நிலமற்ற பொழுதின் மீது பவனிவரும் காலத்தை
வேடிக்கை பார்க்க வந்தவனையே
பூனை போல்
கவ்விச் செல்கிறது அது
இறுகிய கொடிப் பின்னலுக்குள்
முகம் பிணைந்திருக்கும்
முதிய சருகு ஒன்றை
கண்முன்பே கவ்விச்செல்கிறது காற்று
வீதி வழியே போகும்போது
வீட்டுக்குள் மறந்து வீசப்படும்
அன்பான சொல்லொன்றை
அந்தரங்கமாக கவ்விப் போகிறது மனது
நட்டநடு இராத்திரியில்
ஒரு பூப்போல இரகசியமாக
உதிரும்
ஒரு அந்திம நட்சத்திரத்தை
கணத்தில் கவ்விக்
கபளீகரிக்கிறது
பால் வீதி
இரவைக் கொஞ்சம் சபிக்கலாமென்று
சன்னல் கதவைத் திறந்தவளை
சலனமற்றுக் கவ்விப் போகிறது பசி
ஒன்றை ஒன்று கவ்விப் போய்
உலகில் கபளீகரம் செய்வது ஏன்?
கடைசியில் ஏன் மட்டும் எஞ்சியிருக்க
அதையும் சுவடில்லாமல் கவ்விப் போவதற்காக இரகசியமாக
மௌனத்தில் ஒளிந்திருக்கிறார்
மகத்தான கடவுள்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

