ஜான் ரே (John Rae) ஜூன் 1, 1796இல் ஸ்காட்லாந்தில் பிறந்து ஜூலை 12, 1872இல் மறைந்த, ஒரு அமெரிக்கப் பொருளியலாளர், மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் முன்வைத்த பொருளாதார வளர்ச்சிக் கோட்பாட்டிலிருந்த பல கூறுகள், அவருக்குப் பெரும்பாலும் மரணத்திற்கு பின் புகழைப் பெற்றுத் தந்தன, இவற்றில் முதன்மையானது அவரது மூலதனக் கோட்பாடு ஆகும். ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ஹியூம் ஆகிய இருவரின் பொருளாதாரக் கருத்துகளால் ஜான் ரே ஈர்க்கப்பட்டார். இர்விங் ஃபிஷர் தனது புத்தகங்களில் ஒன்றின் முன்னுரையில் ரேயின் மேற்கோளை சுட்டிக் காட்டி, நவீனப் பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். அவரது படைப்புகள் பொருளியலாளர்களான ஜான் ஸ்டூவர்ட் மில் மற்றும் ஜோசப் ஏ. ஷும்பீட்டர் ஆகியோரிடம் தாக்கத்தை உண்டாக்கியது.
ஜான் ரே, ஆடம் ஸ்மித்தின் கட்டுப்பாடற்ற தடையற்ற வர்த்தகத்திற்கான கருத்தினை எதிர்த்தார்; அது தேசிய மூலதன உருவாக்கம் மற்றும் நீண்டகால உற்பத்தித் திறன் ஆகியவற்றின் இயக்கவியலைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது என்று வாதிட்டார். நன்கு நிலைபெற்ற தொழில்களைக் கொண்ட முதிர்ச்சியடைந்த பொருளாதாரங்களில் தடையற்ற வர்த்தகம் நன்மை பயக்கக்கூடியதாக இருந்தாலும், அது குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் மலிவான வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் மூலதனத்தைச் சிதறடிக்கக்கூடும் என்று ரே வாதிட்டார். இந்த இறக்குமதி, உள்நாட்டு முதலீட்டிலிருந்து வளங்களைத் திசைதிருப்புவதோடு, மூலதன இருப்பைக் கட்டியெழுப்புவதற்காக நுகர்வை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது என்றார்.
வருங்காலப் பணத்திற்காக நிகழ்காலப் பணத்தைத் தியாகம் செய்யும் வட்டி வருவாயை அவர் தொடர்புப்படுத்தினார். மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பப் புத்தாக்கமே திறவுகோல் என்பதையும் அவர் அடையாளம் காட்டினார். ரே தனது மூலதனக் குவிப்புக் கோட்பாட்டை ‘ Statement of Some New Principles on the Subject of Political Economy (1834) என்ற நூலில் விளக்கினார். அதில், எதிர்கால உற்பத்தியைச் சாத்தியமாக்குவதற்காக வருமானம் அல்லது உற்பத்தியை உடனடியாக நுகர்வதைத் தவிர்ப்பதே சேமிப்பு என வரையறுக்கப்பட்டு, மூலதனம் முதன்மையாகச் சேமிப்பிலிருந்து உருவாகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மூலதனக் குவிப்பு குறித்த ரேயின் பகுப்பாய்வு, அவரது “செயல்திறன் மிக்க குவிப்பு விருப்பம்” என்ற கருத்தாக்கத்தைப் பெரிதும் சார்ந்திருந்தது. கண்டுபிடிப்பின் பங்கு, மூலதன உருவாக்கத்தில் நீடித்த தன்மை, மற்றும் அரசின் பொருளாதாரப் பங்கு ஆகியவை குறித்த ரேயின் பகுப்பாய்வு, தொழில்நுட்ப மற்றும் இலக்கியக் கண்ணோட்டங்களிலிருந்து போற்றத்தக்கதாக இருந்தது.
சேமிப்பு விகிதங்கள் வட்டி விகிதங்களை நேர்மாறாக நிர்ணயிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்; ஏனெனில், அதிகப்படியான சிக்கனம் மூலதன வழங்கலை அதிகரித்து, வருவாயை குறைக்கிறது. அதே சமயம், குடும்ப அமைப்புகள் அல்லது பாதுகாப்பு குறித்த கண்ணோட்டங்கள் போன்ற, சேமிக்கும் நாட்டத்தைப் பாதிக்கும் கலாச்சார அல்லது நிறுவனக் காரணிகள் தேசிய செல்வ ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன என்றார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நடத்தை குறித்த ரே-வின் பகுப்பாய்வானது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய கனடியப் பொருளாதாரம் குறித்த அவரது நேரடி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது; ஆயினும், அவரது கோட்பாடு வியக்கத்தக்க வகையில் நவீனத் தன்மையைக் கொண்டுள்ளதுடன், வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முழுமையாகப் பொருத்தமானதாகவும் விளங்குகிறது.
ஆதாரம்
www.hetwebsite.net; www.utppublishing.com; www.biographi.ca; www.grokipedia.com; www.britannica.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

