ராமனின் ராஜ்ஜியத்தில் சீதையின் சிதைகள்..
குங்குமத்திற்குப் பதிலாக ரத்தவாடை கமழ்கிறது.
சந்தனத்திற்குப் பதிலாகக் குருதியோடை உழல்கிறது.
துப்பட்டாவில் தொங்க வேண்டியது
அவள் கழுத்து அல்ல,
அவள் யோனியில் கௌரவம் புதைத்த
உங்கள் ஆணவத் திமிரும்,
அறுக்கப்பட வேண்டிய ஆண் குறிகளும்.
உடைக்கப்பட வேண்டியவை
அவள் எலும்புகள் அல்ல,
தேசிய பெருமை பேசும் உங்கள் மார்புகள்
வெட்டப்பட்டது அவள் நாக்கல்ல
நீதி தேவதையின் வாய்.
கைகூப்பி வேண்டி விடுவாளோ என்று
உடைக்கப்பட்டன கைகள்,
வாய்திறந்து கெஞ்சிவிடுவாளோ என்று
வெட்டப்பட்டது நாக்கு,
நிமிர்ந்து எதிர்த்திடுவாளோ என்று
உடைக்கப்பட்டது முதுகு..

எங்களைத் தீட்டென்று சொல்லி
ஒதுக்கும் உங்கள் கைகளுக்கு
அன்றென்ன விடுமுறையா!?
சுய இன்பம் காணாமல்
வலியில் சுகம் கண்டீரோ?
ஆணவக் குறிகள் நீட்டும்போது மட்டும்
தீட்டுக்கென்ன விலக்களிப்பா?
யோனிகளை தீண்டும்போது மட்டும்
அது “சீ” என்று விலகுவதேயில்லை.
நீ வேண்டிய ராமனைத்தான்
அவளும் வேண்டிக் கேட்டிருப்பாள்
இறைவா இந்த மனிதப் பேய்களிடமிருந்து
எப்படியாவது காப்பாற்றென்று
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.
மனைவியை தீயில் இறக்கியவனின்
மகன்கள் மட்டும் விதிவிலக்கா?
இந்துக்களின் காவலன்களா நீங்கள்?
இரட்டை வேடதாரிகளே
பத்திரமாக வீட்டிற்குள் இருங்கள்.
இறந்தவளும் இந்துப் பெண்தான்.

சுபாஷ்
மாவட்ட தலைவர்
இந்திய மாணவர் சங்கம்
தென்சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *