Kalvi Or Arasiyal Book By Vasanthi Devi Bookreview By Saguvarathan நூல் அறிமுகம்: வே.வசந்தி தேவியின் கல்வி ஓர் அரசியல் - சகுவரதன்




நூலின் பெயர் :கல்வி ஓர் அரசியல்
ஆசிரியர் : வே.வசந்தி தேவி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 220/
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

மனிதனை
மனிதன்
விரும்பும்
போட்டி உலகுக்கு
குழந்தைகள்
பலியிடப்பட்ட வரலாறு.

வே.வசந்திதேவி.

“இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், வன்முறைகள் இவற்றிற்கெல்லாம் மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியும் என்றால் அது கல்வியிலிருந்து தான் பிறக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்று நிமிர்ந்து பேசும் வசந்திதேவியின் வார்த்தைகளில் சக்தியும் சத்தியமும் ஒருங்கிணைந்து மிளிர்கின்றன.

கல்வி என அவர் குறிப்பிடுவது வகுப்பறைக்குள் கல்வி, வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை வெளியில் கிடைக்கும் கல்வி இரண்டையும் சேர்த்து தான்.

பேராசிரியர் ச. மாடசாமி அவர்களின் மதிப்புமிகு முன்னுரையில் இருந்து எடுத்தாளப்பட்ட வரிகளிலிருந்து புத்தகத்தின் வாசிப்பு பகிர்வை தொடங்குகின்றேன்.

1938 ல் பிறந்த பேராசிரியர் வே. வசந்தி தேவி திண்டுக்கல்லை சேர்ந்தவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பிஎச்டி பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1996 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் மனித உரிமை கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வி மற்றும் மகளிர் சார்ந்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். கணக்கற்ற உரைகளையும் நிகழ்த்தியுள்ள பேராசிரியர் வே. வசந்திதேவி பல்வேறு இதழ்களில் எழுதியுள்ள கல்வி பற்றிய கட்டுரைகளின் தொகுப்புதான் “கல்வி ஓர் அரசியல்” என்னும் புத்தகம்.

பாரதி புத்தகாலயம் இதை விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பாக கொண்டுவந்துள்ளது.
வலுவான சிந்தனைகளுக்கு பொருத்தமான மேடை பாரதி புத்தகாலயம் . பல்வேறு அரிய நூல்களை பதிப்பித்து ஏராளமான வாசகர்களையும் கல்வியாளர்களையும் அடையச் செய்ததில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறது.

பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்களின் முதல்பதிப்பு மற்றும் இரண்டாம் பதிப்பின் முன்னுரைகள் அப்படியே இப்புத்தகத்தில் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இருபத்தி ஒன்பது கட்டுரைகள். அனைத்தும் பல்வேறு இதழ்களில் வெளி வந்தவை. நிறைய விமர்சனங்களையும் விவாதங்களையும் பெற்றவை. இக்கட்டுரைகளின் ஒருசேர அமைக்கப்பட்ட இத்தொகுப்பு கல்வியல் ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் இன்றைய கல்வி நிலை குறித்து கவலைப் படுபவர்களுக்கும் ஒரு தீர்வாக இப்புத்தகம் அமையக்கூடும்.

“கல்வி ;யாரால், யாருக்காக?” என்னும் கட்டுரையில் சமுதாயத்தின் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒரு வகைப்பட்ட பள்ளியை , வெவ்வேறு பொருளாதார நிலைகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய கல்வி அளிக்கும் பல்வழி கல்வி வசதிகளை அரசு வடிவமைத்து அனுமதிக்கிறது என்றும் இன்றைய கல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாய சாதனமாக இல்லாமல் கொடுக்கும் விலைக்கு ஏற்ப கிடைக்கும் கடை சரக்காக மாறிவிட்டிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்

இன்றைய வணிக உலகில் பள்ளிகளும் உயர் கல்வி நிலையங்களும் அறிவு உற்பத்தி நிலையங்களாகவும்,மாணவர்கள் நுகர்வோர்களாகவும், உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் சந்திக்கும் இடம் சந்தையாகவும் உருமாறி ஜனநாயக தன்மையற்ற ஓர் அமைப்பாக மாறிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

உண்மைதானே…!!! அச்சுறுத்தும் தேர்வுகளும் பல பள்ளிகளில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளும் குழந்தைகளிடம் பள்ளி பற்றிய பயத்தை உருவாக்கி தன்னம்பிக்கையை சிதைத்து விடுவதைஅன்றாடம் நாம் காண்கிற துயரச் செய்தி அல்லவா இருக்கிறது . பல தற்கொலைகள், இடைநிற்றல்கள் இதற்கு பெரும் சாட்சிகளாக அல்லவா இருக்கிறது.

“சக்தி பிறக்கும் கல்வி” பற்றிய கட்டுரையில் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய இயல்பான ஆய்வுத் தன்மையை இன்றைய கல்வி அமைப்பு சிதைத்து விட்டிருப்பதை மிக ஆழமாக விவரிக்கிறது.

“காற்று எங்கும் பரவி உள்ளது” என்பதை “இறைவன் எங்கும் இருக்கிறான்” என்பதோடு ஒப்பிட்டு கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பதிலாக பாடம் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறார்.

முடிவு பெற்றுவிட்ட உண்மைகள், சான்றுகள், தேவையற்ற நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாக அறிவியல் கற்றுத்தரப்படுகிறது.

சூத்திரங்களாக, மந்திரங்களாக அது ஓதப்படுகிறது. தேடி, பரிசோதித்து, சான்றுகளின் அடிப்படையில் புரிந்துகொண்ட உண்மைகளே குழந்தைகள் அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர்களாக ஆக்க முடியும் என்பதை ஒரு உதாரணம் கொண்டு இக்கட்டுரையை கொண்டு செல்கிறார்.

ஒரு சிற்றூர் . அந்த ஊரில் திடீர் பீதி கிளம்புகிறது . பச்சை இலைகளில் எல்லாம் படமெடுத்த பாம்பின் வெளிறிய வடிவம் தென்படுகிறது என்பதுதான் . அது நாக தேவதையின் சாபம். ஒரு ஆண் பாம்பின் மீது லாரி ஒன்று ஏறி கொன்றுவிட்டது. பெண் பாம்பு சாபமிட்டதால் பச்சை இலைகளில் பாம்பின் வடிவம் தோன்றியுள்ளது என்பது ஒரு வதந்தியாக பரவிக் கொண்டிருந்த நேரம்.

இந்த நேரத்தில் சோனி என்கிற ஒரு சிறுமி அவளுடைய வகுப்பு தோழிகளுடன் சந்தித்து ஒரு சிறு குண்டூசி துணையோடு அந்த இலைகளை ஆய்வுசெய்ய, அதற்கு காரணம் ஒரு புழு என்பதை கண்டறிந்து ஊருக்குள் சொல்கிறார். இந்த கண்டுபிடிப்பு பணியை பள்ளியும் ஊரும் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியது. ஆனால் அதே ஊரில் இருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஏன் இந்த ஆய்வு மனப்பான்மை ஏற்படவில்லை என்பதை வினாவாக முன்வைக்கிறார் வசந்தி தேவி அவர்கள்.

அடுத்ததாக காந்தியக் கல்வி பற்றி கூறுகிறார். காந்தியக் கல்வி என்பது உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒருசேர இணைந்த கல்வி ; உழைப்பு உலகையும் அறிவு உலகையும் ஒன்றிணைக்கும் கல்வி; மூவகைப் பட்ட திறமைகளை, சிந்தனை, திறன், உணர்வு, செழுமை, உழைப்புத் திறன் அனைத்தையும் அளிக்கும் வளர்ச்சிக் கல்விதான் காந்திய வழிக்கல்வி என்று பேராசிரியர் வசந்திதேவி கூறுகிறார்.

ஆனால் வாழ்வாதாரமான உழைப்பிலிருந்து இந்தியக் கல்வி முற்றிலும் அன்னியப்பட்டு கிடக்கிறது என்று பதிவு செய்கிறார்.

கல்வி நிலையங்களில் கயமை இருள் ஒரு முக்கியமான கட்டுரை. குழந்தைகளின் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த ஆய்வுக் கட்டுரை இது . எல்லா கோணங்களிலும் இந்த கட்டுரை அணுகுகிறது.

தொடரும் பாலியல் துயரச் சம்பவங்கள், பள்ளிகளின் அவலநிலை, குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், குழந்தைகளின் இயற்கையான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்தி பாய காத்திருக்கும் வக்கிரங்கள், பள்ளிகளில் இங்கிலீஷ் மீடியங்களையும் தேர்ச்சி விகிதம் களையும் கண்டு பெருமிதம் கொண்டு குழந்தைகளை காவு கொடுக்கும் பெற்றோர், பள்ளிகளின் மேல் எந்த கண்காணிப்பும் செலுத்தாத கல்வித்துறை, குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம், என பன்முகத்தையும் உற்றுநோக்கி அதன் காரண காரியங்களை அலசி ஆய்கிறது இக்கட்டுரை. இக் கட்டுரையை வாசிக்க இன்னும் இந்த அவலம் தொடர்கிறதே என்கிற வேதனை நெஞ்சைச் சுடுகிறது.

“தவிப்பில் இருந்து திறமைக்கு” என்னும் கட்டுரையில் பேராசிரியர் வேறுவிதத்தில் குழந்தைகளின் கல்வியை அணுகுகிறார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் கூட தங்களின் தாய்மொழியில் சிறு பத்தி கூட வாசிக்க இயலாதவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்தான கட்டுரை தான் இது.

குழந்தைகளின் வாசிப்புத் தன்மை பெறுவதற்கு முதல் தேவை, ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான தனிப்பட்ட அணுகுமுறையும் கவனிப்பும் தான். நடுத்தரக் குடும்பங்களில் இத்தகைய அணுகுமுறை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்கு இது கை கூடுவதில்லை.

மேலும் கற்றலின் கசப்பை அகற்றி இனிமையான அனுபவமாகும் கல்வி உத்திகள் கடைபிடிக்கப்படவேண்டும். படங்களும் பாடல்களும் விளையாட்டுகளும் சிறு குழுக்களாக பிரிந்து கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் பங்கும், கதை வாசிப்பும் குழந்தைகளை மேலும் கற்கத் தூண்டும் இனிய சூழல் ஆகும்
என் வலியுறுத்துகிறார்.

இந்நாட்டின் கடைசி விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் கனவு காணும் தெம்பையும் திறமையையும் நம்பிக்கையளிக்கும் புனித பொறுப்பை நாம் அனைவரும் ஏற்க வேண்டுமென உறுதிபட கூறிகிறார்.

மனித உரிமை கல்வியின் அவசியம் பற்றி பாகுபாடு பாடலாமா என்கிற தலைப்பில் கூறுகிறார்

இன்றைய கல்வியின் மாபெரும் குறை சுற்றிலுமுள்ள உலகில் இருந்து மாணவர்களை அன்னிய படுத்துகிறது என்பதாகும்.

இன்றைய கல்வி மாணவர்களை பிரிக்கிறது. பாகுபடுத்துகிறது. துண்டாடுகிறது . அறிவுத் தேடலில் மோசமாக தோல்வி அடைய வைக்கிறது. அருகிலிருக்கும் மாணவனது சமுதாயத்தை காண விடாத கடிவாளமாய் இழுத்து பிடிக்கிறது . மாணவனுக்கு தன் சமுதாயத்தைப் பற்றிய கொடிய உண்மைகள், அதன் உரிமை மறுப்புகள், ஏழ்மை, இதயமற்ற சுரண்டல்கள், இழப்புகள், பாகுபாடுகள் ஆகியவற்றுடன் எந்த உறவுகளும் இல்லாமல் தனித்தே கிடக்கிறான்.

மனித உரிமைகளுக்கான கல்வி திட்டம் தொடக்கக் கல்வியில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் பேராசிரியரின் கருத்து.

அது எவ்வாறு அமைய வேண்டும் அந்தக் கல்வி எந்த குழந்தைகளுக்கு கற்பிப்பது ? போன்ற விவரங்களுடன் முதன் முதலில் தமிழ் நாட்டில் அமல்படுத்தியமை, அதன் விளைவாக எழுந்த தாக்கம், அதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த விதம் போன்றவற்றையும் அலசி ஆராய்கிறது.

இதயமற்ற உலகை மாற்றுவதே மனித உரிமை கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் .அது உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட வகுப்பறையில் தான் தொடங்க முடியும் என்பதே பேராசிரியரின் நம்பிக்கை.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. பயிற்று மொழி தமிழ் என்னும் கட்டுரையில், “தாய்மொழி வழிக் கல்வியை இயற்கையானது என்பது நவீன அறிவின் முடிவு .கற்கும் மனதின் ஆளுமையை விரிக்க துணை நிற்பது தாய்மொழிவழிக் கல்வியே. கல்வியாளர்கள் இடையே உலகளவில் இன்று பெருமளவிற்கு கருத்தொற்றுமை கொண்ட முடிவு இது”. என்கிறார் பேராசிரியர் வே. வசந்தி தேவி.

தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தான் நடைமுறை சார்ந்த வெற்றியைத் தரும் என்னும் எண்ணம் மத்தியத்தர பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஏழைப் பெண்களின் மனங்களில் கூட ஆழமாக பதிந்து இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு .?இந்த எண்ணங்களை அவர் மனங்களில் விதைத்து யார் ?
போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாய் கட்டுரையை நகர்த்துகிறார்.

ஆங்கிலம் இன்று முக்கியமான வர்க்க குறியீடாக மாறி இருக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நல்ல அறிவுத்திறன் பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் பேச இயலாமல் பெரும் தவிப்பிற்கும் ஏக்கத்திற்கும் தள்ளப் பட்டிருக்கின்றனர். தாழ்வு மனப்பான்மை இன்றைய இளைஞர் பெரும்பாலோரை தின்று கொண்டிருக்கிறது. ஆங்கிலம் அவர்களது கனவு, ஏக்கம் .

கிராமத்திலிருந்து வந்த முதல் தலைமுறை, தலித்,ஆதிதிராவிடர் மற்றும் பிறசாதிகளில் பிறந்த வசதியற்றோர் இவர்கள் அனைவருமே இதில் அடங்குவர் என வேதனைப்படுகிறார் வசந்திதேவி அவர்கள்.

இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் இந்த தாக்கம் இருப்பதாக கருதக்கூடாது. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இன்று உலக அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதன் ஆதிக்க வேட்டைக்கு உலகின் பல மொழிகள் இன்று பலியாகிவிட்டன. கொலைகார மொழி என்று கூட உலக நாடுகள் அழைக்கத் தொடங்கி விட்டன.
என்கிற பரபரப்பான தகவல்களும் இதில் அடக்கம்.

சமீபகாலமாக தொடர்ந்து பள்ளிகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், பல அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வுகள், விசாரணைகள், மூலம் மக்களின் பொது விசாரணையாக அரங்கேறின.

அந்த விசாரணையில் நெஞ்சை உருக்கும் , முதுகுத்தண்டை சில்லிட உறையச் செய்யும் பல தகவல்கள் இருந்தன. குழந்தைகளுக்கு பள்ளியில் அளிக்கப்படும் தண்டனைகளும் சித்திரவதைகளும் ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற அழுத்தமான கோரிக்கை வைக்கும் அளவிற்கு பள்ளிகளின் போக்கு இருந்துள்ளது.அது இன்னமும் தொடர்கிறது.

தண்டனை என்னும் பெயரில் மாணவர்களுக்கு நடக்கும் குரூரங்கள் ஏராளம். ஆசிரியரின் அன்றைய ஆத்திரத்தின் கொதிநிலை, கையில் கிடைக்கும் ஆயுதம், மாணவனின் பலவீனத்தை பற்றிய கணிப்பு , பள்ளியில் வெளியில் நிலவும் கேட்பாரற்ற சூழ்நிலை என பல காரணங்கள் தண்டனையின் தன்மையை நிர்ணயிக்கின்றன.

நாவால் சுடுதல் அனைத்துப் பள்ளிகளிலும் நடக்கும் கைவந்த கலை. அவமானப்படுத்தப்படும் மாணவர்கள் ஏராளம். இதனால் இடைநின்ற மாணவர்களும் கணிசம்.

மேல்தட்டு மற்றும் மத்தியதர குழந்தைகளுக்கும் இதே நிலைமைதான் . செல்ல குழந்தைகளாக அவதரிக்கும் இவர்களுக்கும் பல தண்டனைகளும் உண்டு. வன்முறைகளுக்கும் ஆட்படுவதுண்டு . காரணம் பெற்றோர்களின் வானுயர கனவுகளை நிஜமாக்கும் கடவுள்கள் இவர்கள்.மார்க், ரேங்க் என இடைவிடாத போட்டிகளில் இவர்கள் வென்றாகவேண்டுமே.டீயூஷன் கோச்சிங் கிளாஸ் என நேரமின்றி பறத்தல் கூட தண்டனைதானே!!

தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர் பேரவைகள் பற்றியும் மாணவர்களின் பொது விஷயங்களில் அக்கறை , சமுதாய அரசியல் உணர்வுகளோடு சேவையில்
ஈடுபடுதல்,சித்தாந்தங்கள் அறிதல் போன்றவற்றில் மாணவர்களின் அறியாமை மற்றும் அதற்கு காரணமான தாராளமைய கொள்கைகள் பற்றியும் ” மாணவர் ஜனநாயகம் ” என்னும் கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்.

நிதியின்றி நலியும் இந்திய கல்வி பற்றியும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பற்றியும் தலித் கல்வி பற்றியும் கடைபிடிக்கவேண்டிய பொதுப்பள்ளி நடைமுறைகள் குறித்தும் பல்கலைக்கழகங்களை காப்பது குறித்தும் மிக விரிவான அளவில் கட்டுரைகள் வாயிலாக ஆய்ந்து எழுதி இருக்கிறார்.

நீட் தேர்வு குறித்தும் பல தகவல்களை அருமையாக கூறி விளக்கி இருக்கிறார்.

“அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதைப்போல அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமுடைய கல்வியை இலவசமாக தரும் ஜனநாயக கல்விக் கொள்கை இன்றேனும் உருவாக வேண்டும்.”

பேராசிரியரின்வேண்டுகோளில் நாமும் பங்குகொள்வோம்.

தமிழக மக்கள் அல்ல உலக மக்களே உணரக் கூடிய அளவில் மிக தரமான ஆலோசனைகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளிக்கொணர்ந்து எல்லோர் கைகளிலும் சேர்த்திருக்கிற பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துக்கள் கூறி முடிக்கிறேன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *