“மயூரி என் உயிர் நீ” – நூல் அறிமுகம்
‘தேவியின் கண்மணி’ இதழில் பிரசுரமாகியுள்ள ‘மயூரி என் உயிர் நீ’ என்ற நாவலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அதன் ஆசிரியரைக் குறித்துச் சில வார்த்தைகள்.
இந்நாவலின் ஆசிரியர், திரு. வரதராஜன் அவர்கள், ‘ஜூனியர் தேஜ்’ என்ற புனைப்பெயரில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதோடு, ஒரு சிறந்த ஓவியராகவும் திகழ்கிறார். எனவே, இவரை ஒரு பன்முகக் கலைஞர் என்று சொல்வது மிகையாகாது.
எழுத்துச் சித்தரின் பாராட்டு
இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல், இவர் எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன் அவர்களின் ஆசியைப் பெற்றவர். “உன் கதை, முதல் முறை எழுதுபவனுடையது போல் இல்லை; பல வருடங்கள் எழுத்துலகில் அனுபவம் வாய்ந்த ஒருவரின் கைவண்ணம் போல் உள்ளது” என்று என்று அவரது வாயாலே புகழ்ந்திருக்கிறார்.
மேலும் பற.. பற… மேலே மேல் என்று மனதார வாழ்த்தியும் இருக்கிறார்.
திரு. பாலகுமாரனே இவரை வாயாரப் பாராட்டியுள்ளார். திரு. பாலகுமாரனைத் தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஜூனியர் தேஜின் எழுத்துக்களில், ஆங்காங்கே அந்தத் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது.
கதையின் கரு
பதினைந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில், போதைக்கு அடிமையானவர்களின் மனநிலை மற்றும் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமாகச் சிதைகிறது என்பதை ஆசிரியர் துல்லியமாக விவரிக்கிறார். போதைப்பொருள் ஒருவரை எந்த நிலைக்குத் தள்ளும், அதிலிருந்து மீண்டு வரப் போராடுபவர்களின் நிலை என்ன என்பதை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.
கதையின் ஒரு பகுதியில், போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவி நாவிஷ்னி, அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறாள். அவள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டாளா என்பது ஒருபுறம் இருக்க, கதையில் மற்றொரு முக்கிய திருப்பத்தையும் ஆசிரியர் அமைத்துள்ளார்.
காதலும் உளவியலும்
கதையின் நாயகி மயூரி, ஒரு கல்லூரி ஆங்கில விரிவுரையாளர். அவள் ஓர் எழுத்தாளர் மீது காதல் கொள்கிறாள். அந்தக் காதலை அந்த எழுத்தாளர் எப்படி அணுகுகிறார் என்பதே கதையின் சிறப்பு.
மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் பக்குவம் திரு. தி. ஜானகிராமனிடம் இருந்ததால்தான் அவரால் அத்தனை அநாயாசமாக எழுத முடிந்தது என்று திரு. பாலகுமாரன் குறிப்பிடுவார். அதேபோல, இந்த நாவலின் எழுத்தாளரும், நாயகி மயூரியின் மனதை ஊடுருவி, அவளது காதலை மிக அழகாகவும் தெளிவாகவும் கையாண்டிருக்கிறார். அதன்மூலம் கதைக்கு ஓர் ஆழமான முடிவை வழங்கியுள்ளார்.
முடிவுரை
முழுக்கதையையும் படிக்கும்போது இதன் ஆழம் புரியவரும். இது நிச்சயம் ஒரு ஜனரஞ்சகமான படைப்பு என்பதில் ஐயமில்லை.
ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்!
நூலின் விவரங்கள்:
நூல் : “மயூரி என் உயிர் நீ” நாவல்
ஆசிரியர் : ஜூனியர் தேஜ்
பதிப்பகம் : தேவியின் கண்மணி
எழுதியவர் :
–பாலமுருகன்.லோ-
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
