இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விப் பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார் அம்பேத்கர். அவர்களிடையே உயர்தரக் கல்வியின் முன்னேற்றத்தைக் கவனித்து, அம்பேத்கர் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார். பொதுக் கல்வி, சட்டக்கல்வித் துறைகளில் திருப்திகரமான முன்னேற்றம்; விஞ்ஞானம், பொறியியற் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது. பல்கலைக் கழகச் சீர்திருத்தம் பற்றி ஆராய்வதற்காக அரசு அமைத்த குழுவின் வினாப் பட்டியலுக்கு, விடையளிக்கத் தகுந்தவை என்று தாம் கருதியவற்றுக்கு விடைகளும், எழுத்து மூலமான சாட்சியமும் அளிக்கையில் தர்க்கரீதியான பல வாதங்களை முன் வைக்கிறார்.