூரத்துப் பள்ளியை
காண்பது எப்போது?
போட்டியிட்டு ஓடி வந்து
கொடுக்க மறுத்தாலும்
மதிய உணவுப் பையை
வாங்கிச் செல்லும்
மழலைச் செல்வங்களை
காண்பது எப்போது ?
“ஹலோ டீச்சர் நல்லாயிருக்கீங்களா?”
என்று கீச்சுக் குரலில்
அலைபேசியில் கூப்பிட்டழைத்து
பேசும் அன்பு மலர்களை
காண்பது எப்போது ?

“என்னை அடிச்சிட்டான்”
“பென்சிலைக் காணோம்”
புகார்களை
அடுக்கிக் கொண்டே வரும்
பிஞ்சின்குரல் முகபாவனைகள்
காண்பது எப்போது?
“நான்தான் முதலில் எழுதினேன்”
“நான்தான் முதலில் வாசித்தேன்”
போட்டியிட்டுக் கொண்டு
எனதருகில் வரும்
கபடமில்லாக் குழந்தைகளை
காண்பது எப்போது?
கொரோனா வைரஸ்
ஒன்றும் செய்திடாது
திடமான மனதோடு
நித்தம் நீ உன் நண்பர்களோடு
விளையாடிக் களித்திரு…
புத்தம் புதுப் பூக்களாய்
ஏக்கத்துடன் காத்திருக்கும்
உங்களை அரவணைக்க
ஆவலுடன் வருகிறேன்
என் கண்மணிகளே …
…………………………………………………………
அ.ஜெயவாணி, கோவில்பட்டி


அருமை தோழர் நன்றாக உள்ளது.👏👏