Kadaisi Vivasayi Moviereview By Pavel Bharathi திரைவிமர்சனம்: கடைசிவிவசாயி பேசும் பண்பாட்டு அரசியல் - பாவெல்பாரதி




கதைக்கரு:
ஊரில் இடி விழுந்து மரம் ஒன்று பட்டுப்போக, அதனைக் கெட்ட சகுனமாகக் கருதி, நீண்டநாளாகக் கும்பிடாமல் கிடக்கும் ஊர் தெய்வத்தைக் கும்பிட்டால் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து ஊர்மந்தையில் கூடி முடிவு செய்து, அதற்கான ஏற்பாடு நடக்கிறது. அந்தத் திருவிழாவைக் கொண்டாடினார்களா என்பதுதான் கதையின் கரு.

கதைக்கரு வழக்கமாகத் தமிழ் சினிமாவிலும் கதைகளிலும் பேசப்பட்ட ஒன்றுதான். ஆனால் கதையை நகர்த்தத் தேர்ந்து கொண்ட , கதைக்களம் கதை மாந்தர், திரைக்கதை, வசனம், காட்சிப்படுத்திய முறைமை, ஒளிப்பதிவு, ஏற்றுக்கொண்ட பாத்திரங்களின் இயல்பான நடிப்பு என அனைத்திலும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது படம். தமிழ் சினிமாவில் ஒரு புதிய கோணம்.

கதைக்களம்:
மழைப்பொழிவு குறைவான, வறண்ட கரடுகள் சூழ்ந்த, வானம் பார்த்த கரிசல்மண் கரட்டுக் காடும், கொஞ்சம் கிணற்றுப் பாசனமும் நடக்கும் எளிமையான விவசாயம், பிழைத்துக் கெட்டவர்களின் பழமையான வீடு, காரை பேய்ந்த சுவர்கள், மண்ணும் கல்லும் கலந்து கட்டிய மண் சாந்துச்சுவருடன் தகர வீடுகள், மாட்டுக் கொட்டத்துடன் அறண்டு கிடக்கும் வீடுகள் இருக்கும் தெருக்கள், தெருவோரப் பனியாரக்கடை , டீக்கடை என்று நவீனம் எட்டிப் பார்க்காத மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் ஒன்றுதான் கதைக்களம்.

கதை நாயகர் :
கொஞ்சம் நிலம், ஒரு பம்பு செட்டு, செவலைக்காளை வெள்ளைக்காளை என ஒரு சோடி உழவு மாடு, கோழி, காடுகரை இவற்றைத் தவிர எதுவும் அறியாத, மின்சாரமே இல்லாத வீட்டில் வாழும் ஏறத்தாழ எண்பது வயது எளிய சம்சாரியான மாயாண்டிதான் கதையின் மையம். நவீனத்தின் எந்த வெளிச்சமும் படாதவர். ஒற்றையாளாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு விவசாயம் என்பதைத் தொழிலாக அல்லாமல் வாழ்க்கையாக வாழ்பவர்.

கதைப்போக்கு:
ஊர்ப்பெரியவர்கள், ஊர்த்திருவிழாவுக்காக சாமிக்குப் படைக்கும் முதல் நெல் மணிகளை 15 ஏக்கர் நிலம் வைத்துள்ள ஊரின் பெரிய சம்சாரியான தனபாண்டியிடம் கேட்டுச்செல்ல, அவரோ 15 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டு, யானை வாங்கித் தொழிலை மாற்றிக்கொண்டதால் நெல்மணிகள் கொடுக்கமுடியாது போக, பெரியவர் மாயாண்டியிடம் கேட்டுச் செல்கிறார்கள். அவர், கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும், படையலுக்கான நெல்மணிகளை விளைவித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறார். நெல் நாற்றுநட்டு வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில் மயிலைக் கொன்று புதைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறார் மாயாண்டி.

நெல் நாற்றை வளர்த்தல், மயில் புதைத்தது தொடர்பான வழக்கு ஆகிய இரண்டு மையச்சரடைப் பிண்ணித்தான் கதை நகர்கிறது.

மயிலைப் புதைத்தலும் பண்பாட்டு எதிர் உரையாடலும்:
இரண்டு பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் என இறந்து கிடந்த மூன்று மயில்களையும் தம் நிலத்தில் மூன்று குழிகளைத் தோண்டி முருகன் வள்ளி தெய்வானையைப் பிரதிசெய்வதாய்
நடுவில் ஆண் மயிலையும் இரண்டு பக்கமும் பெண் மயில்களையும் இட்டுப் புதைத்தார் பெரியவர் மாயாண்டி.

இறந்தவர்களைப் புதைக்கத் தொடங்கியதுதான் மனித சமூகம் அடைந்த நாகரீகத்தின் முக்கியமான கட்டம் என்றும், அதனைப் பெருங்கற்கால நாகரீகம் என்றும், தொல்லியல் ஆய்வுகள் சிறப்பிக்கின்றன. இறந்த மனிதனை மட்டுமல்ல, தம் வாழ்வோடு ஒன்றிய கால்நடைகள், விலங்குகள் அனைத்தையும் புதைத்துள்ளதை அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றும் இறந்த கோயில் மாடுகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டுப் புதைக்கப்படுகின்றன. அப்புதைத்தல் பண்பாட்டு அறம் குற்றமாக மாறுகிற கலாச்சார அரசியலைப் பேசுவது புதுமையானது.

மயிலின் அகவல் கதை முழுவதும் வருவதும், மயில் சாவதும் ஒரு முக்கியமான குறியீடாகப் படத்தில் வருகிறது. சிந்துவெளி அகழாய்வில் H என்ற ஈமக்காட்டில் உள்ள ஈமக்குழியில் எடுத்த பானை ஓட்டில் மயிலின் உருவமும் மயிலின் வயிற்றுக்குள் படுத்த நிலையில் மனிதனின் உருவமும் வரையப்பட்டுள்ளது.

மயில் பிணத்தை உண்ணும் வகையைச் சேர்ந்தது இல்லை. மனிதனுக்கு நெருக்கமான பறவையினம். ஆறு, பேச்சு, தாய், தெய்வம், சரஸ்வதி ஆகியோரைக் குறிக்கும் சின்னமாக சிதிகண்டா என மயில் அழைக்கப்படுவதாக டி.டி.கோசாம்பி கூறுவார். புதைத்தல் என்பதே மீண்டும் கருவறைக்குள் செல்லுதல் என்பதன் தாந்திரக்குறியீடுதான். மயில் வயிற்றுக்குள் மனிதன் கிடத்தப்பட்டிருப்பதும் ஈமச்சின்னத்தில் வரையப்பட்டிருப்பதும் மயிலின் தாய்மைத்தன்மையைக் குறிப்பதாகவே கருதலாம். சங்ககால வள்ளல் பேகனின் குலச்சின்னம் மயில் எனவேதான் மயிலுக்குப் போர்வை ஈந்தான். முருகனின் வாகனமாக மயில் சிறப்பிக்கப்படுகிறது.

சிந்து வெளிக்குறியீடு குறித்து இயக்குநர் அறிந்திருக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. சிந்து வெளிக்குறியீட்டில் மயிலின் வயிற்றில் மனிதன். ஆனால் இங்கு மண்ணின் வயிற்றில் மயிலைப் புதைக்கிறான் மனிதன். மயிலின் இறப்பும் மண்ணுக்குள் புதைக்கப்படுவதும் ஒரு எதிர் உரையாடலாகப் படைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. காட்டு வேளாண்மை மிகுந்த பகுதிகளில் மயிலின் நடமாட்டம் மிகுதியாக இருக்கும். இங்கு மயிலின் அழிவை மண்ணின் அழிவாக; மயிலின் அழிவை, காட்டு வேளாண்மையின் அழிவாகக் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.

கதை நடைபெறும் இடம் இடைக்காலத்தில் தென் முட்ட நாடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஊடறுத்துத்தான் திருச்செந்தூர், தென்காசி, ராஜபாளையம், உசிலம்பட்டியைக் கடந்து கள்ளர் மடம், கண்ணாபட்டி, செக்காபட்டி வழியாக கொடைக்கானல், பழனி, கொங்குப்பகுதிக்குச் செல்லும் பெருவழி சென்றது. படத்தின் இயக்குநர் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பழனிக்குச் செல்லும் முருகபக்தர்களின் பாதயாத்திரை அவரின் பால்யத்தில் தாக்கம் செலுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

நீதிமன்ற விசாரணயும் பண்பாட்டு எதிர் உரையாடலும் :
சட்டம், நீதி, காவல், சிறைக்கூடம் போன்ற பண்பாட்டு மேல்கட்டுமானங்கள், நிலவும் சமூகப் பொருளியல் உற்பத்தி முறையைக் காப்பதற்காக உடைமையாளர்களால் உற்பத்திசெய்யப்பட்டவையாகும்.

கடந்தகால வேளாண் பொருளுற்பத்தி முறையின் எச்சமாக வாழ்கிற கடைசி விவசாயி மாயாண்டி காலனியத்தால் உற்பத்தி செய்யப்பட்டு அதன் நீட்சியாக நிலவுகிற இன்றைய நவீன காவல், சட்டம், நீதிமன்றத்தை எதிர்கொண்ட முறையும், அவை மாயாண்டிக்கு முகம் கொடுத்த விதத்தையும் பேசுவது முக்கியமான பண்பாட்டு அரசியலாகும். சட்டம், நீதி, ஒழுங்கு என்ற அறங்களின் வழி நின்று சமூகத்தைக் காட்டியதற்கு மாற்றாக மாயாண்டியின் பக்கம் நின்று சட்டம், நீதி, ஒழுங்கு ஆகியவற்றைப் பகடி செய்கிறது படம்.

பண்பாட்டுக் கூறுகள் எனும் மேல் கட்டுமானம் மாறும் பொழுது
சரி × தவறு
உண்மை × பொய்
நல்லது × கெட்டது
நாகரீகம் × அநாகரீகம்
நியாயம் × அநியாயம் போன்ற சமூக அறம் குறித்த மதிப்பீடுகளும் மாறுகின்றன.

மாயாண்டியின் பார்வையில் இறந்த மயிலைப் புதைப்பது அறம். சட்டத்தின் பார்வையில் குற்றம். வனத்தை நம்பி வாழும் பழங்குடி மக்களும், நிலத்தை நம்பி வாழும் விவசாயிகளும் யாரையும் விட வனத்தையும் நிலத்தையும் நேசிப்பவர்கள். ஆனால் அரசு இவர்களிடமிருந்து அவற்றைக் காக்க சட்டமியற்றுகிறது. மாட்டையும் மயிலையும் பயிரையும் சக உயிராகப்பார்க்கும் ஒருவரைச் சட்டம் தண்டிக்கிறது.

ஒரு உயிர் செத்ததுக்காகத் தன்னை விசாரிக்கும் நீதிபதியிடம், மாடு, கன்று, கோழிக்குத் தண்ணி வைக்கனும், நெற்பயிர் கருகிவிடும் நீர்பாய்ச்சனும் ஆயிரம் உயிர் சாகப்போகிறது என்று சொல்லும் பெரியவரின் சொல் சுரீரென உரைக்கிறது.

* பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய காவல்சட்டம் கொண்டு வந்த போது காவல் கூலி வாங்குவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. இச்சட்டம் வந்ததே தெரியாமல் பாரம்பரிய காவல்காரர்கள் காவல் கூலி வாங்குகிறார்கள். எனவே பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். மதுரை எஸ்.பி அலுவலகத்தைக் காவல் காத்ததற்கு போலிஸ் எஸ்.பி யிடமே காவல் கூலி பெற்றதாக எஸ்.பி. பவுல்ட்ரி எழுதி வைத்துள்ளார்.

* பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய வனச்சட்டம் கொண்டு வந்த போது, வனத்திற்குள் நுழைவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. வனச்சட்டத்தை அறியாத பழங்குடிகள் வாழ்வாதாரத்திற்குக் காடுபடு பொருட்களைச் சேகரிக்கிறார்கள். அதனைப் பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கிறார்கள்.

* பிரிட்டிஷ் ஆட்சியில் உப்புச்சட்டம் கொண்டு வந்த போது, உப்பு காய்ச்சுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. சட்டத்தின் தன்மையறியாத நெய்தல் நிலத்தவர் உப்புக்காய்ச்சிய பொழுது பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கப்படுகிறார்கள்.

* இங்கு மயில் இறந்ததைப் புதைத்தல் குற்றம் என்று அறியாத மாயாண்டியும் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுகிறார். ( நீதிபதியின் கருணையால் விடுவிக்கப்ப்டுகிறார்)

* இதே கதையில் மண் பானை செய்ய குளத்தில் களிமண் எடுத்தல் குற்றமாகவும், அதனைத்தடுக்க போலிஸ் காவல் இருப்பதும் பேசப்படுகிறது.

* வரப்போகும் வேளாண் சட்டத்தில் வீட்டில் விதை நெல் இருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகலாம்.

* வரப்போகும் நீர் மேலாண்மைச் சட்டத்தில் அனுமதி இல்லாமல் ஒரு குடம் தண்ணீர் இருந்தால் குற்றமாகலாம். நெல் நாற்று வளர்த்தல் பேசும் வேளாண் அரசியல்: கோயில் சடங்குக்கான நெல் நாற்று வளர்த்தல் என்ற சரடு பேசும் வேளாண் அரசியல் முக்கியமானது.

* விவசாயிகள் விளை நிலங்கள் விற்றல்.
* ஆர்கானிக் பாம் என்ற பெயரில் உருவாகும் கார்ப்பரெட் விவசாயம்
* மான்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் உருவாக்கும் விதையில்லா விதை ( seedless)
* நிலத்தை மலடாக்கும் ரசாயன உரங்கள்
* 100 நாள் வேலைத்திட்டத்தின் செயற்பாடு
* விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், விவசாயிகள் அடைந்த பாதிப்பு. இவ்வளவு முக்கியமான அரசியலை அழகியலோடு, நகைச்சுவையாகச் சொல்லியிருப்பது தனித்துப்பேசப்படவேண்டியுள்ளது.

இனவரைவியல் பார்வை :
ஒரு கிராம வாழ்வியலை இனவரைவியல் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது படம்.

குலதெய்வ வழிபாடு, மக்கள் இடப்பெயர்வு, புதிய இடத்தில் குடியேறும் தொன்மம், ஊர் தெய்வ வழிபாடு குறித்து ஊர் மந்தையில் முடிவெடுத்தல், ஊர்ப் பெரிய மனிதர்களின் பங்குபாத்திரம், கிராமக் கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும் முறைமை, ஊரில் சாதிய இருப்பு, சாதிய மறுப்பு என்ற இரட்டைத்தன்மை, திருவிழாவில் முளைப்பாரி, கும்மி, சேத்தாண்டி வேசம், பச்சை போடுதல் போன்ற வளமைச்சடங்கு, சாமியாடுதல், பறை இசைக்கலைஞர் அழைப்பு, புரவி எடுப்புக்கான வேளாரின் பங்கு பாத்திரம் கண் திருஷ்டிக் கயிற்றில் கட்டப்பட்டுள்ள எலுமிச்சை, பட்டவத்தல், சீனிக்கல், கத்தாழை ஆகியவற்றின் அடிப்படையைப் பெரியவர் கூறுவது, நெற் பயிரைப் பூச்சிக்கடியிலிருந்து காக்க வேம்பு, நிலவேம்பு, ஆடாதோடா, எருக்கலை, கோமியம் கலந்து தயாரிக்கும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தல், வேளாண்மை முறை, உழவு, தொழி உழவு, பருத்திக்கொட்டை ஆட்டுதல், புண்ணாக்கைத் தின்றுன்பார்த்து வாங்குதல், கிலோ கணக்கில் விலை கேட்காமல் 5 ரூபாக்கு தக்காளி, கத்திரிக்காய் கேட்பது, குளத்துத் தொட்டியில் ஆண்களின் பொதுக்குளியல், பெண்களின் ஒப்பாரி ஆகியவை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விளக்குத்தூண் குலதெய்வமாக வணங்கப்படுவது, ஐயன், அய்யனார், ஐய்யப்பன் மூவரும் ஒன்றே என்ற கருத்து, முருக வழிபாடு என வைதீகம் வந்து சேரமுடியாத சமயம், வழிபாடு குறித்த உரையாடல் அறிவார்த்தமானது.

மக்களின் வரவேற்பைப் பெற்ற உரையாடல்கள் சில தனித்துப் பேசப்பட வேண்டும். (இவை குறித்து நிறையவே எழுதியுள்ளதால் குறைத்துக் கொள்கிறேன்).

மரபான சம்சாரியான மாயாண்டி உரம், பூச்சி மருந்துக்கடைக்காரரிடம் விதையில்லா விதை (கொட்டையில்லா ஆண்பிள்ளை – seed less) குறித்துப் பேசும் உரையாடல், விவசாய நிலத்தை விலைக்குக் கேட்ட தரகரிடம் பேசும் உரையாடல், நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசும் உரையாடல், அறிவு வளராததால் பெரியவரை ஏமாற்ற முடியவில்லை என்று பெரியவரைக் கூறும் வசனம் எது அறிவு என்று செவுட்டில் அறைந்து கூறுகிறது.

படத்தில் நெடுக பாத்திரங்களே நகைச்சுவையை ஏற்று நடித்துள்ளனர்..

* போலிஸ்காரருக்கும், மின் துறை வயர்மேனுக்கும் ஆட்டோக்காரருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவது.
* வழுக்கைத் தலையில் முடி முளைக்கச் செய்ய எடுக்கும் பெருமுயற்சி.
* உயரம் குறைவான பெண்ணின் நகைச்சுவை.

இப்படத்தில் நீதிபதியின் கரிசணையான அணுகுமுறையைப் பொதுமைப்படுத்திப்பார்க்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.

முருகபக்தராக வரும் விஜய் சேதுபதி பாத்திரம் ஒரு எதிர் உரையாடல்தான், உண்மையான மனப்பிறழ்வும், சூதும், வாதும் யாருக்கு என்ற கேள்வியை எழுப்புகிறது. யோகிபாபுவும் யானையும் விவசாயக் கொள்கையைப் பகடி செய்கின்றன. நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு வார்த்தை, ஒரு காட்சி கூட உபரி என்றில்லாமல் வசனம் கையாளப்பட்டிருப்பதும், வண்டுருட்டிப்பழத்தைக்கூட (மலத்தை உருட்டும் வண்டு) ஒளிப்பதிவு செய்த இயக்குநர் மணிகண்டனுக்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகள். பூச்சிக்கண்ணு ஏட்டுவாக நடித்திருக்கும் அன்புத்தோழர், செயற்பாட்டாளர் குன்னாங்குன்னாங்குர் செல்வம் Selvam Maya அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

தோழமையுடன்
பாவெல்பாரதி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *