ஜெயகாந்தன் (Jeyakanthan) எழுதி மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) வெளியிட்டுள்ள கை விலங்கு (Kai Vilangu) - நாவல் புத்தகம்

ஜெயகாந்தன் எழுதிய *கை விலங்கு* – நூல் அறிமுகம்

ஜெயகாந்தன் எழுதிய *கை விலங்கு* நாவலில் இருந்து…

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரா என்று ஒரு கணம் சிந்தித்த என்னையும் சிலிர்க்க வைத்தது அவரது எழுத்துக்கள் .. ஒழுக்கம், நெறிமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூக விதிமுறைகள் குறித்த அவரது கருத்துக்களை பிரதிபலிப்பதோடு வாழ்க்கை மற்றும் உறவுகளின் தெளிவான சித்தரிப்புகள் அவரது படைப்புகள்..

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான *ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்*. சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது மற்றும் பல விருதுகளை தன்னகத்தே தக்க வைத்தவர் என்ற பெருமை அவருக்குண்டு

ஆசிரியர் ஜெயகாந்தன் அவர்கள் கை விலங்கு கதையின் துவக்கமாக ஆணை குன்றம் என்ற மலையில் இருக்கும் ஜெயிலையும் அதற்கு முன் அதற்கு அழைக்கப்பட்ட பெயர் மைக்கேல் மலை எனவும் கிழக்குக் கடற்கரையோரம் கொத்துக்கொத்தாக ஆங்காங்கே இருக்கும் மலைக்குன்றுகளில் ஒன்றன் மீது ஆசைப்பட்ட ஒரு வெளிநாட்டவன் வந்து அழகான ஒரு பங்களாவாய் வடிவமைத்து அதற்கு அப்பப்போ வந்து சுற்றுலாத்தலமாக சுற்றி வந்தான் ஆணைகுன்றம் மலையில் என்கிறது சில தகவல்கள்..

அதன்பின்னர் அதனை பார்ப்பவர்கள் விமர்சிக்க அதுவும் ஆனது பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக, படிப்படியாக அதனுடைய ரூபம் மாறி sub jail ஆக மாறப்பட்டது அதன் பரிணாம தொடர்ச்சியாக இப்பொழுது central jail ஆக ஆணை குன்றம் செயல்பட்டு வருகிறது…

கதையின் அஸ்திபாரமாக கற்பனை உலகம் மெருகூட்டப்பட்ட அந்த ஒரு நிகழ்வு!! கையில் எடுக்கும் கடிதத்தால் Jail Superintendent ராகவ ஐயர் கடத்திச் செல்லப்படுகிறார் 14 ஆண்டுகளுக்கு பின்னால் தன் முன்னே வரும் அந்த கைவிலங்கிடப்பட்ட மாணிக்கத்தின் உருவம் இருபதே வயதான இளஞ்சிறு வாலிபனாக அவரது கற்பனையில் வந்து போகிறான்.. கடிதத்திலோ மாணிக்கத்தின் காதலி கோகிலாவின் ஏக்கங்களும், கஷ்டங்களும், படாத பாடுபடும் அவளது மன அலசல்களும், மாணிக்கத்தின் தாயின் உடல் மோசமான நிலையும் கடிதத்தை வாசிக்கும் ராகவ ஐயரின் மனநிலையை நிலைகுலைய செய்கிறது.

ராகவ ஐயரை பற்றிய வர்ணனைகளும் , அவரது செயல்பாடுகளும், ஜெயிலுக்குள் இருக்கும் அனைவர் மேலும் அவருடைய கரிசனை உள்ளமும், ஒவ்வொருவர் மேலும் அவரது முழு அக்கறையும் மட்டுமல்லாது அவரைப் பற்றிய சிறு சிறு தகவல்கள் நாவலின் கதாநாயகரே இவர் தான் போல என கணிக்கும் அளவுக்கு வர்ணிப்பும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஆசிரியரால்..

இன்னொரு புறம் ராகவ ஐயர் அவரது மனைவி அலமேலு அம்மாவின் வாழ்க்கை முறை கதை போகிற போக்கிலே அறிந்து சுவாரசியமாய் ரசிக்க முடிந்தது ஒரு கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நல்லுறவுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக இருவரிடமும் காண முடிந்தது அவர்கள் இருவரின் அனுசரனையான வியப்பூட்டும் வாழ்க்கை நெறி….

அவ்வளவு நிறைவான குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் சந்ததியின்மை என்ற ஒரு குறை அவர்களை எவ்வாறு வாட்டி வதக்கியது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டி செல்லும் அந்தத் தருணம் நம் கண்களையும் குளமாக்கத்தான் செய்கிறது..

இருப்பினும் தங்களை சுற்றி தங்களோடு வாழ்ந்து வரும் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டு குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட அந்த சிறை கைதிகளே தங்கள் குழந்தைகள் என நினைத்து வாழும் அந்த தம்பதியினரின் வாழ்க்கைநெறியும் சற்றே வியக்கத்தான் வைக்கிறது நம்மையும்..

மாணிக்கத்தின் தாய் ரங்கம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமானதாக இருக்கும் அந்த சூழ்நிலையை கண்டறிந்த ராகவ ஐயர் நல் உள்ளம் கொண்ட சிறை கைதியான கதாநாயகனாகிய மாணிக்கத்திற்கு தனது தாயை சென்று பார்த்து வருவதற்கு மற்ற தம் சக பணியாளர்களின் ஒப்புதலோடு கூட (தனது முழு பொறுப்பில் ) வெளியே அனுப்பி விடுகிறார்..

ஒரு இரவே அவனுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவனும் தாங்கா துயரோடும், மிகுந்த ஆவலோடும் தன் தாயைக் காண விரைகிறான். கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்ளாக மாணிக்கம் திரும்ப ஜெயிலுக்கு வந்தானா இல்லையா? குறித்த காலக்கெடுவிற்குள் வர முடியாமல் போனதற்கு காரணம் என்ன? நாவலை வாசித்து அறிவோமா!!

கை விலங்கை அப்புறப்படுத்திய போதும் நம்பிக்கை என்னும் கைவிலங்கை தன்னகத்தே பூண்டு தன் துயர் நீக்க தமக்காய் முயற்சி எடுப்போரின் எண்ணங்களுக்கு வித்திடும் வண்ணமாக நம்பிக்கையின் ஆணிவேரை அகற்றா நெஞ்சமாய், நம்பிக்கையின் நாயகனாய் வலம் வரும் சிறை கைதியான மாணிக்கத்தின் கதாபாத்திரம் நம்பிக்கை என்னும் விதையை நம் மனதிலும் விலங்காய் பூட்டி சென்றிருக்கிறது ஜெயகாந்தனின் *கை விலங்கு* ! ! !.

ஒரு ஆசிரியராக எனது கண்ணோட்டம்.. சிறை கைதிக்கே இத்தகைய நம்பிக்கையின் வித்தை விதைத்த ராகவ ஐயரை போல நாமும் நம் மாணவச் செல்வங்களின் மனதில் நம்பிக்கை என்னும் வித்தை ஏன் விதைக்க கூடாது நம் பேச்சினால் அல்ல நம் முன் மாதிரியான நடத்தையினால் என்ற கேள்வி என்னுள்.. வாருங்கள் நாம் இணைந்து செயல்படுவோம் *நம்பிக்கை என்னும் கை விலங்கை அளிப்போம் நம் மாணவச் செல்வங்களுக்கு!!*

நூலின் விவரம்:

நூல்: கை விலங்கு (Kai Vilangu)
ஆசிரியர்: ஜெயகாந்தன் (Jeyakanthan)
பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam)
பக்கம்: 92
விலை: ரூ. 90

நூல் அறிமுகம் எழுதியவர்:

சுகிர்தா குணசீலி அ,
திருநெல்வேலி..

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *