இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் அதற்குத் தக புத்தகத்தின் நாயகருமான திரு க.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்களுடன் நடந்த உரையாடலாக அமைந்த இந்த அதற்குத் தக நூல் கையில் எடுத்து படிக்க தொடங்கிய உடனே முடியும் வரை தொடர்ந்து படிக்கத் தூண்டும் அருமையான வழிகாட்டும் புத்தகமாகும். திரு. நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் கேள்விகளுக்கு விடை அளிப்பவராக மிளிர்கிறார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக அவரது சார் ஆட்சியர் பணி மாவட்ட ஆட்சியராக பள்ளிக் கல்வித்துறை ஆணையாளராக மனிதவளத்துறையில் மின்சாரத்துறையில் உயர் அலுவலராக கூட்டுறவு சங்க பதிவாளராக பணியாற்றி, தொடர்ந்து பணியாற்றும் அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளது வியப்பு மேலிடும் அசாதாரணமான பதில்களாகும்.
வழக்கமாக ஒரு சிறு மேல்நிலை பதவிக்கு உயர்ந்தவுடன் தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து பலர் பேசியதை நேரடியாக கேட்டவன் அப்படியே ஆமோதித்து பதில் கூறாது கடந்தவன் என்ற அடிப்படையில் அவர்களைப் போல் அல்லாமல் ஒரு ஐஏஎஸ் அலுவலராக உயர் பணியாற்றும் திரு. நந்தகுமார் அவர்கள் தனது எளிய குடும்பம் அரசு பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு அதிலும் அரியர்சுடனும் பின் தேறிய பொறியியல் படிப்பு, உழைப்பை நேசித்த தனது தாய் தந்தையர்கள் பெருமை என அவரது உரையாடல்களில் உள்ள செய்திகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்த நிகழ்வுகள் போட்டித் தேர்வுகளை அணுகும் முறை பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளது பல இளம் தலைமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். உரையாடல்களில் கேள்விகள் நுணுகி நுணுகி ஆய்ந்து கேட்கப்பட்டுள்ளன ஆனால் பதில்கள் மிக நிதானமாக அணுகப்பட்டுள்ளன
கல்வி, மருத்துவம் குறித்த கருத்துகளே அவரது உரையாடல்களில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. இது அவரது தாகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் தொடங்கிய மாதிரி பள்ளி, சாயல்குடி மருத்துவமனை மக்களுக்கான மருத்துவமனையாக மாறியது நிச்சயமாக வரலாற்று பதிவுகளில் இடம் பெறும்.பள்ளிக் கல்வி த்துறையில் ஏற்படுத்த முயன்ற மாற்றங்கள்,பெற்ற அனுபவங்களை யார் மனதும் புண்படாமல் சொல்லி இருப்பது பெரிதும் பாராட்டிற்குரிய பண்பாகும்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றிய பொழுது நேர்முகத் தேர்வு குழு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்களை எப்படி மிக எளிதாக நேர்மையுடன் நம்பிக்கை ஏற்படும்படி செயல்படுத்தினார் என்பது பல வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமூகம்,சாதி பற்றி மக்களது நாடித்துடிப்புகளை களத்தில் அறிந்தவரான திரு நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் அதை எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் ஆழமான கருத்துடையவை திரு சத்யநாதன் ஆசிரியர் அவர்கள் எப்போதும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிய மாதிரி பள்ளியில் படித்து உயர்ந்த மாணவர் அளித்த அன்பு நினைவுப் பரிசு மறக்க இயலாது.
அவரது உரையாடல் கருத்துகளில் மேற்கோள்கள், சங்க இலக்கிய வரிகள் பயனுள்ளவை வாசிப்பை நேசிக்கும் அவரது பணிகள் தொடரவும் பலருக்கான வழிகாட்டியாக அவரது வாழ்க்கை அமையவும் இந்த புத்தகம் துணை புரியும்.
உரையாடல்களுக்கான கேள்விகளை மிக நேர்த்தியாக திட்டமிட்ட மிகச்சிறந்த கல்வியாளரும் கனவு ஆசிரியர் நூலின் ஆசிரியருமான மதிப்புமிகு க.துளசிதாசன் அவர்களும் குழந்தை எழுத்தாளர் கவிஞர் முற்போக்காளர் மனிதநேயமிக்க விஷ்ணுபுரம் சரவணன் அவர்களும் பெரிதும் பாராட்டுக்கு உரியவர்கள்.
இந்த புத்தகம் 12 தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது,
புத்தகத்திற்கு “தொலைநோக்கு பார்வை கொண்டவர்” என்று அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளின் செயலாளர் திரு சுதன் ஐ ஏ எஸ் ஓய்வு அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளதும்
“நம்பிக்கை ஒளிக்கீற்று” என்று உண்மையை ஓங்கி ஒலிக்கும் சதிஷ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றும் திரு கே சி தேவசேனாபதி அவர்களும் பொருத்தமான உரைகளை வழங்கி வழங்கிய பெருமைக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
திரு நந்தகுமார் அவர்கள் தெரிவித்த கருத்தான “பெரியோர் என வியத்தலும் இலமே சிறியோர் என இகழ் தலும் இலமே” என்ற இலக்கிய வரிகள் வாசித்தலுக்கான வரிகள் இல்லை பின்பற்ற தக்க மேற்கோளாகும். அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “அதற்குத் தக” |
| ஆசிரியர்: | க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ் | தொகுப்பு: விஷ்ணுபுரம் சரவணன் & க.துளசிதாசன் |
| வெளியீடு: |
எஸ்ஆர்வி தமிழ்ப் பதிப்பகம்
|
| விலை: | ₹.130 |
| அறிமுகம் எழுதியவர்: |
உடுமலைப்பேட்டை ச. செல்லத்துரை
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
