நூல்: காடர் சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: பிரசாந்த் வே
பதிப்பகம்: எதிர் வெளியீடு
“காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள், காட்டுப் பையன் மாதிரி ஏண்டா கத்துற, சரியான காட்டான்..
ஆளப் பாரு காட்டுவாசி மாதிரி இருக்கான், காட்டுல இருக்க வேண்டியவன் எல்லாம் ஊருக்குள்ள திரியுறானுங்க” இப்படிப்பட்ட வார்த்தைகளை நகர்ப்புறத்தில், கிராமப்புறத்தில் வாழக்கூடிய எளிய மனிதர்கள் தொடங்கி நாகரீகம் பேசக்கூடியவகள் வரை அன்றாடும் பயன்படுத்தும் வார்த்தைகளாக கட்டமைத்து வைத்தது யார் இங்கு.?
காட்டிலே வசிக்கக்கூடிய மனிதர்களையும் மிருகங்களையும் ஒன்றாக்கி, பண்பாடு அற்றவர்களாகவும் நாகரீகம் தெரியாதவர்களாகவும் ஒவ்வாத பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும், சமவெளி மனிதர்களின் மனங்களிலிருந்து முற்றாக ஒதுக்கி பார்க்கும் ஒரு கீழ்நிலை தோற்றத்தை அவர்களின்பால் உருவாக்கி மனித மனங்களை கட்டமைத்து, இங்கே அதற்கான விதையினை விதைத்துச் சென்றவர்கள் எவர்..? அறிவார்ந்த தளத்தில் பேசக்கூடிய பலரும் கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை அறிந்தும் அறியாமலும், நன்கு தெரிந்தே அச்சு ஊடகங்கள் காட்சி ஊடகங்கள் என அனைத்தும் ஒன்றுபோல் பயன்படுத்தக்கூடிய எண்ணத்தை ஆழ் மனதிற்குள் புதைத்தும் விதைத்தும் சென்றது எவரின் எண்ணங்கள்..? எவரின் கைகள்..?
காடுகளில் பல குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் அன்றைய உணவுத் தேவைக்காக மட்டுமே மிருகங்களை வேட்டையாடியும், துரத்தி வரும் அல்லது பாய்ந்துவரும் விலங்குகளை அம்பு எய்தி கொன்று விடாமல் அவைகளை மயக்கமுறச் செய்யவும் காயமுறச் செய்யவுமான உத்திகளை அறிந்த ஏகலைவனை;
உழு குடி மக்களின் பயன்பாட்டிற்கு உதவிய திமில் வளர்ந்த காளைகளையும், பால் கொடுக்கும் பசுக்களையும் கொலை செய்து, கொழுப்பொழுகும் மாமிசத்தை உண்டு வளர்ந்த துரோணாச்சாரியாரை மானசீக குருவாக வரித்து வில்வித்தை பயின்றதாக கபடமாக சித்தரித்து, தட்சணையாக கட்டைவிரலை தானே மனமுவந்து வெட்டிக் கொடுத்தான் என்கிற பொய்களைப் புனைவுகளாக மாற்றிய காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது காடுவாழ் மனிதர்கள் மீதான வஞ்சனை மிகுந்த தாக்குதல் நகர்புற மனிதர்களிடமிருந்து..
தொடரும் வஞ்சகத்தின் எதிர்ப்புக்குரலாகவே.. எந்த நாளும் காடுகளில் இயற்கையோடும் இயைந்தும் மிருகங்களோடும் பறவைகளோடும்
என வாழ்க்கையை வாழ்ந்து வரும் வில்வித்தை நன்கு தெரிந்து ஏகலைவன் அல்லவா துரோணாச்சாரியாருக்கு வில்வித்தைப் பயிற்சியளித்திருக்க முடியும் என்கிற நிஜமான ஏகலைவனின் எதிர்ப்புக் குரலாக இங்கே பிரசாந்த்.வே எழுதி இருக்கக்கூடிய காடர் என்கிற சிறுகதைகளின் தொகுப்பு..
கதைகளில் வரும் அத்தனையும் நம் கண்ணெதிரே காணும் நிஜங்கள். பார்த்த மனிதர்களை, மக்களை, அவர்களின் பெரும் துயரங்களை புனைவுகளாக மாற்றி
எளிய மொழியில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். காட்டுப்பூக்கள் வாசனையும், காட்டு மனிதர்களின் நேசத்தையும், காட்டு விலங்குகளின் பிரியத்தையும், காட்டு மரங்களின்.. செடிகளின்.. கொடிகளின் மருத்துவத்தையும் அறியாத நாம் இந்த நூலினை வாசித்திடும்போது இவை அனைத்தையும் நம்மால் உணர முடியும்.
காடுகளை பாதுகாக்கிறோம்.. காட்டு மரங்களை பாதுகாக்கிறோம்.. காட்டில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கிறோம் என அறிவித்து,
காடுகளை அழித்தும் காட்டுயிர்களை நசுக்கியும் விலை உயர்ந்த காட்டு மரங்களை வெட்டியும் கொள்ளை லாபம் பார்ப்பதோடு நில்லாமல், அரசின் நிதியையும் வாரிச்சுருட்டுகிறார்கள் அரசு நிர்வாகமும், எஜமானர்களான தனியார் பெரு முதலாளிகளும்..
காடெல்லாம் தமது வீடாக நினைத்து வாழ்ந்திடும் மனிதர்களைவிட காட்டினை வன உயிரினங்களை பாதுகாப்பதில் நகரதுக் காக்கிச் சட்டைக்கும் அரசு நிர்வாகத்திற்கு அப்படி என்ன திறமையும் வலிமையும் தந்திரமும் இருந்துவிடப் போகிறது.?
அவர்களின் எண்ணமும் நோக்கமுமெல்லாம் காட்டில் வாழும் மனிதர்களை அப்புறப்படுத்திவிட்டு காடுகளை பணக்காரர்கள் வந்து போகும், வந்து தங்கும் நட்சத்திர விடுதிகளாகவும் மாற்றி பணம் பார்ப்பதே.
காடுகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடிகள் அரசு நிர்வாகத்தின் நயவஞ்சக வேண்டுகோளின் வழியாக, வனப் பாதுகாப்பின் பெயரால், புலிகள் பாதுகாப்பு என்கிற பதாகையால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு, காடுகளின் உள்ளே இருந்து வெளிப்புறம் நோக்கி ஒவ்வொரு இடமாக மாற்றப்பட்டு.. உந்தித் தள்ளப்பட்டு, வாழும் இடத்திற்கான குடி மனை பட்டாவும் கிடைக்காத நெருக்கடியில் அமைதியான எதிர்ப்பு உணர்வு கிளம்பிடும் பொழுது.. அதற்காகவே காத்திருந்த அரசு திட்டமிட்டு அவர்களின் குடிசைகளை தீக்கிரையாக்கி ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்க படுகிறார்கள்.. அதே நேரத்தில் துரத்தியடிக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்விடங்கள் அனைத்தும் பெரும் பணக்காரர்களின் வசதி மிக்க வாசஸ்தலங்களாக மாற்றப்படுகிறது என்பதை “கானகம்”, “காடர்குடி”, “வனவாசி” ஆகிய கதைகளில்
அம்மக்களின் இயலாமை, வஞ்சகமாய் ஏமாற்றப்பட்ட உணர்விலிருந்து, அம்மக்களை கை கொடுத்து பாதுகாக்க எவருமற்ற வெளியிலிருந்து வலிகொண்ட துன்பத்தோடு பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.
காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி எப்படியெல்லாம் முற்றிலுமாக மறுக்கப்பட்டு வருகிறது என்பதையும்.. எளிய மக்களின் உழைப்பு தங்க வேட்டை என்கிற பெயரால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதையும் “பணயம்”, “காட்டுப்பள்ளி” “தொடர்பு எல்லைக்கு அப்பால்’ கதைகளில்
சொல்லியிருக்கிறார் பிரசாந்த்.
யானையின் சுதந்திரமான பாதைகள் முடக்கப்பட்டு சமவெளி மனிதர்களால்ஆக்கிரமிப்பு செய்யப்படும் பொழுது ஊருக்குள் யானை வருவது இயல்பாகிறது. அப்படி வரக்கூடிய யானைகளின் மீது வனத்துறையினரின் மனிதாபிமானமற்ற தாக்குதல் சமவெளி மக்களின் அத்துமீறல்.. துன்புறுத்தல்..
அப்படி வரக்கூடிய யானையை அடக்கிட கொம்பன் யானையை பயிற்றுவிக்கப்படும் இரக்கமற்ற செயல்..
வலு மிகுந்த யானைதனை சிறிய அங்குசம் ஒன்றால் அடங்கிப் போக தயார்படுத்தும் சின்ன புத்தி எண்ணம் கொண்ட சமவெளி மனிதனின் செயல்..
இப்படியான நிஜங்களே கதைகளாக்கப்பட்டிருக்கும் “காட்டிலே யானைகள் இருந்தன”, “வலசை தொலைத்த யானை” என்கிற கதைகளில் ஆசிரியரால்.
பவானி ஆறும் காடுமாக இருக்கும் பகுதியில் மீன் பிடித்து வாழும் மக்கள் “ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடாதா” என ஏங்கிக் கொண்டும்; விவசாயம் செய்து வாழ்வினை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் “ஆற்றில் தண்ணீர் எப்போது குறையும்” எனப் பார்த்துக் கொண்டும்; இயற்கையின் பிடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இரு வேறு பகுதி மக்களின் வாழ்வுதனை கொண்டு வந்து காட்டியிருப்பார் நூலாசிரியர் “அணிநிழற்காடு” என்கிற சிறுகதையில்..
“காட்டு மாதா கி ஜெ” கதையில், காட்டு விலங்குகளை வைத்து இன்றைய அரசியலை.. இருள் சூழ்ந்து இருக்கும் சூழலை.. அரசு அதிகாரத்தை.. மக்களுக்கு விரோதமான அதன் வஞ்சகத்தை..அப்பாவிகள் படும் பெரும் துன்பங்களை பகடியாக சொல்லியிருப்பார்..
“காடர்” வாசித்து முடித்தவுடன் நிச்சயம் பூர்வகுடிகளின் வாழ்நிலையின் மேல் உங்களுக்கு அக்கறை ஏற்படும்.. வனப்பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு, மிருகங்கள் பாதுகாப்பு என்கிற பெயரில் அரசு அனுதினமும் நடத்திவரும் அம்மக்களின் மீதான அத்துமீறல்கள் அனைத்தையும் நீங்களும் உணர முடியும்..
உணரும்போது அந்த மக்களை பாதுகாத்து நிற்க வேண்டும் என்கிற எண்ணமும் வரும்.. அப்படி வரும்பொழுது அந்த மக்கள் குறித்தான நம் மனதிற்குள் கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய அத்தனையும் சுக்குநூறாக உடைந்து போகும்..
அதுவே “காடர்” வெற்றியாகும்.
அன்பும் வாழ்த்துக்களும் பிரசாந்த் வே.
நல்ல முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கும் எதிர் வெளியீட்டு நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.!
கருப்பு அன்பரசன்