கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…!   – சுபொஅ.

கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…! – சுபொஅ.

“உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கேடானது என்ற [மூட] நம்பிக்கை உள்ளது .இந்த தவறான நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாமதப் படுத்தப்படுகிறது .ஆனால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது என்கிறது மருத்துவம். உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் பசியால் வாடுகின்றன. 15 சதவீத குழந்தைகளுக்கே பிறந்த ஒரு மணி நேரத்தில் பாலூட்டப்படுகின்றன .”
இந்த வரிகளைப் படித்து கொஞ்ச நேரம் புத்தகத்தையே மூடிவைத்து விட்டேன் . மூடநம்பிக்கையில் புழுத்த தேசத்தை எதைக் கொண்டு குணமாக்கப் போகிறோம் ?
“ நிச்சயமற்ற பெருமை” எனும் நூல் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ,ஜீன் டிரீஸ் ஆகியோரால் எழுதப்பட்டது .இந்நூலில் இரு அத்தியாயங்கள் மட்டும் பேரா.பொன்னுராஜால் தமிழாக்கம் செய்யப்பட்டு ,” கல்வியும் சுகாதாரமும் ; கொள்கை ,பிரச்சனை ,தீர்வுகள்”[96 பக்கங்கள்] எனும் பெயரால் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன .
மருத்துவம் அரசு துறையாகவே இருக்க வேண்டும் .எல்லோருக்கும் அரசு இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என இந்நூல் வலுவாக வாதிடுகிறது . மருத்துவக் காப்பீடு எவ்வளவு குறைபாடுடையது ; சாதாரண மக்களுக்கு வெகு தொலைவில் மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது என இந்நூல் சொல்கிறது.
ப. சிதம்பரம் பார்வை இந்தியாவில் ...
ஓரிடத்தில் இந்நூல் குறிப்பிடுகிறது ,”தனியார் மருத்துவக் காப்பீடு ,மருத்துவ மனைகளில் சேர்ந்து பெறும் சிகிட்சையை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது .முந்தடுப்பு மருத்துவம் மற்றும் மருத்துவ மனையில் சேராமல் பெறுகிற மருத்துவம் ஆகியவற்றை தனியார் காப்பீட்டை அடிப்பட்டையாகக் கொண்ட மருத்துவ சேவை முறை கணக்கில் கொள்வதில்லை .இத்தகைய பிரச்சனை தனியார் காப்பீடு மருத்துவத்தில் தவிர்க்க இயலாது .இந்தியாவில் பெரும் பகுதி தொற்று நோயாக உள்ள சூழலில் இத்தகையப் பிரச்சனைகள் பற்றி சொல்லவே வேண்டாம் .”
கடைசி வரியை கொரான அனுபவம் இதனை மேலும் உறுதி செய்கிறது.
அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு எப்படி அசமத்துவமாக உள்ளது ; இருபது சதம் மக்களை நிராதரவாய் விட்டிருக்கிறது என்பதை இந்நூல் சுட்டி இருக்கிறது. “இந்தியாவின் இன்றைய மருத்துவக் கொள்கை ஒரு குழப்ப நிலையில் உள்ளது . ஒரு புறம் தேசிய கிராமப்புற மருத்துவ சேவை [என் ஆர் ஹெச் எம் ] மற்றும் மரபு ரீதியான மருந்துகளை [ ஜென்ரிக் ட்ரக்ஸ்] பொது செலவில் வழங்குவதற்கான முயற்சிகள் என்று மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன; மறுபுறம் தனியார் மருத்துவக் காப்பீட்டை மேலும் மேலும் சார்ந்திருக்கும் திசைவழியில் இந்திய மருத்துவம் தொடர்ந்து நகர்கிறது.
மொத்தத்தில் எதிர்காலத்தில் இந்திய மருத்துவ வசதியின் அடிப்படையாக எது இருக்க வேண்டும் என்பதில் தெளிவேதும் இல்லை. அதேசமயம் சீனா மட்டுமல்லாது பிரேசில் ,மெல்சிகோ ,தாய்லந்து ,வியட்நாம் உள்ளிட்ட பல வளரும் நாடுகள் தங்கள் மக்களுக்கு அரசு செலவில் பொதுவசதி செய்து தருவதில் திடமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன .அந்நாடுகள் சீராக இயங்குகிற பொது மருத்துவ சேவை வழங்குவதிலும்,அனைவருக்கும் அரசு செலவில் பொது மருத்துவ வசதி வழங்குவதிலும் தெளிவான உறுதிப்பாடு கொண்டுள்ளன .இந்தியா இன்னும் தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான பொதுக் கொள்கையில் இது ஓர் அம்சம்.”
புள்ளிவிவரங்களை வாசிப்பு இலகுவாவதற்காக இங்கு தவிர்த்திருக்கிறேன்.
சத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம் ...
தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம் , அரசு மருத்துவ வசதிகள் ,பொது விநியோக முறை போன்றவற்றை இந்நூல் பெரிதும் பாராட்டி முன்னோடி மாநிலம் என புகழ்கிறது .பக்கம் 73 முதல் 82 வரை வாசிக்கிறவர்களுக்கு பல உண்மைகள் புலப்படும் ; திராவிடம் சாதித்தது என்ன என்பவர்களுக்கு தக்க பதிலுமாகும்.
“பொது சேவைகளை அனைவருக்கும் சிறப்பாக வழங்குவதற்கான உறுதிப்பாட்டை தமிழ்நாடு எப்போது எப்படிப் பெற்றது என்ற கேள்வி எழுகிறது .1920 ல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல முன்னோடி சமூகசீர்திருத்த இயக்கங்கள் ,பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகள் பெற்றுள்ளாரசியல் அதிகாரம் ,கவர்ச்சிகர அரசியல் பிடிமானம் மற்றும் தமிழகத்தின் ஆக்கபூர்வமான பெண் அமைப்புகள் என்று பலதரப்பட்ட விளக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன . இவையோடு தமிழ்நாட்டு சமூகவரலாற்றின் பிற அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சமகால சாதனைகளோடு இவற்றிற்குள்ள தொடர்பு அனைத்தும் ஆய்வுக்கு உரியவை.விளக்கங்கள் பலதரப்பட்டவையாக இருப்பினும் அவையாவும் ஏதோ ஒரு வகையில் ஜனநாயக இயக்கத்தின் வலிமையை உணர்த்துவதில் ஒன்றுபடுகின்றன.”
“இந்தியாவின் பிற பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில் சுகாதாரம் அல்லது ஆரம்பக் கல்வி மற்றும் குழந்தை ஊட்டசத்து போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவும் அரசியல் தளத்தில் பேசப்படுவதில்லை . மாறாக மதிய உணவு போன்ற சமூகப் பிரச்சனைகள் தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ந்து பங்காற்றுகின்றன.”
Hill Tribe Children Learning to Care and Accept Responsibi… | Flickr
தமிழகத்தில் காங்கிரசோ ,பிற தேசிய கட்சிகளோ நெருங்க முடியாத அளவு திமுக /அதிமுக கட்சிகளும் ஆட்சிகளும் தொடர்வதில் மக்கள் நலத் திட்டங்களின் பங்கு பெரிதாகும் . இதன் பொருள் திராவிட ஆட்சி குற்றம் குறையற்றது என்பதோ, எல்லாவற்றையும் சாதித்து விட்டதோ என்பதல்ல . விமர்சனங்கள் ,பலவீனங்கள் உண்டு ஆயினும் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதேயாகும் . இதைச் சொன்னால் எம் தோழர் சிலரே என்னோடு மாறுபடுவர் அது வேறு சங்கதி .ஆனால் மோடிஷாவின் அடிமைகளாகிப்போன எடப்பாடிகளால் இந்தப் பெருமைக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பது முக்கியம்.
இப்படி கல்வி ,சுகாதாரம் ,பொதுவிநியோகம் ,சத்துணவு ,மக்கள் நலத்திட்டங்கள் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பது பெருமையே . கேரளமும் இதேபோல் இவற்றில் சாதனை படைத்த மாநிலமே . புதுவை ,ஆந்திரம் ,தெலுங்கானா , கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களும் சிலபல வேறுபாடுகள் இருப்பினும் வட இந்திய மாநிலங்களைவிட பன்மடங்கு மேலானதே!குஜராத்தோ ,காவி மாநிலங்களோ எந்த வகையிலும் முன்மாதிரி அல்ல. வெறுமே ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூணே !
மக்கள் நலனை ,சமூகநீதியை முன்நிறுத்தி விவாதம் தொடர்வதே ஆரோக்கியமானது .மதம் ,சாதி ,இனம் என வெறிபிடித்தால் பேரழிவே !
– சுபொஅ. ( Su Po Agathiyalingam முகநூல் பதிவிலிருந்து.)
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *