காதல் என்பது பொது உடமை – திரைப் பார்வை
தமிழில் இப்படி எல்லாம் கூட படங்கள் வருகிறதா என்று ஆச்சரியப் பட்டுப் போனேன். பால் திரிபர்கள் குறித்தான விழிப்புணர்வு பொது வெளியில் பரவலாகி வருவது நிச்சயம் வரவேற்கத்தகுந்தது, தன்பால் ஈர்ப்பாளர் குறித்தான ஒரு திரைப்படம் என்பது மிகவும் துணிச்சலானது. அதன் மேல் நிகழ்த்தப்படும் உரையாடல்கள் யாவும் ஆரோக்கியமானது. பார்க்க பகீர் என்று இருந்த போதும் இயற்கை எவற்றையும் நிராகரிப்பதில்லை என்பதையும் எற்கத்தான் வேண்டும்.
கணவரை பிரிந்து தனித்து வாழும் ரோகிணி தன் மகளின் காதலை அறிகிறார். வீட்டிற்கு காதலனை அழைத்து வரச் சொல்கிறார். மருமகனை பார்ப்பதற்கு பேராவல் கொள்கிறார். அவனுக்கு பரிசு வாங்கி வைப்பதும், விருந்து கொடுக்க திட்டமிடுவதிலும் பார்த்து பார்த்து செய்கிறார். தன் முன்னாள் கணவனையும் அழைக்கிறார். ஞாயிறு வருகிறது ஆணுடன் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆணின் தோற்றம் பிடித்து விடுகிறது. மகிழ்ந்து மறைவாக புகைப்படம் எடுத்து முன்னாள் கணவனுக்கு அனுப்புகிறார். வாங்கி வைத்திருக்கும் பரிசை கொடுத்து மகிழ்கிறார்.
அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்து விருந்து உண்ணத் துவங்குகிறார்கள். உரையாடல் மெல்லத் துவங்குகிறது. யார் காதலை முதலில் சொல்லியது என்று கேட்கிறார். நான்தான் சொன்னேன் ஆனால் உங்கள் மகள் ஏற்கவில்லை என்கிறார். அப்புறம் என்ன என்று கேட்கிறார்.மகள் எதிரே அமர்ந்திருக்கும் நந்தினியை கை காட்டுகிறார். ரோகிணி புரிபடாமல் விழிக்கிறார். மகள் அழுத்தம் திருத்தமாக தான் நந்தினியை காதலிப்பதாக தெளிவாக கூறுகிறார். தாயார் குழப்பமும் பதற்றமும் அடைகிறார். இதென்ன அசிங்கம் என்று அந்தப் பெண்ணை திட்டி அனுப்புகிறார். அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் அலை பாய்கிறார். வாங்கிய பூக்களையும் பரிசையும் குப்பையில் எறிகிறார். படம் சூடு பிடிக்கத் துவங்குகிறது.
பேசாப்பொருளை பேசத் துணிகிறது. பார்க்கும் நமக்கும் குழப்பமும் கலவரமுமாக இருக்கிறது. மகளிடம் பேசி சரி செய்ய முயற்சிக்கிறார். மகளோ பிடிவாதமாக தன் காதலில் உறுதியாக நிற்கிறார். நிலைமையை சரி செய்ய தன் முன்னாள் கணவரை வர வைத்து பேசிப் பார்க்கிறார். மகளின் ஆண் நண்பரையும் அழைக்கிறார். உரையாடல் நீண்டு கொண்டே போகிறது. உரையாடல் வழியே பால் திரிபர்களின் பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்படுகிறது.
திருமணம் ஆனால் யார் கணவன், குழந்தைகள், தாம்பத்யம் குறித்தெல்லாம் விரிவாகவே சுவாரசியமாக பேசுகிறார்கள். வேலைக்காரியாக வரும் தீபா எளிய மக்களின் பிரதிநிதியாக நின்று இவர்களின் காதலை அங்கீகரிக்கிறார். எளிய மக்களின் உலகம் புதுமைகளை வரவேற்கவே செய்கிறது. சந்தோசமா இருக்கிறார்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்கிறார். வலையொளி பதிவராக ஆலோசனைகள் சொல்லும் ரோகிணி தனது மகளின் சிக்கலான பிரச்சனையில் முடிவெடுப்பதில் திணறுகிறார்.
ஒரு சாதாரண தாயாராக இச்சிக்கலை புரிந்து கொள்ள முடியாமல் அழுது புலம்பி பதற்றப்படுகிறார். எல்லோருடைய ஆலோசனைகளையும் மீறி வீட்டை விட்டு வெளியேறத் துணிகிறார் மகள். மகளே உலகமென வாழ்ந்தவர் ஒரு நாள் என் கூட இருந்து விட்டுப் போ என்கிறார். கூட இருக்கும் பெண்ணோ நீங்கள் சம்மதிக்கும் வரை உங்கள் பெண் உங்களுடன் இருக்கட்டும் என்று சொல்லி கிளம்புகிறார்.
மொத்தம் 7 கதாபாத்திரங்கள் சமூக வெளியில் ஏற்க மறுக்கும் புதுமையான சிக்கலை எந்தவித ஆபாசமற்று உரையாடல் வழியே காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். பார்க்கும் நமக்கும் பகீரென இருக்கத் தான் செய்கிறது காலம் எல்லாவற்றையும் மாற்றும்.அதைப் புரிந்து கொண்டு மாறுவதற்கு நமக்குத்தான் சற்று காலதாமதமாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்த்துகிறது இப்படம். பால் புதுமையர்களின் நிலையை புரிந்து கொள்ள இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.
எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
காதல் என்பது பொது உடமை
இயக்கம் : ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
நடிகர்கள் : ரோகினி, லிஜோமோல், அனுஷா, தீபா, வினீத், கலேஷ்.
இசை: கண்ணன் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரீ சரவணன்
படத்தொகுப்பு: டேனி சார்லஸ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.